செவ்வாய், 22 ஜூன், 2010

செம்மொழியான தமிழ்மொழியாம்.....

செம்மொழியான தமிழ் மொழியாம்.. என்ற செம்மொழி தமிழ் மாநாட்டிற்கான மைய நோக்க விளக்கப் பாடல் அனைவரும் கேட்டும் பார்த்தும் இருக்கலாம். தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்..

பிறப்பொக்கும் என்ற அய்யன் வள்ளுவனின் முதல் வரியுடன் தொடங்கும் இப்பாடலை கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, கெளதம் வாசுதேவ் மேனன் அதற்கு காட்சி வடிவம் கொடுத்து வெளிவந்துள்ளது..

ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்குள்ள பணிகளுக்கிடையில் எழுதுவது என்பதே பெரிய செயல். அதிலும் அகவை 86..இந்த வயதிலும் தொடர்ந்து படிப்பதும் எழுதுவதன்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சாதனைக்குரிய செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது..

இந்தப்பாடல் கலைஞரால் எழுதப்பட்டுள்ளது. பாடல் வெளியீட்டின் போது கலைஞர் குறிப்பிட்ட்து போல், தமிழின் பெருமை, சங்ககாலம்,இடைக்காலம்., என எல்லாவற்றையும் தொட்டு இணைத்து எழுதுவதென்பது கொஞ்சம் சிரம்மான பணிதான் .,அப்பணியை அகவை 86-லும் அழகாக செய்துள்ளார். பிறப்பொக்கும் என்ற வள்ளுவனின் வார்த்தைகளுடன் தொடங்கும் இப்பாடலில்,பின்னர் கணியனின் பெருமைமிகு “யாதும் ஊரே., யாவரும் கேளிர்..தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரிகளுடன், சிலம்பு, தொல்காப்பியம், வளையாபதி, மேகலை போன்றவற்றிற்கு மரியாதை செய்து ஆதி அந்தமில்லா தமிழ் மொழியை அழகு படுத்தி உள்ளார்.

கலைஞரின் மொழி ஆளுமையையும் அறிவுக்கூர்மையையும் அடி தொழ வணங்குகிறேன்..


ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய அன்புக்குரிய ஏ.ஆர்.ரகுமான் இசை வடிவம் கொடுத்துள்ளார். தமிழ் மொழி உலகளாவிய மொழி என்பதால், ஒரே விதமான இசைவடிவம் கொடுக்காமால், தமிழ் நாட்டுபுறம், தமிழ் இசை, கர்நாடக இசை,மேற்கத்திய இசை என பல தளங்களிலும் விரிந்து இப்பாடலுக்கு ஒரு புதிய வடிவம் அமைத்துக் கொடுத்துள்ள ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.. மூன்று தலைமுறையையும் பாட வைக்க முடிவெடுத்தோம் என்று மேடையில் சொன்னார் ரகுமான்..எங்களின் முதல் மரியாதைக்குரிய அய்யா டி.எம்.எஸ் அவர்களின் குரலோடு தொடங்கும் இப்பாடல் அடுத்த வரிகளிலேயே மூன்றாம் தலைமுறைக்கு நகர்ந்து விடுகிறது, இதில் இரண்டாம் தலைமுறைப் பாடகர்களான எஸ்.பி.பி, ஏசுதாஸ், எஸ்.ஜானகி சித்ரா, ஸ்வர்ணலதா, மனோ, ம்லேஷியா என எவரையுமே காணவில்லை.. ஒரு ஐந்து நிமிடப்பாடலில் எல்லோரையும் பாடவைக்க முடியாது என்பது நன்கு புரிகிறது..ஆனால் இரண்டாம் தலைமுறைப் பாடகர்கள் யாருமே இல்லை என்ற சின்ன ஆதங்கம்..வேறு ஒன்றுமில்லை.. செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற வரி அடிக்கடி வந்தாலும்.. கடைசியில் “நாக்க முக்க’ சின்னப்பொண்ணு குரலில் வரும் “ தமிம் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்’ என்ற வரிகள் தான் என் காதுகளில் நிரம்பி வழிகிறது...நாட்டுப்புற இசைக்கு பழகிய காதுகள்...

