சபாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சபாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 செப்டம்பர், 2010

இசை அரசியல்..ஷாஜியின் கட்டுரைகளை முன்வைத்து

70 களின் ஆரம்பத்தில் இந்திய அரசியல் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு அப்பொழுது சோ ஆரம்பித்த துக்ளக் மட்டுமே.. அப்பொழுது வந்து கொண்டிருந்த அனைத்து தின இதழ்களும் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதாகவோ அல்லது ஆதரித்தோதான் இருக்கும். மேலும் நடுநிலையாக நான் நினைத்து நான் மிகவும் விரும்பி வாசித்த மாதமிருமுறை இதழ் துக்ளக்.. சோ அவர்கள் மிகவும் நடுநிலை வகிப்பதாகவும், மிகுந்த தைரியத்துடன் தனது கருத்துக்களை எடுத்து வைப்பதாகவும் நான் நினைத்துக் கொண்டு துக்ளக்கின் நிரந்தர வாசகனாகவும், சோவின் ஆதரவாளராகவும் மாறிப்போனேன்..


ஆனால் சோ அவர்கள் தனக்கும் தான் சார்ந்த சாதிக்கும் இந்துத்வாவிற்க்கும் மட்டுமே உண்மையானவராக இருப்பதை மிகத் தாமதாமாக உணர்ந்தேன். அதற்கு காரணம் தமிழகம் தாண்டி இந்திய அரசியல் பற்றி அன்றைக்கு பேசியது சோ மட்டும்தான்..பின்னாளில் வேறு சில பத்திரிக்கைகளின் அறிமுகம் கிடைத்த போது தான் சோவின் உண்மை எத்தகையது..அவர் எழுதும் அனைத்தும் தமிழ்ச் சமூகம், மனித உரிமைப் போராளிகளுக்கு எதிரானது என்று தெரிந்து கொண்டேன்..


உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்., சோ அவர்கள் தனது எல்லா கார்ட்டூன்களிலும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி யை ஒரு காமெடியனாகவே காண்பித்து அந்த மனநிலையிலேயே நான் ம.பொ.சியை அணுகினேன். பின்னாளில் தான் தெரிந்தது..ம.பொ.சி என்ற மனிதர் இல்லை என்றால், திருத்தணி நமக்கு இல்லை என்பதும், அவர் தமிழ்ப் போராளி என்பதும்.. அவருக்கு மட்டும் அன்று போதிய ஆதரவு இருந்து இருந்தால். முல்லைப்பெரியாரையும் மீட்டு இருப்பார் என்பதும் நிதர்சனமான உண்மை.. துக்ளக்கில் வந்த கருத்துப் படங்கள் அனைத்திலும், அவரை காமெடியனாகவே அவர் இறக்கும் வரை, சித்தரித்து இருப்பார்.


இதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு தமிழினப் போராளி.. தமிழரசுக் கழகம் என்ற கட்சி வைத்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கியவர்.. அதே சமயம் இன்றைய ஜெயல்லிதாவிற்கு முன்னோடியான, தியாகம் என்றால் என்னெவென்றே தெரியாத, பதவி ஒன்றையே ஒரே லட்சியமாக வைத்து , அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று புதுஅகராதி உருவாக்கி வைத்த ராஜாஜியை தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டே இருந்தவர் , இன்றும் இருப்பவர் சோ. இப்படி தான் விரும்பிய ஒரு கருத்துருவாக்கத்தை கட்டமைத்ததில் சோவும் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம்..


இசை அரசியல் என்று தலைப்பு வைத்துவிட்டு இசை பற்றிப் பேசாமல் , அரசியல் பற்றி பேசுவது ஏன் என்ற குழப்பம் இருக்கலாம்..இன்று இசை உலகில் நடப்பதற்கும் இதற்கும் பெரிதும் தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன்.


இன்றைய தமிழ்ச் சூழலில், இசை பற்றி வெளிவரும் விமர்சனங்கள் எனக்கு 1970 யை ஞாபகப்படுத்துகின்றன.. உண்மையிலேயெ இசை ஞானமுள்ளவர்களின் விமர்சன எழுத்துக்கள் பரவலாக வெளிவரவில்லை. எனக்கு விபரம் அறிந்த நாளில் இருந்து இசை பற்றி அவ்வப்போது எழுதிய சுப்புடு கூட ஒரு துணுக்கு எழுத்தாளர் என்ற நிலையைத் தாண்டி வரவில்லை..


