வியாழன், 30 டிசம்பர், 2010

2010-யின் மிக முக்கியமான தமிழ்ப் பாடல்

நேற்று இரவு என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஈசன் பட்த்தில் வந்த “ஜில்லா விட்டு ஜில்லா “ என்ற பாடல் கேட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்றார். எந்திரன் இரைச்சலுக்குப் பின் தமிழ்ப்படப் பாடல்களையே கேட்கத் தயங்கி இருந்த பொழுது, நண்பர் சொல்வற்காக கேட்கலாம் என்று நண்பர் மேல் வைத்த நம்பிக்கையினால் இந்தப் பாடலை யூ டியூப்பில் தரவிறக்கம் செய்து கேட்டுப் பார்த்தேன்..நீங்களும் கேட்டுப் பாருங்கள்..

http://www.youtube.com/watch?v=gXET9AVxKd4

இந்தப் பாடலை ஜேம்ஸ் வசந்தன் இசையில், மோகன்ராஜ் என்ற புதுக் கவிஞர் எழுதி தஞ்சைசெல்வி என்ற நாட்டுப்புறக் கலைஞர் பாடியுள்ளார். இவ்வளவு ஜீவனுள்ள பாடலா? எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்பார்களே. அது இதுதான் என்று நினைத்தேன்.. இவ்வளவு ஜீவனுள்ள பாடல் எந்திரன் காலத்திலா?

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளய்யா.
தூத்துக்குடி பொண்ணுய்யா..நான் தூத்துக்குடி பொண்ணுய்யா
என் கதையை கேளய்யா....
......
சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மனசு இருக்குது பாராய்யா..
.....
அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா..மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பிளை அவன்
துப்பில்லாத ஆம்பளை.....
...........................
என் கனவை எல்லாம் உடைச்சுட்டான்..

முழுப்பாடலையும் வரிகளுடன் கேளுங்கள் அத்துடன் பாடல் காட்சியையும் பாருங்கள்

ஒரு குத்துப்பாட்டு என்ற தாளகதியில் ஆரம்பிக்கும் இந்தப்பாடல்.. சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மனசு இருக்கு பாராய்யா என்ற வரிகள் வரும் போது நம் மனதை உள்ளே இழுக்கும் பாடல்..முடியும் போது ஒரு வித கனத்தை மனதில் ஏற்றி வைத்துவிடுகிறது

குத்துப் பாட்டில் ஒரு சோகம் இழையோடும் ஒரு கவிதை.. இந்தப்பாடல்.. தஞ்சைசெல்வியின் குரலில் ஒரு துக்கம், சோகம் பாடல் முழுதும் நம்மை என்னமோ செய்கிறது


ஒரு குத்துப்பாட்டு கேட்ட ஒரு தயாரிப்பாளருக்காகவும் இயக்குநருக்காகவும் வேறொரு பட்த்திற்காக தயார் செய்த பாடல் இது என்றும் , ஏதோ ஒரு காரணத்தால் இது வேண்டாம் என்று அவர்களால் ஒதுக்கப்பட்ட பாடல்..பாடலில் வரும் அந்தப் பெண் போல..

ஒரு பட்த்திற்கு எழுதிய பாடல் இன்னொரு பட்த்திற்கு உபயோகப்படுத்திக் கொள்வது தமிழ் திரை உலகத்திற்கு புதியது அல்ல.. 52 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தும் இன்னும் காதல் பாடலக்ளில் முதல் இடத்தை வகிக்கும் பாலும் பழமும் பட்த்தில் வந்த ”நான் பேச நினைப்பதெல்லாம் “ என்ற பாடலே ஊமைத் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு தாலாட்டும் விதமாக தநதை பாடும் பாட்டுக்காக வேறு படத்திற்கு எழுதியது தான் ..தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று..அதை மாற்றி காதல் பாடலாக பாலும் பழமும் பட்த்தில் வெளிவந்தது.