வாழ்த்துக்கள் ரகுமான்..புறநானுற்று வரிகளுக்கு ஒரு நவீனம் கொடுத்ததற்காக.. தமிழ் ஆர்வம் உள்ள இளைஞர்கள் செல்பேசியில் வைத்துக் கொள்ளலாம்..

ஒளிவடிவம் கொடுத்தவர் கெளதம் வாசுதேவ் மேனன். திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலில் ஏராளமான தமிழர்கள் உண்டு. இயக்குநர், எடிட்டர், விளம்பர வடிவமைப்பாளர் என் எல்லாத்துறைகளிலும் என்பது கலைஞருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..அப்படி இருக்கும் போது செம்மொழி தமிழுக்கான பாடலை ஒரு மலையாளியிடம் கொடுத்தது தான் கொஞ்சம் நெருடலைத் தருகிறது..தமிழின் சிறப்பு கெடாமல் ஒரு மலையாளியால் எடுக்க முடியுமா ? என்ற தேர்வில் கெளதம் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழ் எழுத்துக்களை எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைத் தான் காணச் சகிக்க முடியவில்லை.. அந்தக் காட்சி அமைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..மற்றபடி கெளதமிடம் ஒரு செய்முறை நேர்த்தி இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும்.. அது நன்கு இப்பாடலில் தெரிகிறது..


கலைஞர். ஏ.ஆர்.ரகுமான், கெளதம் மூவரும் இணைந்து தமிழன்னைக்கு அழகான தமிழ்ப் பாமாலை நெய்து கொடுத்துள்ளார்கள் ., செம்மொழி மாநாடு என்ற காரணத்தை முன்னிறுத்தி..நன்றியும் வாழ்த்துக்களும்..
நாளை கோவையில் தொடங்கும் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

பின் குறிப்பு: classical language என்பதற்கு செவ்வியல் மொழி என்பது தானே சரியான பதம்..செம்மொழி என்பது சரிதானா? தமிழ் படிக்காதவன் தவறு என்றால் மன்னிக்கவும்..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

ஞாயிறு, 13 ஜூன், 2010

உலக விளையாட்டுத் திருவிழா....கால்பந்தைக் கவனியுங்கள்

அமர்க்களமாக ஆரம்பமாகி உள்ளது உலக கோப்பைக்கான கால்பந்து போட்டிகள்..

இங்கிலாந்தின் காலணி நாடுகள் என்ற முறையில் அடிமைகளாக இருந்த இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் அனைத்து விளையாட்டு ரசிகர்களாலும் தலைசிறந்த விளையாட்டாக கால்பந்து மட்டுமே இன்றும் பார்க்க, ரசிக்கப்படுகிறது..

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா என்றால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மட்டுமே சொல்லலாம்..

கால்பந்து வரலாற்றில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடப்பது இதுவே முதல் முறை..32 நாடுகள் தகுதி பெற்று இத் திருவிழாவிற்கு தேர்வாகி உள்ளார்கள்.

யார் இறுதி சுற்றுக்குச் செல்வார்கள் என்று உலகெங்கும் ரசிகர்கள் பந்த்யம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேஸில், நெதர்லாந்து போன்ற நாடுகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக கால்பந்து வல்லுநர்கள் கூறுகிறார்கள்..போகப் போகத் தெரியும்..

மேலே சொன்ன அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செயதிகள் தான்..
நான் சொல்லப்போவது இதுவல்ல...


விளையாட்டு வகைகளில் சேர்க்க கொஞ்சமும் தகுதி இல்லாத, தமிழ் திரைப்பட வரிசைகளில், ஒரு action thriller என்ற வகைகளில் மட்டுமே சேர்த்துக் கொள்ள தகுதி பெற்ற கிரிக்கெட் என்ற பொழுது போக்கு ஆட்டத்தை ஒரு மாத காலம் தள்ளி வைத்து, தமிழ் ரசிகர்கள் கால்பந்தைக் கவனிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்..