இன்று இசை பற்றி ஒரு அறிவார்ந்த தளத்தில் எழுதுபவராக நான் நினைத்து விரும்பிப் பின்பற்றி படித்தது ஷாஜியோட கட்டுரைகளைத்தான்.. அவருக்கும் சோவிற்கும் அதிக வித்தியாசம் இல்லையோ என அவருடைய தற்போதைய கட்டுரைகள் என்னை சிந்திக்க வைக்கிறது.. புது கருத்துருவாக்கம் என்ற பெயரில் தனது விருப்பு வெறுப்புகளுடன் , தான் விரும்பும் ஒரு இசைச் சூழலை கொண்டு வ்ர விரும்புவதாக எனக்குப்படுகிறது.


தனது ரசனையை மட்டுமே முன் வைத்து இசை பற்றிய கட்டுரைகள் அவர் எழுதுவதாகச் சொல்கிறார்கள். அது தவறல்ல..முதலில் ரசிகனாக இருந்து தான் விமர்சனராக மாற வேண்டும்..தனது ரசனைக்கு மட்டுமே உண்மையானவராக இருக்க வேண்டும் என்ற கருத்திலும் நான் உடன்படுகிறேன். மொழிக்கு ஒன்றாக நான் 4 CD க்கள் கேட்டிருப்பேன்.. அதையே அவர் 40யோ, 400 யோ கேட்டிருக்கலாம்.. ஆனால் அது போதுமா இசை பற்றிய விமர்சனம் எழுத என்று என்னைக் கேட்டால், செய்யக்கூடாது என்று தான் சொல்வேன். அப்படிச் செய்வதாக இருந்தால் தனது எல்லைகளை கறாராக வகுத்துக் கொள்ளவேண்டும்..கர்நாடக சங்கீதமோ,ராகங்களோ தெரியாமல், மேலையிசையில் செவ்வியலிசை இலக்கணத்தோடு பரிச்சயமில்லாமல் எப்படி ஒட்டு மொத்த இசை பற்றி எழுதலாம் எனத் தெரியவில்லை..


ஒரு மேதையை எப்படி அணுக வேண்டும்,, ஒரு வெற்றி பெற்ற இசை அமைப்பாளரை எப்படி அணுகவேண்டும் என்ற வித்தியாசம் கூட தெரியாமல் எப்படி விமர்சனம் எழுதுவது? இளையராஜா மீது மிகவும் வன்மத்தோடு ஷாஜி எழுதிய கட்டுரைக்கு ஜெயமோகன், சந்திரமோகன் ( சந்தனார்) , சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் அருமையாகப் பதில் சொல்லியுள்ளதால் , நான் புதிதாக எதுவும் சொல்வதற்கில்லை..அதிலும் நான் பெரிதும் மதிக்கும் ஜெயமோகனின் பதில் மிக ஆழமானது..அற்புதமான ஒரு கட்டுரை..நாரம் இருந்தால் அவசியம் வாசிக்கவும்.


ஆனால் விபரம் அறிந்த நண்பர்கள் கூட அவர் இசை பற்றி புதிதாக ஒரு Concept சொல்வதாகவும் , அதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும் என்றும் என்னிடம் சொல்கிறார்கள்.. இதில் தான் நான் முரண்படுவதோடு, இது குறித்து எனக்கு பெரிய ஐயப்பாடும் உண்டு..


இப்படித்தான் ஒரு புதிய Concept 60 வருடங்களுக்கு முன்னர் “சபா” என்ற பெயரில் ஆரம்பித்து அந்த Concept யும் அவர்களும் சாதித்ததை நினைத்தால்தான் என்னால் தாங்க முடியவில்லை.. திருமண விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலுமாக மக்களிடமிருந்த,மக்களோடு கலந்து இருந்த கர்நாடக இசையை, நான்கு சுவர்களுக்குள்ளும், NRI சொத்தாகவும் மாற்றிய மகானுபாவர்கள் இந்த சபாக் காரர்கள்.. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், இந்தச் சபாக்களின் மீது தான் என் முதல் தாக்குதல் இருக்கும்.. தனக்குப் பிடித்த ஒரு குழுவை சேர்த்துக் கொண்டு, தங்களால் முடியாத விஷயங்களை புறக்கணித்து, இவர்கள் செய்த சேவை.. அப்பப்பா..காலத்தால் அழிக்க முடியாதது .
நாதஸ்வரத்திற்கு எந்த சபாவிலும் மரியாதை கிடையாது..தமிழிசைக்கு மரியாதை கிடையாது. துக்கடா என்று தமிழசைக்கு புது நாமகரணம் சாற்றி இசையுலகில் தீண்டாமையை அமுலாக்கிய அயோக்கியர்கள்.ஆனால் அவர்கள் தான் இங்கு இசையை வளர்ப்பவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.