ஒரு இயக்குநர் பார்வையில் சரியாகப் படாதது இன்னொரு இயக்குநர் பார்வை பட்டு அழகான அற்புதமான காட்சி அமைப்போடு , இயல்பான நடனத்தோடு, மிக அருமையான பாடலாக வந்துள்ளது..
.
பாசமலர் படத்தில் உள்ள ”மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” பாடலில் கண்ணதாசனின் கவிதை வரிகளை எல்லோரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக இசையை நிறுத்தி பாடகர்களை பாட வைத்திருப்பார் எம்.எஸ்.வி. மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக..என்பதை இசையை நிறுத்தி பாட வைத்து வரிகளில் உள்ள கவிதையையும் சோகத்தையும் ஒரு சேரக் கொடுத்து இருப்பார் எம்.எஸ்.வி. அதே போன்று இப்பாடலில்,’சுகத்தை விற்கிற பொண்ணுக்கும் மன்சு இருக்கு பாராய்யா,துப்பில்லாத ஆம்பளை, என் கனவை உடைச்சுட்டான், மிச்சமாக நான் நின்னேன் போன்ற வரிகளை திரும்பவும் பாட வைத்தும், ”ஒருசாண் வயித்துக்கு தான் எல்லாத்தையும் விற்கிறேன்,இப்ப இங்க நான் நிற்கிறேன் என் கதையை முடிக்கிறேன்” என்ற வரிகளை இசையை நிறுத்தி மறுபடி பாட வைத்தும் நம்மை கட்டாயமாக கேட்க வைத்து வயிற்றில் கத்தியைப் பாய்ச்சுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.. வாழ்த்துகள் இசை அமைப்பாளரே....

மோகன்ராஜ் என்ற புதுக்கவிஞர், தஞ்சை செல்வி என்ற திரை இசைக்குப் புதிய குரல், இவர்களை அறிமுகப்படுத்தியுள்ள இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இதனை காட்சிப்படுத்தியுள்ள ஒளிப்பதிவாளர், இயல்பான நடன அமைப்பைக் கொடுத்துள்ள நடன இயக்குநர், இந்தப் பாடலைக் கேட்டு அதில் லயித்து, தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கற்பனை பண்ணி(விஷுவலைஸ்) 2010-ல் தமிழ் திரை இசையின் மிக முக்கியமான பாடலாக மாற்றிக் காட்டிய இயக்குநர் சசிகுமார் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.. என் வசம் பரிசு கொடுக்கும் வாய்ப்பு இருக்குமானல், 2010 –ல் இதுவே முதல் பாடலாக இருக்கும்..

ஊர்க்காரர் சசிகுமாருக்கு வாழ்த்துகள்!!!!!!

குத்துப்பாடல் இல்லை.. வயிற்றில் கத்தி குத்திய பாடல் இது..
கேட்டுப் பாருங்கள்..கண்டிப்பாக கலங்குவீர்கள்..



அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 24 டிசம்பர், 2010

சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார்..


1969-71 க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். சிவகங்கை சண்முக ராசா கலையரங்கில் தந்தை பெரியாரின் உரை கேட்டது தான் எனக்கும் பெரியாருக்கும் உள்ள முதல் தொடர்பு..அய்யப்பன் வரலாறு பற்றி சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..அப்போது நான் காலையில் 4 மணிக்கு எழுந்து கோயில் கோயிலாக சுற்றி வந்த காலம் என்பதால் அவர் உரை என்னை அவ்வளவாக கவரவில்லை..அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்..ஆனால் அடுத்த இரண்டு வாரம் அவர் பேசியதையே கிண்டலும் கேலியுமாக நணபர்கள் மத்தியில் பேசி வந்த போது தான் அவர் என்னையும் அறியாமல் என் மனதில் விதை ஊன்றிப் போயுள்ளார் என்று பின்னர் அறிந்து கொண்டேன்..