விநாடிக்கு விநாடி இடம் மாறும் அந்த கால்பந்தை கவனியுங்கள்.. வீரர்களின் கால்கள் செய்யும் அந்த மந்திர வித்தையை அனுபவித்து பாருங்கள்.. நரம்புகள் தெறிக்க உடலெஙகும் கொட்டும் வியர்வைக்கும், ஒவ்வொரு விநாடிக்கும் மதிப்பளிக்கும் ஒரு விளையாட்டு கால்பந்து என்று உங்களுக்கே தெரிய வரும்.... குழு மனப்பான்மையுடன் விளையாடும் அந்த வீரர்களின் அந்த ஒத்திசைவை உற்று நோக்குங்கள்..பந்து கோல் கம்பைத் தொடப்போகும் ஒவ்வொரு நிமிடமும் இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் தர முடியும்..

கால்பந்து விளையாட்டை பாருங்கள்..விளையாட்டு என்பதற்கு உண்மையான அர்த்தம் உங்களுக்கே தெரியவரும்..

அனுபவியுங்கள்..அர்த்தமுடன் உங்கள் மணித்துளிகளை செலவிடுங்கள் என்ற அன்பான வேண்டுகோளுடன்..
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

வெள்ளி, 4 ஜூன், 2010

தலைமகன் கலைஞருக்கு ஒரு தொண்டனின் வாழ்த்து

ஆச்சர்யமாக இருக்கிறது..

பள்ளிப்படிப்பை பாதியில் முடித்த ஒருவருக்கு, எப்படி அனைத்து ஆற்றல்களும் சேர்ந்தன என..

எம் தாய் மொழியான தமிழுக்கு இப்படி ஒரு வீரியம் உள்ளது என்பதை அறிந்து கொண்டோம்.. 27 வயதில் நீங்கள் எழுதிய பராசக்தி திரைப்பட வசனங்களை கேட்ட பொழுது...

1971-ல் பொதுத் தேர்தலின் போது தங்களை சிவகஙகை சண்முகராசா கலையரங்கில் பார்த்த்தில் இருந்து தொடர்கிறது இந்த ஆச்சர்யம்..

1972-ல் எம்.ஜி.ஆரை வெளியேற்றிய போது., தி.மு.க..அழிந்துவிட்ட்து என்று நானும் தான் அந்த அறியாத வயதில் நினைத்தேன்..ஆனால் எதற்கும் கலங்கா ஆலமரமாக நீங்கள் மட்டுமே..

1975-ல் தி.மு.க அரசு முதன்முதலாக கலைக்கப்பட்ட பொழுதும், அதைத் தொடர்ந்து, இரண்டாவது விடுதலைக்கான போராட்ட்த்தின் தளகர்த்தராக நீஙகள் ஆற்றிய பணிகளை கண்ட பொழுதும்..

அவசரகால நெருக்கடிகளின் போது, பத்திரிக்கைகள் கடும் தணிக்கைக்கு உள்ளான பொழுது..தன்னந்தனியாக அண்ணா சாலையில், முரசொலி விற்ற செய்தி கேள்விப்பட்ட பொழுது..

அதே காலகட்டத்தில், அனைத்து தோழர்களும் சிறைச்சாலையில் இருந்த பொழுது, தமிழகமெங்கும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, திராவிட இயக்கச் சுடரை அணையாமல் காத்த்தை நினைத்து..

பதவிகளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு ஒவ்வொருவராக வெளியேறியபோதும்.. கலங்காமல் 13 வருடங்கள் கழகத்தை கட்டி காத்த அந்த தலைமைப் பண்பை நினைத்து

பதவியில் இருக்கும் போதெல்லாம்..பிறந்த நாள் தோறும்..

கண்ணொளி வழங்கும் திட்டம்..
கை ரிக்‌ஷா ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கியது
பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்..
அன்று தொடங்கி,
இன்று
தான் முதன்முதலாக 1955-ல் சென்னையில் வாங்கி, இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் தனது இல்லத்தை, மருத்துவமனையாக மாற்றி எழுதியது வரை..

இன்று தமிழகம் மிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நீஙகள் அல்லவா..

5-ம் முறையாக நீங்கள் முதல்வராக பதவியேற்று, இதுவரை நீங்கள் செய்த சாதனைகளை , நீஙகளே முறியடித்து,
1ரூ-க்கு ஒரு கிலோ அரிசி..
108- அவசர அழைப்பு திட்டம்
கலைஞர் காப்பீடு திட்டம்..
100 கோடி மதிப்பில் அறிவுக்கிடங்காக மாறப்போகும் ஆசியாவிலே பெரிய நூலகம்..

