செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தெய்வம் என்பதோர்... பேராசிரியர்.தொ.பரமசிவம்...




(இது பிப்ரவரி 25 அன்று வெளியிட்ட கட்டுரை . கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இந்தக் கட்டுரை மீள் பதிவேற்றம்)

இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து தொ.பரமசிவம் அவர்கள் எழுதியுள்ள “தெய்வம் என்பதோர் “ என்ற நூலை எடுத்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக புரட்டும் போதுதான் ..ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருப்பதாகப்படும்..ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நானே முடிவெடுத்துக் கொள்வேன்..இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன..

அதே மாதிரிதான்..தொ.பரமசிவம் அவர்களை பேராசிரியர் என்பதா ஆய்வாளர் என்று எழுதுவதா? என்ற குழப்பத்திலே நாட்கள் ஓடியதும் உண்டு..பேராசிரியர் அவர் பணி. ஆகவே அவரை பேராசிரியர் என்று அழைக்கலாம்தான். ஆனால் நான் நேரில் பார்த்துள்ள பேராசிரியர்கள் என் கண் முன்னர் வந்து போவார்கள்.அவ்வளவுதான் பேராசிரியர் என்று அவரை அழைத்து இழிவு படுத்த வேண்டாம் என்று முடிவெடுப்பேன்..அப்புறம் முனைவர் என்று எழுதலாம் என்றாலோ ஆய்வாளர் என்று எழுதலாம் என்றாலோ இந்த அடைமொழிகளுடன் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலோரை நினைத்து தொ.பரமசிவம் அவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன்., எந்த அடைமொழிகளுடன் அவரை அழைத்தாலும், யானையைப் பார்த்து கண் பார்வை இல்லாதவர்கள் சொன்ன கதையாகிப் போகும்.. அவருடைய ஆளுமையின் ஒரு பகுதிக்குத்தான் எந்த அடைமொழியும் பொருந்தும்.முழு ஆளுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல் தேவை..

ஏன் இவ்வளவு முன்னுரை? ஒரு சங்கை அளவாக வைத்துக்கொண்டு கடல் நீரை அளக்க முடியுமா?அந்தப் பயம் தான் எனக்குள்ளும்.. என் அறிவு சங்கு என்றால் அய்யவின் அறிவு கடல்..

தேவநேயப்பாவாணர் அவர்களைப் பற்றிச் சொல்வார்கள்.தனி மனிதனாக இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணிகளை செய்தவர் என்று. அது மாதிரிதான்.. தொ.ப அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்திற்கு இணையானவர். அவருடைய பண்பாட்டு அசைவுகள் என்ற நூலுக்கு ஆ.இரா.வேங்கடசலபதி எழுதியுள்ளது போல் தொ.ப., அவர்களிடம் இருந்து தெறிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை..


2007 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள் பாளயங்கோட்டையில் அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் இருந்தேன்..அந்த மணித்துளிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இரண்டு மணி நேரத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் , ஒரு புதிய புத்தகம் போடும் அளவு இருந்த்து..மறுபடியும் சலபதி வார்த்தைகளையே கடன் வாங்கிக் கொள்கிறேன்..”நாம் நனகு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில், புதிய ஒளி பாய்ச்சுவதும், பயனற்ற ஒரு சொல் அல்லது ஒரு பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சொல்வதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை”

”தெய்வம் என்பதோர்” என்ற இந்தப் புத்தகத்தை புத்தகம் என்பதா? ஆய்வுக்கட்டுரை என்பதா? என்றே தெரியவில்லை..


அடிப்படையில் தொ.ப,.,அவர்கள் ஒரு பெரியாரியச் சிந்தனையாளர்.அவர் சிறு தெய்வஙகள் பற்றியும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றியும் எழுதுவதும் அதனை பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளோடு இணைக்கும் அவர் கண்ணோட்டம் தமிழக ஆய்வுலகில் மிகவும் புதியது மட்டுமின்றி மிக முக்கியமானது. தாய்த் தெய்வ வழிபாடு பற்றி மிக அருமையான மூன்று கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன..


”நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாடல் , ஒரளவு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களிடம் ‘சாமியாடி,குறுதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே விரிகிறது.இந்தக் கணிப்புகள் அனைத்துமே தவறானவையே..நாட்டார் தெய்வங்கள் தத்துவ விசாரங்களில் நொறுங்கிப்போகும் அளவுக்கு மெலிதானவையல்ல.. அவற்றின் வேர்கள் வலிமையானவை அவை வட்டாரத்தன்மையும் உயிர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டவை. இந்தப் பன்முகத்தன்மை எனபது சைவம், வைணவம்,ஸ்மார்த்தம், இஸ்லாம்,கிறித்துவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகும்”-பக்கம் .84


அய்யா தொ.ப., அவர்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் புதியது மட்டுமின்றி மேலும் விவாதத்தை வேண்டி நிற்பவை.சைவம், வைணவம்,இஸ்லாம், கிறிஸ்துவம் ., அனைத்தும் நிறுவனம் சார்ந்த மதஙகள் என்றும் ‘நிறுவனம் “ என்று வந்துவிட்டாலே ‘மேல்-கீழ்’என்ற வரிசை முறையுடன் தான் தமது அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன..ஆனால் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இந்த இலக்கணத்தில் இருந்து மாறுபட்டு நிற்கின்றன..

இந்தக்காரணத்தினால் தான் அதிகார மையமாகத் திகழந்த கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து வந்த தந்தை பெரியார்,, ஆண்டு முழுவதும் மண்மேடாக் கிடந்து ஆண்டில் ஒரு முறை தெய்வமாக உருப்பெரும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர் கொள்ளவில்லை..

இந்த முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழியில் தான தொ.ப., நமது சிந்தனையின் அனைத்து கதவுகளையும் சாளரங்களையும் திறந்து கொண்டே செல்கிறார்..


நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு நூல்களில் இருந்து ஆதாரம் திரட்டி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் ஆய்வாளர் அல்ல..தொ.ப.., கிணற்றடிகளில், கோயில் பிரவாகத்தில், தெருக்களில்,சாவு வீட்டு முற்றத்தில் , அங்கு கிடைக்கும் ஒப்பாரிகளில், கிராம சொலவடைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் என பல்வேறு களங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களோடு தனது ஆய்வுகளை முன் வைப்பது தான் தொ.ப., வின் அரிய பணியாகும்.
இன்னுமொரு முக்கியமான கட்டுரை..

”இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும்,நம்பிக்கைகளையும்,வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...”

சமய நல்லிணக்கத்தின் ஆணிவேர் எது என்பது பெரியாரியவாதியான அய்யா தொ.ப., அவர்களுக்கு நன்கு தெரிகிறது என்பதால் தான் .. இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும் என்கிறார்..கோயிலுக்கு நுழைய முடியாத ஒரு கூட்டம், கருவறைக்குள் நுழைய முடியாத் ஒரு கூட்டம்..கருவறைக்குள் மட்டுமே இருக்கும் ஒரு கூட்டம் ..இதெல்லாம் சேர்ந்தது தான் ” இந்து” என்பது ஒரு பித்தலாட்டமாகவே தான் தெரிகிறது.

தமிழ் சமூகத்தின் மீது காதல் கொண்ட அனைவரும் அய்யாவின் எழுத்துக்களை தேடிப் படியுங்கள். கண்டிப்பாக ஒரு புதிய உலகம் தரிசனம் கிடைக்கும்..வாய்ப்பு கிடைத்தால் அய்யாவை நேரில் சந்தித்துப் பேசி ஒவ்வொரு மணித்துளிகளையும் அனுபவியுங்கள்..அவர் நிறைய எழுதவில்லை..ஆகவே அவரைப் பார்க்கச் செல்பவர்கள் ஒலிப்பதிவு கருவியடன் சென்று , பேச்சுப்போக்கில் தெறிக்கும் அனைத்து சங்கதிகளையும் சேமிக்கவும். மிக முக்கியமான சுவையான செய்திகள் உங்கள் தெருவிலே இருந்திருக்கும் ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்காது..அப்படி உள்ள செய்திகளாகச் சொல்லி புது வெளிச்சம் பாய்ச்சுவது தான் தொ.ப.,வின் உலகம்..