என் வரலாற்று அறிவுக்கு எட்டிய வரை மதங்களை முதன்முதலில் கேள்விக்குள்ளாக்கியர் சித்தார்த்தன். இந்திய வரலாற்றில் மாற்றுச் சிந்தனையை தொடங்கி வைத்தவர் புத்தர்.அவர் தொடங்கி வள்ளலார் வரை ஒரு நீண்ட பராம்பரியத்தின் கடைசிக் கண்ணி நம்மை சிந்திக்கச் சொன்ன தந்தை பெரியார்..

உங்களுக்காக சிந்திக்கிறேன்..உங்களுக்காக உழைக்கிறேன் என்று சொல்லி 92 வயது வரை மூத்திரப் பையுடன் ஊர் ஊராக சுற்றி வந்து உண்மையிலேயே நமக்காக உழைத்தவர் தந்தை பெரியார்..

போன நூற்றாண்டில் அவர் அளவுக்கு சாதித்துக்காட்டியவ்ர் வேறு ஒருவரும் இருக்க முடியாது..

சாதி ,மதம், இனம்,மொழி, தேசீயம் என்ற எல்லா நிறுவன மையங்களையும் கேள்வி கேட்டவர்.

அவர் மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சாதித்ததில் எது என்னைப் பொறுத்தவரையில் எது முக்கியமானதாகப் படுகிறது என்று அவர் சாதித்துக் காட்டிய அனைத்து சாதனைகளையும் எடுத்து வைத்துப் பார்க்கிறேன்..

சுயமரியாதை என்ற சொற்றொடர் பெரியாருக்கு முந்தைய காலகட்ட்த்தில் இருந்து இருக்கலாம்.. ஆனால் அந்தச் சொற்றொடருக்கான உண்மையான அர்த்தத்தை தமிழர்களின் மனங்களில் ஊன்றி விட்டுப் போனது தான் மிக முக்கியமானதாகப் படுகிறது. தமிழர்களின் சிந்தனையில் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மந்திரச்சொல் உண்டு பண்ணியுள்ளது என்பது வரலாறு.

சுயமரியாதையுடன் எந்த விசயத்தையும் அணுக வேண்டும் என்று சொல்லி சுயமரியாதை என்பதை ஒவ்வொரு தமிழனின் கூறுகளில் ஒன்றாக்கி வைத்தவர் தந்தை பெரியார்..

இன்று சுயமரியாதை என்பது என்ன என்று தெரியாத ஒரு தமிழனும் இருக்க மாட்டான். ஆனால் சுயமரியாதையோடு வாழ்கிறானா என்பது வேறு பிரச்சனை.. அப்படி சுயமரியாதை இழந்து வாழும் ஒருவனுக்கும் , நாம் வாழ்வது சுய மரியாதியுடன் உள்ள வாழ்வா என்று அவன் மனதை அவனைப் பார்த்தே கேள்வி கேட்க வைத்தவர் தந்தை பெரியார்..

அப்படிப் வாழ்பவனைப் பற்றியும் தந்தை பெரியார் மிக அழகாக தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.“ஒண்ணும் தெரியாதவன் மடையன். தெரிந்திருந்தும் அதில் நமக்கு ஆதாயம் கிடைக்குமா என்று யோசிப்பவன் அயோக்கியன்”

இன்று தந்தை பெரியாரின் நினைவு தினம்..பெரியாரை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறோம் என்று நம்மை நாமே உரசிப் பார்த்துக் கொள்ளும் தினமாக இந்நாளை மாற்றிக் கொள்வோம்..

படம் உதவி: ஜீவா,கோவை

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நெஞ்சம் நிறை நன்றியுடன்

தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக ஒரு வாய்ப்பு- ஒரு வாரகாலம் தொடர்ந்து இடுகைகள் என்று கேட்டதுமே ஒரு பதட்டம்.. இருந்தும் நல்ல வாய்ப்பு என்று நண்பர்கள் சொல்லவே ஒரு ஆர்வம்..

