தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தி.மு.கவிற்கு வாக்களியுங்கள்….

2005 க்குப் பிறகு இணையம் அதிக பயன்பாட்டுக்கு வந்தபிறகு வெளிவரும் கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் அதிக வேறுபாடு இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை.. ஏனென்றால் இணையம், ஃபேஸ்புக் போன்ற பொதுத்தளங்களைப் பயன்படுத்துவோரில் எத்தனை விழுக்காடு வாக்களிக்கச் செல்கிறார்கள் என்ற கணக்கு இன்னும் வெளிவராத சூழலில் இவர்கள் கட்டியெழுப்பும் கற்பனைகள் நிஜத்தில் பொடிப்பொடியாவதற்கு கடந்த இரண்டு தேர்தல் முடிவுகளே சாட்சிகள்.

அகில இந்திய செய்தி நிறுவனங்களும் தினமலர், துக்ளக் போன்ற தமிழ் இதழ்களும் என்றுமே தி.மு.க வை ஆதரித்தது இல்லை..ஆனந்தவிகடன் அவசரமாக அவசரமாக அமைச்சர்களின் சொத்துக்கணக்கை வெளியிட்டிருப்பதில் உள்நோக்கம் இருக்கலாம் என்று கருதுகிறேன். ஜெ.வோடு வைகோவின் ஊடல் முடிவுக்கு வந்ததாக ஒரு பொய்யான செய்தியை முன்பக்கத்தில் பிரசுரித்துவிட்டு பின்பக்கத்தில் ஏப்ரல்-1 முட்டாள் தினச்செய்தி என்று வெளியிட்டு தினமலர் தன் ஆசையைக் காண்பித்து முடிந்தவரை தொண்டர்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. இதெல்லாம் எந்த நாகரீகத்தில் சேர்க்கலாம் எனத் தெரியவில்லை.

இன்று இணையம் வழி செய்திகள் படிப்பவருக்கு, வலைத்தளம், மற்றும் ஃபேஸ்புக் போன்ற பொதுத் தளம் செல்பவர்களுக்கு அதிமுக ஆட்சிக்கட்டிலுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றத்தை உண்டுபண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் இத்தகைய பொதுத்தளங்களில் உயிர்வாழும் நம் அறிவுஜீவி நண்பர்கள்..

இன்று இவர்கள் தி.மு.கவின் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டான இலவசம் கொடுத்து கெடுத்துவிட்டார்கள் ..எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்று கெடுத்துவிட்டார்கள் என்ற ஒயாத கூச்சல் போட்டவர்கள் நடுநிலை வேடம் போட்டவர்கள் ,இன்று அம்மையார் இலவசங்களை அள்ளித்தெளித்ததும் அது குறித்து அடக்கி வாசிப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அதே மாதிரி இன்னொரு முக்கிய குற்றச்சாட்டு தமிழகத்தை மின்வெட்டால் இருண்ட மாநிலமாக மாற்றிவிட்டதாக..மின்வெட்டு என்பது ஒரே நாளில் தீர்க்க கூடிய பிரச்னையல்ல என்று தெரியாதவர்கள் இவர்கள் இல்லை.. 2001-2006 முதல் ஆட்சியில் இருந்தும் தொலைநோக்கோடு அதற்கான திட்டங்கள் வகுக்காதவர்கள் மீது இவர்கள் கோபம் பாயாமல் தி.மு.கவின் மீது மட்டும் பாய்வது ஆச்சர்யமாக இருக்கிறது..

சரி.. தொடங்கிய பிரச்னைக்கு வருவோம்..




இந்தப் பக்கத்தில் இடப்பட்டுள்ள படம் தினமலரில் கடந்த 10 நாட்களுக்குள் வெளிவந்த புகைப்படம். ஒரு ரூபாய் அரிசிக்காக காலையில் ஆறு மணி முதல் உட்கார்ந்து இருக்கும் இது போன்ற பொதுமக்களுக்குத்தான் இலவசமே தவிர.. இணையத்தில் இருந்து கொண்டு கதை அளப்பவர்களுக்கு அல்ல..

இலவசம் இலவசம் என்று கூப்பாடு போடுகிறார்களே.. இலவசபடிப்பு,புத்தகம், மதிய உணவு,சைக்கிள் போன்றவைகள் தமிழகத்தில் கல்வியை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது இவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் மெட்ரிக்குலேஷன் கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் இவர்கள். இங்கு தொழில் நடத்திச் சம்பாதிக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மைய அரசு வழங்கும் வரிச்சலுகையில் 5 விழுக்காடு கூட இருக்காது இந்த ஏழை எளியோருக்கு வழங்கப்படும் இலவசங்கள்..

இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால்,அது தரும் வேலை வாய்ப்புகளில் இருந்து கொண்டு, நாகூசாமல் தி.மு.க ஆட்சியினை விமர்சனம் செய்பவர்கள் யாருக்காவது தெரியுமா உண்மை நிலவரம்.. 1991-96 வரை மகாமகக் குளத்தில் நீராடல், வளர்ப்பு மகனின் திருமணம், ஊரெங்கும் மன்னார்குடி வகையறா வாங்கிச் செழிக்க இருந்த தமிழக ஜெ.அரசு தகவல் தொழில்நுட்பத் துறையை கண்டுகொள்ளவில்லை.. அதன்பின்னர் 96-ல் வந்த கலைஞர் ஆட்சியில் தான் முதன் முத்லாக தகவல் தொழில்நுட்பக் கொள்கை வெளியிட்டு, டைடல் பார்க் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்து . தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கியமாநிலமாக மாற்றியது அனறைய தி.மு.க அரசு. அமரர் முரசொலி மாறனுக்கு நன்றி சொல்ல வேண்டும் தமிழக மக்கள்.அடுத்துவந்த ஜெ.அரசு அதை குளறுபடி பண்ணவில்லை என்பது தான் ஒரே ஆறுதல். அம்மையார் தான் அரசு ஊழியர்களோடு நீயா நானா? என வீண் சண்டையில் தன் காலத்தை கழித்தவர் ஆச்சே.. அன்று கொஞ்சம் விழித்து சில மின் திட்டங்களை கொண்டு வந்து இருந்தால் இந்நேரம் தமிழகம் மின் தடையால் இருண்ட மாநிலமாக இருந்திருக்க முடியாது.