ஒரே காலத்தில் வாழ்ந்தாலும். மதுரை சோமுவிற்கு பக்கத்தில் கூட இணை வைக்க முடியாத பாலமுரளியை தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள்.. எதையுமே நிறுவனப்படுத்தினாலே எல்லா அயோக்கியத்தனங்களும் அங்கே அரங்கேறும்.. பாலமுரளிதான் முதல் கார்ப்பெரட் சங்கீதவித்வான்.. பாலமுரளிக்கு சபாக்களும், சபாக்களுக்கு பாலமுரளியும் தேவைப்பட்டார்கள்.. அதன் பின்ணனி போய்ப்பார்த்தால், இசையைத் தாண்டி ஜாதி, மொழி எல்லாம் முக்கிய காரணியாகச் செயல்பட்டது தெரியும். அதைப் புரிந்து கொண்டுதான், செட்டிநாடு அரசர் அண்ணாமலைச் செட்டியாரும், முத்தையாச் செட்டியாரும் தமிழிசையக் காக்க எல்லா தமிழ் ஆர்வலர்களையும் சேர்த்துப் போராட வேண்டி இருந்த்து.


இன்றும் இசை குறித்து பெரிய அளவில் கட்டுரைகள் எதுவும் வரவில்லை.


இன்று திரைஇசை குறித்து , விமர்சனக் கட்டுரைகள் என்ற பெயரில் ஷாஜி எழுதுவதும்,இசையை ரசிக்க புதிதாக ஒரு கான்செப்ட் சொல்வதையும் இந்தப் பின்ணணியில் தான் பார்க்கிறேன்..


இளையராஜாவின் மேல் வன்மத்துடன் பாய்தல், முதல் 30 ஆண்டுகாலம் ராஜாவாகத் திகழந்த டி.எம்.எஸ் யை ஒதுக்கி வைத்தல், அடுத்த 30 ஆண்டுகளை தன் வசம் வைத்திருந்த எஸ்.பி.பியை பாடகரில் சிவாஜி என்று தள்ளிவைத்துவிட்டு, ஏசுதாஸை தூக்கி வைப்பதாகட்டும்.. ஒரு பாடகர் என்று மட்டும் அறியப்பட்ட மலேஷியா வாசுதேவனை உன்னதமான பாடகராகத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதில் இருக்கும் நுண்ணரசியல் இரண்டு பேர்களும் மலையாளி என்பததைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. உண்மையில் தமிழர்கள் பாடகர்களில் எநத மொழிப் பாடகர் என்று பார்ப்பதில்லை.. கண்டசாலாவால் பிரகாசிக்க முடியாமல் போனது கூட அவரின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்பதாலேயே என்று அனைவருக்கும் தெரியும் பி.பி.சினீவாஸ் (கன்னடம்), ஏசுதாஸ்(மலையாளி), எஸ்,பி,பி(தெலுங்கு), பி.சுசிலா(தெலுங்கு) எந்த மொழிக்கலைஞர்களாக இருந்தாலும் வரவேற்று ஏற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள்..


முதலில் எந்தக் கான்செப்ட் உருவாக்கினாலும் அது மரபு சார்ந்து அதிலிருந்து தான் கிளைத்தெழ வேண்டும். தமிழ் பண்ணிசை மரபோ, கர்நாடக இசையின் மரபோ, இலக்கணங்களோ தெரியாமல், அதில் பரிச்சயம் இல்லாமல் புது கான்செப்ட் உருவாகுவது என்பது 50 வருடங்களாக உயர்தர இசையை தமிழ் மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு விரக்தியும் வேதனையும் உண்டாக்குகிறது.

இசை ஞானமுள்ள அனைவரும் இசை பற்றிய உண்மையான அக்கறை உள்ளவர்கள், மரபிசையில் தேர்ந்த ஞானமுள்ளவர்கள் எழுதும் கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டும் ..அப்படி பல கட்டுரைகளும் திறனாய்வுகளும் வநதால் தான் நாம் விரும்பும் உன்னத இசை பற்றிய ஒரு கருத்துருவாக்கத்தை நம்மால் ஏற்படுத்தி,அதை நமது இளைய தலைமுறைக்கு கடத்த முடியும்..அதுதான் இன்றைய தேவையும் கூட...

சபாக்களால்,அல்லது தனது விருப்பு வெறுப்புகளோடு எழுதப்படும் இந்த மாதிரி கட்டுரைகளால், நம் இசை பற்றிய ரசனை , தன் வேர்களை இழப்பதற்கு தான் பயன் படும்.


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com