இதுமட்டுமல்ல..

வரப்போகும் ஆண்டுகளில், குடிசையே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறப் போவதை நினைத்து..ஆச்சர்யம் தொடர்கிறது..


இன்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேலாண்மை வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கும் அனைத்து தத்துவங்களையும் .. பள்ளிக்குப் போகாமலே எப்படி கற்றீர்கள் என்ற ஆச்சர்யம்..

இந்தியா முழுதும் சுற்றி வந்தாலும், முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, கட்சித்தொண்டர்களுடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டே., ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நட்த்திக் கொண்டே..தினசரி படிப்பதும்.. எழுதுவமாக இருக்கும் ஒரு முதல்வரை காணக்கிடைப்பது ஆச்சர்யம்..

மாற்றுத்திறனாளிகளாக இருக்கட்டும், திருநங்கைகளாகட்டும் ., உடனடியாக சந்திக்க்க்கூடிய அளவில், மிக எளிமையான முதல்வராக இருப்பதை அறிந்து ஆச்சர்யம்..

தமிழக வரலாற்றில் அனைத்து திறனும் அமையப்பெற்ற உங்களைப் போன்ற ஆளுமை..
மொத்தத்தில நீங்கள் தமிழகத்திற்கு ஒரு பெருமிதம்..

வாழ்த்துக்கள்..

தாங்கள் அகவை 100 க்கும் மேல் காண விருப்பம் கொண்ட ஒரு

அன்பு உடன்பிறப்பு..
அ.வெற்றிவேல்.

வலைத்தலம் : http://avetrivel.blogspot.com
மின்னஞ்சல் : vetrisasi@yahoo.com

திங்கள், 17 மே, 2010

இதயத்தில் குருதி கசியும் கருப்பு தினம்

வருடம் ஒன்று ஓடோடிப் போனது..
25 வருடங்களாக கட்டிக்காத்து வந்த அனல் அனைந்து போன தினம்..
எனக்காக, என் மொழிக்காக, என் தமிழ் இனம் சுயமரியாதையுடன் வாழ, தனக்கென ஒரு நாடு உருவாகிவிடும்..நான் கண் மூடுவதற்குள் என்ற கனவு..கனவாய்ப்போன நாள்..
மே 17- நினைக்கும் போதெல்லாம் ரத்தம் கசியுது..
ஆதரவற்ற இனமா., தமிழ் இனம்..
என்ன சொல்லி என்னைத் தேற்ற..என்று எனக்குத் தெரியவில்லை..
ஆயிரக்கணக்கில் உயிரிழந்த என் இளம் தம்பிகளின் தியாகம் வீணா?
இந்த நாளில் உயிரிழந்த என் தமிழ்ச் சகோதர சகோதரிகளே..
இந்தக் கோழையை மன்னிக்கவும்..
இப்படிக்கு ..
புலம்ப மட்டுமே தெரிந்த ஒரு கோழை
அ.வெற்றிவேல்
17/05/2010
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தெய்வம் என்பதோர்... பேராசிரியர்.தொ.பரமசிவம்...

இந்தக் கட்டுரை இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து தொ.பரமசிவம் அவர்கள் எழுதியுள்ள “தெய்வம் என்பதோர் “ என்ற நூலை எடுத்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக புரட்டும் போதுதான் ..ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருப்பதாகப்படும்..ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நானே முடிவெடுத்துக் கொள்வேன்..இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன..


அதே மாதிரிதான்..தொ.பரமசிவம் அவர்களை பேராசிரியர் என்பதா ஆய்வாளர் என்று எழுதுவதா? என்ற குழப்பத்திலே நாட்கள் ஓடியதும் உண்டு..பேராசிரியர் அவர் பணி. ஆகவே அவரை பேராசிரியர் என்று அழைக்கலாம்தான். ஆனால் நான் நேரில் பார்த்துள்ள பேராசிரியர்கள் என் கண் முன்னர் வந்து போவார்கள்.அவ்வளவுதான் பேராசிரியர் என்று அவரை அழைத்து இழிவு படுத்த வேண்டாம் என்று முடிவெடுப்பேன்..அப்புறம் முனைவர் என்று எழுதலாம் என்றாலோ ஆய்வாளர் என்று எழுதலாம் என்றாலோ இந்த அடைமொழிகளுடன் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலோரை நினைத்து தொ.பரமசிவம் அவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன்., எந்த அடைமொழிகளுடன் அவரை அழைத்தாலும், யானையைப் பார்த்து கண் பார்வை இல்லாதவர்கள் சொன்ன கதையாகிப் போகும்.. அவருடைய ஆளுமையின் ஒரு பகுதிக்குத்தான் எந்த அடைமொழியும் பொருந்தும்.முழு ஆளுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல் தேவை..