என் நம்பிக்கை(இறை நம்பிக்கை),ஆர்வம்( தனித்தமிழ்), தோல்வியால் ஏற்பட்ட கோபம்(முள்ளிவாய்க்கால்),வெறுப்பு(கிரிக்கெட்),ஆச்சர்யம்(அய்யா தொ.ப அறிமுகம்),அனுபவம்(தொழிற்கல்வி),பொறுப்புணர்வு(ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்) போன்ற என் சம்பந்தப்பட்டவைகளையே பேசும் பொருளாக்கி ஏழு நாட்கள் உங்களுடன்..

என் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தோர் அதிகமாக இருந்தாலும் கிரிக்கெட், முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற இரண்டிற்கு எதிர்ப்புகளும் அதிகம். கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தோர் ஒரு வழிபாட்டு மனப்பான்மையுடன் தெரிவித்தமையால், அதை நான் கடந்து சென்றுவிட்டேன்.

ஆனால் முள்ளிவாய்க்கால் அவலம்- கட்டுரைக்கு வந்த எதிர்வினைகள் என்னைச் சிந்திக்க தூண்டியவை..அவைகளை எதிர்வினைகள் என்ற பெயரில் பதிவிடலாம் என்று இருக்கிறேன். அது நான் எழுதியதின் மறுபக்கம் என்பதையும் அதையும் தங்கள் முன் வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும், வாசித்தவர்களுக்கும். வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்.தனி மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொண்டவர்களுக்கும், மற்றும் இனிமேல் வாசிக்க இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்

இது எனக்கு புதிய நண்பர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்காகவும் நன்றிகள்.

அன்புடனும் நன்றியுடனும்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

சனி, 18 செப்டம்பர், 2010

தமிழகத் தொழிற் கல்வி மாணவர்களுக்கு....

(முன் குறிப்பு: படித்தது பொறியியல் பணிபுரிவது மேலாளராக.படித்த படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் தொடர்பாக ஒரு இடுகையாவது நட்சத்திர வாரத்தில் இருக்கட்டும் என்ற ஆசையில் எழுதியது.)

1979-80- ஐந்து வருட பொறியியல் படிப்பை நான்காண்டாக குறைத்தும் கல்லூரியின் நுழை வாயிலாக இருந்த புகுமுக வகுப்பை ரத்து செய்துவிட்டு உயர்நிலைக்கல்வியான +12யை பள்ளிகளில் அறிமுகப் படுத்திய காலம். அமரர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார்..அப்பொழுது எடுத்த முக்கிய முடிவு, தனியாரை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதிப்பது.

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி இரண்டுபட்டது.. தனியார் கல்லூரி துவங்க அனுமதி அளித்தால், தமிழகத்தில் தொழிற்கல்விகளுக்கான மரியாதை குறைந்துவிடும் என்று கிட்டத்தட்ட 90 விழுக்காடிற்கும் அதிகமான மாணவர்கள் அதற்கான போராட்டத்தில் இறங்கிய காலம். என் பெற்றோரும் இதற்குத் தான் ஆதரவு.ஆனால் நானும் இன்னும் சில பெரியார் தொண்டர்களும் தனியார் கல்லூரிகள் துவங்குவதற்கு ஆதரவு. எங்களைப் பொறுத்தவரை பெரியார் சொன்னதுதான் எங்களது ஆதாரம்.அவர் சொற்படி பொது மக்களுக்கு விரோதிகள் அட்டவணையில் முதலில் பார்ப்பணர்களும் அடுத்த்தாக படித்தவர்களும் வருவதால், நாங்கள் இதை ஆதரித்தோம். அப்போது தான் முதல் தலைமுறையில் படித்து வெளிவந்த அரசியல் புள்ளிகளும் அரசு அதிகாரிகளும் ஊழல் செய்யக் கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்த காலம். சென்னையில் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் பங்களா வாங்கவே அண்ணா நகர் என்று ஒரு தனி பகுதி உருவாகி வந்த சமயம். மேலும் படித்தவர்களுக்கென்று தனி மரியாதையும், அதுவும் பொறியியல், மருத்துவம் படித்தவர்களுக்கு தனியான கொம்பு முளைத்து உருவான புதிய மாயத் தோற்றம் தகர்க்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இருந்ததால், அரசின் இந்த கொள்கை முடிவை ஆதரித்தோம்.


