நண்பரின் கேள்விகள்..
அண்ணா....
இதுவரை அதிகம் முறை தி.மு.க வுக்கு வாக்களித்ததால் கேட்கிறேன்....
..2 லட்சம் நம் சொந்தங்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது... இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முகாம்களில்....
..ஒரு நாட்டின் 40 வருட ஆய்விற்க்குக் (மக்கள் ...வரி,உழைப்பு) கிடைத்த பலனான செயற்கைகோளில் 2g அலைக்கற்றையில் செய்த 176 ஆயிரம் கோடி ஊழல் மூலம் நடத்தப்பட்ட உழைப்புச்சுரண்டல்....
..சேது சமுத்திர திட்டத்தில் அடித்த 2500 கோடி (திட்டம் தோல்வி)....அடிக்கடி கொடூரமாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும் நம் மீனவர்கள்...
..மதுரையில் ஓரு 10க்கு 10 கடை போட்டாலே "கப்பத்துக்கு" வரும் அழகிரியின் ஆட்கள்... தென் மாவட்டம் முழுவதும் நடக்கும் அவரது "தனி" அரசாங்கம்....
85000 கோடிக்கு மேல் பெயர்த்தெடுக்கப்பட்ட கிரானைட் மலைகள் (அரசுடையது)
..4000 கோடிக்கு நம் வரிப்பணத்தில் "தொலக்காட்சி" கொடுத்துவிட்டு , வருடத்திற்கு 4500 கோடி கேபிள் இணைப்பில் சம்பாதிப்பது...
..காப்பீட்டுத்திட்டம் என்கிற பெயரில் star insurance மூலம் ஸ்டாலின் குடும்பத்துக்கு வருடத்திற்க்கு வரும் வருமானமானமாக சொல்லப்படும் 300கோடி...
அண்ணா இன்னும் சொல்ல எனக்குத்தெரிந்து 20 பக்கங்களுக்குமேல் இருக்கிறது....
"நல்லகண்ணு" "தமிழருவி மணியன்" போன்ற நல்லவர்களை தமிழ் நாட்டு மக்கள் நிறைய பேருக்குத் பெயர்கூட தெரியவில்லை... இந்த நிலையில்...
... மஞ்சள் துண்டு போட்டு பகுத்தறிவு பேசி "தம் மக்கள்" நலம் ஒன்றே குறிக்கோளாய் இருக்கும்.அதற்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் நம் தமிழினத்தலைவருக்கு ஓட்டு போட வேண்டுமா...?... உங்கள் மனசாட்சியோடு கூடிய பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நன்றி
முகநூலில் தம்பி அரவிந்த் யுவராஜ் என் குறிப்புக்கு, போன பதிவுக்கு போட்ட பின்னூட்டம் மேலே உள்ளவைகள்..
தம்பி அரவிந்த் யுவராஜ் போன்றவ படித்த சிந்திக்கத் தெரிந்தவர்கள், பெரு நகரங்களில் வசிக்கும் இன்றைய இளைய தலமுறையினர், இணையத்தில் அரசியல் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இலவசமும் ஊழலும் இந்த ஆட்சியின் சாபக்கேடாகத் தெரிகிறது..
எந்தவித பின்புலனும் இன்றி படிப்பு,உழைப்பு மட்டுமே மூலதனமாக்க் கொண்டு குடும்பம் விட்டு விலகி நாடுவிட்டு நாடுவந்து, பாலைவனத்தில் வெயிலிலும் குளிரிலும் தனியாக்க் கிடந்து கஷ்டப்படும் எனக்கு மட்டும் இருக்காதா? ஊழலற்ற நேர்மையான திறமையான அரசு தமிழகத்தில் இருக்க வேண்டும்..மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக பயனாளியைச் சென்று சேரவேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கும் உண்டு.நானும் உங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்.
தம்பி சீமானுக்கு நிகரான தமிழ் உணர்வு கொண்டவன் தான்.
ஆனால் நடைமுறைச் சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் இருக்க என் வயசும் நான் கற்றுக் கொண்ட குறைந்தபட்ச அரசியல் அறிவும் என்னை தி.மு.கவிற்கு ஆதரவாக எழுதவும் பேசவும் செய்கிறது.
நண்பர் எழுதியது போல் நல்லகண்ணு தமிழருவி மணியன் போன்ற நல்ல அரசியல்வாதிகள் திமுகவிற்கு மாற்றாக இத்தேர்தலில் நிற்கவில்லை. நல்லவர்கள் மட்டும் போதாது . வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். திமுகவிற்கு மாற்றாக முன்னிருத்தப்படுவது, அதிமுக என்ற கம்பேனியின் அடாவடித் தலைவி ஜெயலலிதா..அவருக்கு ஆலோசகர் ராஜகுரு சோ.. சோ நேர்மையானவர் என்பது மட்டும் போதுமானதா? சோ வின் ஆலோசனைகள் எப்படி தமிழருக்கும் தமிழினத்திற்கும் ஆதரவாக இருக்கும் இருக்க முடியும்.. 70களில் இருந்து இன்றுவரை சோ தமிழின விரோதியாகத் தானே நான் பார்த்து வருகிறேன்.அவர் அறிவுரையின் படித்தானே வைகோ அந்த முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார்..”சோ” கரப்பான்பூச்சி சுலபமாக அடித்துவிடலாம் என்று மற்றுமொரு பின்னூட்ட்த்தில் எழுதி இருக்கிறீர்கள். சரியான உதாரணம் தான். அணுகுண்டுக்கும் தப்பிக்கும் ஆற்றல் பெற்றதல்லவா கரப்பான்பூச்சி ..அதை எப்படி ஒழிக்க முடியும்?