ஏன் இவ்வளவு முன்னுரை? ஒரு சங்கை அளவாக வைத்துக்கொண்டு கடல் நீரை அளக்க முடியுமா?அந்தப் பயம் தான் எனக்குள்ளும்.. என் அறிவு சங்கு என்றால் அய்யாவின் அறிவு கடல்..

தேவநேயப்பாவாணர் அவர்களைப் பற்றிச் சொல்வார்கள்.தனி மனிதனாக இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணிகளை செய்தவர் என்று. அது மாதிரிதான்.. தொ.ப அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்திற்கு இணையானவர். அவருடைய பண்பாட்டு அசைவுகள் என்ற நூலுக்கு ஆ.இரா.வேங்கடசலபதி எழுதியுள்ளது போல் தொ.ப., அவர்களிடம் இருந்து தெறிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை..


2007 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள் பாளயங்கோட்டையில் அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் இருந்தேன்..அந்த மணித்துளிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இரண்டு மணி நேரத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் , ஒரு புதிய புத்தகம் போடும் அளவு இருந்த்து..மறுபடியும் சலபதி வார்த்தைகளையே கடன் வாங்கிக் கொள்கிறேன்..”நாம் நனகு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில், புதிய ஒளி பாய்ச்சுவதும், பயனற்ற ஒரு சொல் அல்லது ஒரு பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சொல்வதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை”


”தெய்வம் என்பதோர்” என்ற இந்தப் புத்தகத்தை புத்தகம் என்பதா? ஆய்வுக்கட்டுரை என்பதா? என்றே தெரியவில்லை..


அடிப்படையில் தொ.ப,.,அவர்கள் ஒரு பெரியாரியச் சிந்தனையாளர்.அவர் சிறு தெய்வஙகள் பற்றியும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றியும் எழுதுவதும் அதனை பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளோடு இணைக்கும் அவர் கண்ணோட்டம் தமிழக ஆய்வுலகில் மிகவும் புதியது மட்டுமின்றி மிக முக்கியமானது. தாய்த் தெய்வ வழிபாடு பற்றி மிக அருமையான மூன்று கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன..


”நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாடல் , ஒரளவு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களிடம் ‘சாமியாடி,குறுதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே விரிகிறது.இந்தக் கணிப்புகள் அனைத்துமே தவறானவையே..நாட்டார் தெய்வங்கள் தத்துவ விசாரங்களில் நொறுங்கிப்போகும் அளவுக்கு மெலிதானவையல்ல.. அவற்றின் வேர்கள் வலிமையானவை அவை வட்டாரத்தன்மையும் உயிர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டவை. இந்தப் பன்முகத்தன்மை எனபது சைவம், வைணவம்,ஸ்மார்த்தம், இஸ்லாம்,கிறித்துவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகும்”-பக்கம் .84

அய்யா தொ.ப., அவர்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் புதியது மட்டுமின்றி மேலும் விவாதத்தை வேண்டி நிற்பவை.சைவம், வைணவம்,இஸ்லாம், கிறிஸ்துவம் ., அனைத்தும் நிறுவனம் சார்ந்த மதஙகள் என்றும் ‘நிறுவனம் “ என்று வந்துவிட்டாலே ‘மேல்-கீழ்’என்ற வரிசை முறையுடன் தான் தமது அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன..ஆனால் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இந்த இலக்கணத்தில் இருந்து மாறுபட்டு நிற்கின்றன..


இந்தக்காரணத்தினால் தான் அதிகார மையமாகத் திகழந்த கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து வந்த தந்தை பெரியார்,, ஆண்டு முழுவதும் மண்மேடாக் கிடந்து ஆண்டில் ஒரு முறை தெய்வமாக உருப்பெரும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர் கொள்ளவில்லை..