குறிப்பு: அய்யா தொ.பரமசிவம் படங்கள் தமிழினப் போராளி பாமரன் அவர்கள் வலைப்பதிவில் இருந்து அனுமதி பெறாமல் எடுத்தது.அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வலைப்பதிவின் முகவரி: http://pamaran.wordpress.com


அன்புடனும் நன்றியுடனும்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

13 கருத்துகள்:

raja சொன்னது…

முற்றிலும் உண்மை வெற்றிவேல்..ஸார்...அவரது..தொ.பரமசிவம் என்கிற..தொன்மையான பட்டறிவு என்று வைக்கலாம்..
அத்தனையும் பொக்கிஷம்.. 2000 ஆண்டு ஒரு தமிழ் மாநாட்டில் அவரது விரிவான உரையாடல் ஒன்று கேட்டுள்ளேன்..

தருமி சொன்னது…

நல்ல அறிமுகம்
நன்றி

அ.வெற்றிவேல் சொன்னது…

@தருமி அய்யா..நன்றி ..வந்ததற்கும் வாழ்த்தியதற்கும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல அறிமுகம்...
நன்றி .

ராம்ஜி_யாஹூ சொன்னது…

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Thenammai Lakshmanan சொன்னது…

..”நாம் நனகு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில், புதிய ஒளி பாய்ச்சுவதும், பயனற்ற ஒரு சொல் அல்லது ஒரு பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சொல்வதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை//

வித்யாசமான பகிர்வு முறை வெற்றி

Ravichandran Somu சொன்னது…

நல்ல பகிர்வு... நன்றி!

பெயரில்லா சொன்னது…

//இந்தக்காரணத்தினால் தான் அதிகார மையமாகத் திகழந்த கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து வந்த தந்தை பெரியார்,, ஆண்டு முழுவதும் மண்மேடாக் கிடந்து ஆண்டில் ஒரு முறை தெய்வமாக உருப்பெரும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர் கொள்ளவில்லை..//

இந்த தகவல் எனக்கு புதியது.

//இந்த முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழியில் தான தொ.ப., நமது சிந்தனையின் அனைத்து கதவுகளையும் சாளரங்களையும் திறந்து கொண்டே செல்கிறார்..//
தேடிப்பிடித்து இந்த நூலை வாசித்துவிடுகிறேன்.

உமர் | Umar சொன்னது…

முன்னர் பாமரன் தளத்தில் தொ.ப அவர்களைப் பற்றி படித்தபோதே சற்று அதிசயித்துதான் போயிருந்தேன். இப்பொழுது அவர் மீதான மதிப்பு இன்னும் உயர்ந்துள்ளது. இன்னொரு பரிமாணத்தைக் காட்டியதற்கு நன்றிகள்.

பாமரன் தளக் கட்டுரையின் சுட்டி.
http://pamaran.wordpress.com/2010/07/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/

ஜோ/Joe சொன்னது…

புதியன பல அறிய செய்ததற்கு நன்றி!

அ.வெற்றிவேல் சொன்னது…

நன்றி ராஜா,தருமி அய்யா,சே.குமார்., ராம்ஜி_யாஹூ,தேனம்மை,ரவிச்சந்திரன்,தமிழினியன்,கும்மி ஜோ. அனவருக்கும் நன்றிகள் வநததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்

அ.வெற்றிவேல் சொன்னது…

@கும்மி..பாமரன் தளத்தில் உள்ளதை நான் முன்னரே படித்துள்ளேன். அதில் இருந்து தான் தொ.ப அவர்களின் படங்களை எடுத்து இங்கு போட்டேன். அய்யா உண்மையில்யே ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆய்வாளர்

Vasan சொன்னது…

நன்றி திரு வெற்றிவேல் அவர்களே , படித்து இன்புற்றேன் தொடர்ந்து படிக்கும் ஆவல் தூண்டபெற்றேன்

கருத்துரையிடுக