மூன்று முக்கியமான குற்றச்சாடு திமுக அரசு மீது..
இலவசம், ஊழல், குடும்ப ஆதிக்கம்..
புதிதாக ஓட்டுரிமை பெற்ற படித்த இளைஞர்கள மற்றும் இணையத்தில் பெரும் நேரம் உலவுபவர்களுக்கு இலவசம் ஏதோ வேப்பங்காயாய் கசக்கிறது..இலவசம் இணையத்தில் கதை அளப்பவர்களுக்கு அல்ல என்று முன் பதிவுலேயே சொல்லியுள்ளேன்.. புரியாதவர்களுக்கு மற்றுமொரு உதாரணத்துடன்..
என் கூடப்பிறந்த தம்பியும் அவன் மனைவியும் சிவகங்கை பக்கத்தில் ஒரு கிராமத்தில் 24 மணி நேர மருத்துவமனை நட்த்துகிறார்கள். 2006 வரை அங்கு நாள் தோறும் நடத்தப்பட்ட பிரசவங்கள் குறைந்த்து 10 முதல் 15.. இன்று ஒன்று கூட இல்லை.. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் பிரசவம் பார்க்கிறார்கள்.இங்கு கவனிக்க வேண்டியது என் தம்பியின் ஒரு நாள் வருமான இழப்பல்ல.. அந்தக் கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையம் இத்தனை பிரசவஙக்ளை பார்க்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது..
என் சொந்த ஊரில் பெயர் பெற்ற மெட்ரிகுலேஷ்ன் பள்ளி தன் தர வரிசையில் இருந்து இறங்கிவிட்டது..காரணம் முக்கியமான திறமையான ஆசிரியர்கள் எல்லோரும் எந்தவித கையூட்டும் கொடுக்காமல் அரசுப் பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்கள்.இதுவரை மெட்ரிக் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்றவர்கள் முறைப்படியான ஊதியம் பெறுகிறார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தானாதால் மட்டும் கிராமப்புற இளைஞர்கள் 54000 பேர் பொறியியல் கல்லூரியில் நுழைந்துள்ளார்கள்.
பள்ளிகல்வித் துறையில் மகத்தான சாதனை இந்த 5 வருட்த்தில் நடைபெற்றுள்ளது.. நிகழ்காலத்தில் மட்டுமே குடியிருக்கும் நண்பர்களால் இந்தச் சாதனையை அங்கீகரிக்க முடியாது .ஏனென்றால் இதன் பலன் இன்று தெரியாது என்பது தான்
இதுமாதிரி என்னால் ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்..அடுத்து ஊழல்..
ஊழல் என்பது இந்தியாவின், தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட்து என்பது வேதனைதான்..ஆனால் உங்களால் ஜெ.அரசு ஊழலற்ற அரசாக இருக்கும் என்று உத்தரவாதம் மனசாட்சியுடன் கொடுக்க முடியுமா? அளவுகளில் வித்தியாசப்படலாம்.. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி அமையுமா ஜெ.அரசால்? டான்சி ஊழலில் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என்று சொல்லக்கூடியவர். கொள்ளையைடிக்க என்றே இல்லாத ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவரிடம் எப்படி ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்? தொகுதிப் பங்கீடே வெளிப்படையாக நடைபெறவில்லை.. போயஸ் தோட்டத்தில் தனி நபராக முடிவெடுத்து, இத்தனை இடங்கள் உனக்கு என்று எழுதி தோட்டத்திற்கு வெளியில் போட்டு அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு கிளம்பியவ்ர்கள் தான் நம் தோழர்கள். அதிகமாக தமிழ் தமிழ் என்று பேசியதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனவர்தான் வைகோ.
தென்னிந்தியாவிலேயே பெரிய பணக்காரக் குடும்பம் கலைஞருடையது என்றும் ஒரு குற்றச்சாட்டு.. சன் தொலைக்காட்சி ஆரம்பித்தது , அது தென்னிந்தியாவில் முதல்தர தொலைக்காட்சி நிறுவனமாக உருவெடுத்த்து எல்லாம் கலைஞர் ஆட்சிக் கட்டிலில் இல்லாத 1992- 96 வரை. அதன் பின் அதன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அதற்கு என்ன செய்ய முடியும்? அதே சமயம் ஆரம்பித்த ஜே.ஜே தொலைக்காட்சி திறம்பட செயல்பட்டு இருந்தால் அதுவும் தான் இந்நேரம் பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கும்.. பெரிய தொழில் முதலைகளாக டாடாவையும் பிர்லாவையும் பின்னால் உருவாகிய அம்பானியையும் பார்த்த கண்ணுக்கு திருவாரூர் குடும்பம் பெரிய அளவில் கண்ணை உறுத்துவதற்கு என்னசெய்ய முடியும்?