இந்த முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழியில் தான தொ.ப., நமது சிந்தனையின் அனைத்து கதவுகளையும் சாளரங்களையும் திறந்து கொண்டே செல்கிறார்..


நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு நூல்களில் இருந்து ஆதாரம் திரட்டி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் ஆய்வாளர் அல்ல..தொ.ப.., கிணற்றடிகளில், கோயில் பிரவாகத்தில், தெருக்களில்,சாவு வீட்டு முற்றத்தில் , அங்கு கிடைக்கும் ஒப்பாரிகளில், கிராம சொலவடைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் என பல்வேறு களங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களோடு தனது ஆய்வுகளை முன் வைப்பது தான் தொ.ப., வின் அரிய பணியாகும்.


இன்னுமொரு முக்கியமான கட்டுரை..


”இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்ட்த்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும்,நம்பிக்கைகளையும்,வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...”


சமய நல்லிணக்கத்தின் ஆணிவேர் எது என்பது பெரியாரியவாதியான அய்யா தொ.ப., அவர்களுக்கு நன்கு தெரிகிறது என்பதால் தான் .. இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும் என்கிறார்..கோயிலுக்கு நுழைய முடியாத ஒரு கூட்டம், கருவறைக்குள் நுழைய முடியாத் ஒரு கூட்டம்..கருவறைக்குள் மட்டுமே இருக்கும் ஒரு கூட்டம் ..இதெல்லாம் சேர்ந்தது தான் ” இந்து” என்பது ஒரு பித்தலாட்டமாகவே தான் தெரிகிறது.


தமிழ் சமூகத்தின் மீது காதல் கொண்ட அனைவரும் அய்யாவின் எழுத்துக்களை தேடிப் படியுங்கள். கண்டிப்பாக ஒரு புதிய உலகம் புது தரிசனம் கிடைக்கும்..வாய்ப்பு கிடைத்தால் அய்யாவை நேரில் சந்தித்துப் பேசி ஒவ்வொரு மணித்துளிகளையும் அனுபவியுங்கள்..அவர் நிறைய எழுதவில்லை..ஆகவே அவரைப் பார்க்கச் செல்பவர்கள் ஒலிப்பதிவு கருவியடன் சென்று , பேச்சுப்போக்கில் தெறிக்கும் அனைத்து சங்கதிகளையும் சேமிக்கவும். மிக முக்கியமான சுவையான செய்திகள் உங்கள் தெருவிலே இருந்திருக்கும் ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்காது..அப்படி உள்ள செய்திகளாகச் சொல்லி புது வெளிச்சம் பாய்ச்சுவது தான் தொ.ப.,வின் உலகம்..

தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கேள்விகள் மட்டுமே என்னிடம்.. பதில்கள்...?

( நான் ரொம்ப படிக்காதவங்க.. ஆதித்தனார் காலம் தொட்டு இன்றுவரை,முடிந்த அளவு பாமரனுக்கும் புரியும் வகையில் செய்தி தரும் தினத்தந்திதான் நமக்கு ஆசான்.. இருந்தாலும் பாருங்க.. சில விஷயங்கள் எனக்கு புரியவதில்லை. அப்பப்ப கேள்வி வந்துருங்க.. தெரிஞ்சவங்க யாராவது பதில் சொன்னா நல்லா இருக்கும்..)


கேள்வி #1:
விலைவாசி குறைய நடத்தப்பட்ட அனைத்து முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பொருளாதார மேதை மன்மோகன் சிங், சில்லறை வியாபரத்தில் போட்டி இருந்தால் தான் விலைவாசி குறையும் என்பதால் வெளிநாட்டினர் சில்லறை வியாபாரத்தில் இறக்கிவிட உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். அம்பாசிடர் காருக்கு போட்டி என்றால் பரவாயில்லை.. அவரைக்காயையும் அரிசியையும் வெளிநாட்டுக்காரன் வந்து விற்றால் எப்படிங்க விலை குறையும்? எனக்குப் புரியலீங்க..இந்தப் பொருளாதார கணக்கு.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