தற்பொழுது நடந்து முடிந்துள்ள தி.மு.க அரசு பல புதிய மின்திட்டங்களை துவக்கியுள்ளது .அதன்பலன் 2012-ல் நாம் மின்சாரத்தில் தன்னிறைவான மாநிலமாக இருக்கும் . என்னென்ன திட்டங்கள் எதுவென்பதை தம்பி லக்கி யுவகிருஷ்ணா தன் தளத்தில் விரிவாக எழுதியுள்ளார். அதன் சுட்டி.. http://www.luckylookonline.com/2011/04/blog-post.html

நான் தி.மு.க ஆதரவாளன் தான் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவையோ கலைஞருக்கு மாற்றாக எந்தவொரு அரசியல் தலைவரையும் என்னால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க இயலவில்லைதான்.நான் மாற்றாக நினைத்த வைகோவின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

ஆனால் இது மட்டுமல்ல திமுகவிற்கு ஆதரவு வேண்டுவதற்கு..

இன்றும் தமிழக அரசியல் கட்சிகளில் திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு கொஞ்சமாவது இடம் தரக்கூடியது..பெரியாரின் பல்வேறு கனவுகளை அரசுச் சட்டமாக்கியது.. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள ஒரே கட்சி தி.மு.கதான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தலமையின் கருத்தாகவே இருக்கட்டும்.. அதையும் பொதுக்குழு கூடி அனவைருடன் கலந்தாலோசித்து , அனவரையும் ஒத்துக் கொள்ளவைக்கும் ஜனநாயத்தன்மையுடன் நடக்கும் ஒரே கட்சி திமுக தான்.

நடு நிலையோடு ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. தலைநகர் சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் ஆரம்பித்து கன்யாகுமரி வரைக்கும், சென்னை-கோவை, சென்னை-பெங்களூரு என்று எந்தத் திசையை யோசித்து பார்த்தாலும் விரிந்த சாலை பாலங்கள் என கட்டமைப்பு வசதிகள் தந்த்து திமுக அரசு அல்லவா?

91-96, 2001-06 பத்தாண்டுகள் ஜெ.வின் ஆட்சியில் ஏதாவது கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டனவா?

பள்ளிக் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற மிக மிக அத்தியாவசமான துறைகளில் கடந்த 5 ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மாபெரும் புரட்சி எனலாம். அதுவும் தங்கம் தென்னரசு அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் எதிர்கட்சியாலும் குற்றம் சொல்ல முடியாதவைகள். பொறியியல், மருத்துவம் போன்றவற்றிற்கு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வை ரத்து செய்ததின் மூலம் இக்கல்லூரிகளில் கிராம மாணவர்களின் சேர்க்கை அதிகமாகி உள்ளது என்பது புள்ளிவிவரம்.

3.5 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியான அரசு வேலைகள் மட்டுமின்றி கல்லூரி பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுள்ளன. மருத்துவத்துறையில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றோர் ஆயிரக்கணக்கில்..

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் , 108 அவரச அழைப்பு,குடிசை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாறும் திட்டம் என்று மக்கள் நலப்பணிகள் ஏராளம் இந்த ஆட்சியில்.மக்கள் நலப்பணிகள் ஏராளம் கடந்த 5 வருடங்களில் நடந்துள்ளன..

இவற்றிற்கு மாறாக….

ஜெ. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் யாரெல்லாம் தமிழ் தமிழ் என்று சொல்கிறார்களோ அவர்கள் மேல் எல்லாம் பொடா தடா என்று ஊரிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அலையவிடுவது வழக்கம். தன் அகம்பாவத்தின் எல்லையாக அரசு ஊழியர்களோடு நீயா நானா என்று தேவையில்லாத போட்டி.சட்டம் ஒழுங்கு மிகவும் அற்புதமாக பராமரிக்கப்பட்ட இவரது ஆட்சியில் தான் பிடிக்காதவர் வீடெங்கும் கஞ்சா இருந்தது. இப்படி தேவையில்லாதவைகளில் அதிகம் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் கவனம் செலுத்தி தமிழக நலனில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத ஒரு அரசு தான் ஜெ.ஆட்சி.

வைகோவிடம் கேளுங்கள்…அவர் சொல்லுவார் ஜெ மாறவில்லை ஜெ.வின் ஆணவமும் மாறவில்லை என..

இவைகளை நடு நிலையோடு எண்ணிப்பார்த்து, தி.மு.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லீம் லீக். கொங்குநாடு முன்னேற்றக்கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க ஆட்சியினைக் மீண்டும் கொண்டுவர வேண்டுகிறேன். உண்மையிலேயே தமிழக நலனில் அக்கறை இருந்தால் செய்யுங்கள்.

பின்குறிப்பு: காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டால் அதிகம் சந்தோசப்படுவேன்.. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸில் புதிதாக உருவாகியுள்ள ராகுல் கோஷ்டியான இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பிணைத்தொகை இழந்தால் இந்தத் தேர்தல் முடிவுகளில் உச்சபட்ச சந்தோசம அதுவாகவே இருக்கும்.


அன்புடன்
அ.வெற்றிவேல்
arunachalam.vetrivel@gmail.com