இதுவரை எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மதுரை டெல்லிக்கு அனுப்பியுள்ளது.. ஆனால் அழகிரியால்தான் மதுரையைச் சுற்றி சில தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. பன்னாட்டு விமான நிலையமாக மதுரை மாற வேண்டுமென்றால் , தொடங்கியுள்ள பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிலையம், ஐ.டி பார்க் நன்கு செயல் பட வேண்டுமென்றால் நான் அழகிரியை ஆதரிக்கத் தான் செய்வேன்.மூடி இருந்த ஸ்பிக் மறுபடி இயங்க ஆரம்பித்துள்ளது அழகிரியால் தான்..
இணைய எழுத்தாளர்களின், ஊடகங்களின் திமுகவின் எதிர்மறைப் பிரச்சாரம் தங்கள் சிந்தனையை தடுமாற வைத்துள்ளது.இல்லை என்றால் சேது சமுத்திர திட்டம் நின்றதற்கு திமுகவை குறை கூறலாமா. ராமர் பாலம் என்று குறைகூறி அவர்கள் கும்பல் தானே நீதிமன்றம் படியேறி தடைவாங்கியவர்கள்.
மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளை வெட்டி எடுப்பவர் அதிமுக தலமைக்குத் தான் மிகவும் நெருக்கமானவர்
நியாயமான தமிழ் உணர்வைக்கூட ஏதோ தேசத்துரோகமாகப் பார்க்கும் சோ, ஜெ. கும்பலுக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள் வாக்கு கேட்டு வருவது ஆச்சர்யமாக இருக்கிறது தேர்தலுக்கு முன்னரே வைகோவை வெளியேற்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஜெ.வை எப்படி இவர்கள் ஆதரிக்கிறார்கள். போன ஜெ.ஆட்சியில் வைகோ.நெடுமாறன்,சுப.வீ போன்றவ்ர்களுக்கு நேர்ந்த்து தான் இவர்களுக்கும் என்பது கூடவா இவர்கள் அரசியல் அறிவுக்கு எட்டவில்லை.. பிரபாகரனை பிடித்து வந்து ஒப்படைக்க வேண்டும்,போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொன்னவர் ஜெ. ஆரம்பத்தில் திமுக காங்கிரஸை கழட்டிவிட்த் தயாரான சமயம் , திமுகவிற்குப் பதிலாக காங்கிரஸ் கோட்டையில் நுழையத் தயாரானவர் தான் ஜெ. மற்றவர்,மிகுந்த ராஜதந்திரமாக நினைத்துக் கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டு சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸை பற்றி ஒரு கேள்வி கேட்காதவர் தான் கருப்பு எம்ஜிஆர் குடிகாரக் குப்பன் அண்ணன் விஜயகாந்த். இவர்களுக்கு தமிழ் ஆதரவாளர்கள் ஆதரவு.. நான் எப்படி ஆதரிக்க முடியும்?
இது ஜீவாவின் காலமல்ல.. அரசுப் பொறுப்பு வேண்டாமென்ற பெரியாரின் காலமுமல்ல.. கண்ணியமிக்க காமராஜ் காலமல்ல..அரசுப் பொறுப்புக்கு வருவதே சம்பாதிக்க என்ற நிலையில் வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் யாரால் நிறைவேற்றப் படுதோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.. ஊழலற்ற ஒருவரை அழைத்துவர வேண்டும் என்றால் நாம் எங்கு போவது?சுருக்கமாக ஒன்று
ஊழல்+ அதிகார போதை தரும அடாவடித்தனம் + நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்காத சண்டைக்கோழி ஒரு பக்கம்
ஊழல் +அதிகாரம்+ வளர்ச்சித் திட்டங்கள் + மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் இது ஒரு புறம்
இந்த இரண்டில் தாங்கள் எதைத் தெரிந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்..
நின்று போன பெரம்பூர் மேம்பாலமே 5 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் திமுக ஆட்சி மறுபடி வந்து தான் அதனை முடித்தார்கள்.
அடுத்த ஐந்தாண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதற்காகவது ஆதரவளிக்க வேண்டாமா?
கிராமப்புற மாணவர்கள், தாய்மார்கள் பயனடைய வேண்டுமா?
இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக விற்கு வாக்களியுங்கள்.திமுகவிற்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
வெற்றிவேல்..
பின்குறிப்பு: காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டால் அதிகம் சந்தோசப்படுவேன்.. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸில் புதிதாக உருவாகியுள்ள ராகுல் கோஷ்டியான இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பிணைத்தொகை இழந்தால் இந்தத் தேர்தல் முடிவுகளில் உச்சபட்ச சந்தோசம அதுவாகவே இருக்கும்