கேள்வி #2:
பாதுகாப்பு ஆலோசகராக பதவி எடுத்துக் கொண்டு நிம்மதியா தூங்கிக் கொண்டிருந்த சிவசங்கர் மேனன், இலங்கையில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றுப் போன சரத் பொன்சேகா “தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடில் உயிரைப் பணயம் வைத்து உண்மையை வெளியிடுவேன் “ என்று அறிவித்த அடுத்த நொடியே மேனன் தமிழகம் வந்து கலைஞரைச் சந்தித்துவிட்டு எதுக்குங்க?.. அப்படி என்ன மலையாளி மேனன் தூக்கத்தை கெடுத்த ரகஸ்யம்? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


கேள்வி #3:
நூற்றுக்கு எண்பது விழுக்காடு பதிவர்கள் திரை உலகம் சம்பந்தமான விஷயத்திற்கு முக்கியம் கொடுப்பார்கள்..ஆனால் இரண்டு தினங்களாக நானும் பார்க்கிறேன்.. மலையாள நடிகன் ஜெயராம் என்ற கோமாளி தமிழக பெண்களை , அதுவும் வீட்டு வேலை பார்க்கும் அடிமட்டத் தொழிலாளியான வீட்டு வேலை பார்ப்பவரை “கருத்த எருமை போன்ற தமிழச்சி” என்று சொல்லியுள்ளான்.. அந்த்ச் செய்தி எந்தப் பதிவர்க்கும் கிடைக்கலயா? சுடச்சுட விமர்சனம் எழுதும் அனைத்து சினிமா ரசிகர்களான பதிவர்கள் ஒரு கண்டனச் செய்தி பதிவிட நேரமில்லாமல் அசல் பட டிக்கெட் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருக்கிறார்களா? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


கேள்வி#4:
பதிவர்களை விடுங்கள்.. தமிழ்ப் பெண்களின் காசில் கோடிகோடியாக சம்பாதிக்கும் தமிழ்த் திரை உலகின் சூப்பர்,சூப்ரிம், உலகம், தளபதி, கேப்டன் அல்டிமேட் என அலம்பல் பண்ணும் கோமாளிகள் என்ன பண்ணுகிறார்கள்? ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல்? அது சரி தமிழ்த் திரை உலகில் உண்மையான தமிழ் உணர்வுடன் ஒரு தமிழானாவது இருந்தால் தானே? “ஈ”க்கு இரும்புப் பட்டறையில் என்ன வேலை? மானத்திற்கும் இவன்களுக்கும் சம்பந்தம் இருக்குதாங்க.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க..


தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளையார்- பகுதி 2

‘சூப்பர் ஸ்டார் பிள்ளையார்’ என்ற என் முதல் கட்டுரை தவறாகப் புரிந்து கொள்ளபட்டுள்ளது என நினைக்கிறேன்.தமிழகத்திற்கு பிள்ளையார் வருகை, பிள்ளையாரை நம்பியுள்ள அரசியல் பற்றி எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. அதைப்பற்றி எழுதினால் அது முழுக்க முழுக்க அரசியல் என்பதும் அது குறித்து இணையத்தில் முன்னரே விவாதிக்கப் பட்டுள்ளது என்பதும் எனக்கு தெரியும். ஆனால் அது அல்ல.., எனது கட்டுரையின் விவாதப் பொருள்.
பிள்ளையார், அய்யப்பன், சிரிக்கும் புத்தர் சிலை, அக்ஷ்ய திரிதியை, கல்கி சாமி முதல் கார்பரேட் சாமி என எல்லாவற்றையும் தமிழர்கள் வாங்கிக் கொள்ளும் மனநிலை குறித்து மட்டுமே எனது கட்டுரை.

மகாராஷ்டிராவில் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலம் தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்..ஒரிசாவிலோ வங்காளத்திலோ பீகாரிலோ இல்லாத பிள்ளையார் ஊர்வலம் என்ற அரசியல் இங்கு மட்டும் வெற்றிகரமான வியாபாரமாக மாறியது ஏன்..அந்த மாநிலங்களில் இந்துக்கள் இல்லையா? அக்ஷ்ய திரியதை என்றால் இந்தியா முழுதும் தானே., தமிழக மக்கள் மட்டும் ஏன் அன்று மட்டும் 1 கோடிக்கு போட்டி போட்டுக்கொண்டு தங்கம் வாங்க வேண்டும்.எவனோ சொன்னால் அது உண்மை என்று நம்பி வீடு தோறும் சிரிக்கும் புத்தர் சிலை வாங்கி வைக்கவேண்டும்.வீட்டின் நடுக்கூடத்தில் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி , அதில் மலர்களை போட்டு வைத்து, வீட்டிற்கு அது நல்லது தரும் என்ற நம்பிக்கை ஏன் வந்தது? இது போன்ற கேள்விகள் தான் நான் கேட்க வந்தது..


சிறு வயதில் நான் ஒரு சைவச் சாமியாராகவே இருந்துள்ளேன்.. அப்பொழுது பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாது.எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதெல்லாம், தைப்பூசம்,பங்குனி உத்திரம்,சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம்,கந்த சஷ்டி,திருக்கார்த்திகை,மார்கழி திருப்பாவை தானே.. முருகனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட விழாக்கள் தானே தமிழர்கள் கொண்ட்டாடி வந்த்து? ..பிரதோஷம் எப்படி எங்கிருந்து வந்தது?சிவன் கோயிகளில் பிரதோஷத்தன்று உள்ளே நுழைய முடியாத அளவு கூட்டம்..


புதுப்புது நம்பிக்கைகள்! புதுப்புது கொள்கைகள்! அது குறித்து மட்டுமே எனது ஆதங்கம்.


அன்று முதல் இன்று வரை கர்நாடகா என்றால் நவராத்த்ரியும், கேரளா என்றால் ஓணம் , வங்காளம் என்றால் துர்கா பூஜையும் தத்தமது விழாக்களாக கொண்டாடிவரும் போது தமிழர்கள் மட்டும், தனக்கென ஒரு அடையாளம் வைத்துக் கொள்வதில்லை.தனது அடையாளங்களை தொடர்ந்து தொலைத்துக்கொண்டு இருப்பது ஏன் என்பது தான் எனது முந்தைய கட்டுரையின் அடிநாதமான கேள்வியே..

தமிழனின் பராம்பரிய திருவிழா “தமிழர் திருநாள்” என்றாலும் அதையும் தமிழர்கள் கொண்டாட விரும்புவதில்லை.வட இந்தியப்பண்டிகையான தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியம் கூட தமிழர் திருநாளுக்கு கொடுக்கப்படுவதில்லை. புதிதாக இப்பொழுது ஹோலிப் பண்டிகை பிரபலமாகிக்கொண்டு உள்ளது.


தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி தமிழர் திருநாள் கொண்டாடலாம் என்றால், அதற்கும் மதச்சாயம் பூசுகிறார் ஒரு இஸ்லாமிய அன்பர் இணையத்தில் எழுதிய ஒரு கட்டுரையில்.. பொங்கல் திருவிழாவில் இந்துக்கூறுகள் அதிகமாக இருப்பதால் , இஸ்லாமியர்கள் கொண்டாடுவதில்லை என.. அனைத்து மலையாளிகளும் முஸ்லீம் மலையாளிகள் உள்பட ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் போது, தமிழர்கள் அனைவரும் இணைந்து தமிழர் திருநாளைக் கொண்டாடலாம் தானே..


தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையில் இந்துக்கூறுகள் கலந்து விட்டதாக தாங்கள் கொண்டாடவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக சரியென்றே வைத்துக்கொண்டாலும், போன ஆண்டிலிருந்து தமிழக அரசு தமிழ்ப்புத்தாண்டாக அற்வித்துள்ளதே அதில் கலந்து கொண்டு தாம் தமிழர்கள் என்று உரிமையுடன் கொண்டாடலாமே.. ஸமஸ்கிருத ஆண்டின் பெயர் இருக்ககூடாது என்றும் எந்த சமய அடையாளங்களும் இருக்க கூடாது என்றுதானே திருவள்ளுவரை முன்னிருத்தி தமிழ்ப்புத்தாண்டாக , தமிழ்ச்சான்றோர்கள் ஒன்று கூடி தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிவித்துள்ளார்கள்.. அந்த நாளையாவது தமிழர்கள் ஒன்றுகூட ஒரு நல்ல வாய்ப்பாக பயன் படுத்தலாம் என்பது எனது அந்த இஸ்லாமிய நண்பருக்கு நான் விடுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்..


தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com