இரண்டாவது காரணம், என் அண்ணன்களே இதில் பாதிக்கப்பட்டதால்..அன்று தமிழகத்தில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரியே 8 தான்.அதில் திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியும் ஒன்று. மொத்த இடங்களே 1600 தான். ஆக மொத்தம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1600 பேர்தான் பொறியியல் படிக்க முடியும் என்ற நிலை. அண்ணன்கள் இரண்டு பேரும் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தும் பொறியியலிலோ, மருத்துவக் கல்லூரியிலோ இடம் கிடைக்கவில்லை.. (நான் எடுத்தது 200/200, 197/200,176/200- சுய தம்பட்டம்).ஒரு அண்ணன் முதுகலை கணிதம் படித்து சிறந்த கணிதப் பேராசிரியாராக பணி புரிந்து இப்பொழுது தான் ஒய்வு பெற்றார்கள்,.மருத்துவ கல்லூரி அனுமதி கிடைக்காத மற்றொரு அண்ணன், டெல்லி ஐ.ஐ.டியில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்கள்.


இந்த அளவு புத்திசாலி இளைஞர்களுக்கே தொழிற்கல்விகளில் இடம் கிடைக்காதது எனக்கு மிகவும் ஏமாற்றம். ஒரு ஆண்டில் மொத்தமே 1600 மாணவர்கள் தான் பொறியியல் மற்றும் அதற்கும் குறைவாகவே மருத்துவம் படிக்க இடம் உள்ளது என்பது அரசாங்கத்தின் அவல நிலை.இதற்கு ஒரே மாற்று தனியார்களை அந்தப் பணியில் ஈடுபடுத்துவது தான். எல்லாவற்றிற்கும் அரசையே கையேந்தி நிற்பது குறையும் என்ற எண்ணமும் தான் தனியார் தொழிற்படிப்புக்கான கல்லூரிகளை நாங்கள் அன்று ஆதரித்ததற்கு காரணம்


ஆனால் நாங்கள் நினைத்தது வேறு நடந்தது வேறு. அண்ணாமலைச் செட்டியார், அழகப்பச் செட்டியார்,கருமுத்து தியாகராஜா செட்டியார், பச்சையப்ப முதலியார்,எத்திராஜ் முதலியார், PSG குழுமம் போன்ற கல்வி வள்ளல்கள் இந்தப் பணியில் இறங்குவார்கள் என நினைக்க, இந்தப் பணியில் இறங்கி கல்லூரி ஆரம்பித்தவர்களோ கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும், முன்னால் கள்ளக் கடத்தல்காரர்களுமே.

எது எப்படியோ இன்று தமிழகத்தில் 80000 க்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க வழி உள்ளது. இதில் பாதி அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கல்லூரியில் சேரலாம் என்ற நிலை..இன்று உள்ள இந்த நிலைக்கு குரல் கொடுத்தவன் என்ற பெருமை எனக்கும் உண்டு.

80000 பொறியாளர்களில் திறமையானவர்கள் என்பது 18 விழுக்காடிற்கும் குறைவாகவே இருக்கிறது என்பது இன்றைய தமிழகத் தொழிற்கல்விக்கான பரிதாப நிலை.நான் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துச் சொல்லவில்லை. திறமைகளின் அளவுகோலின்படி. சொல்கிறேன்.

இங்கு நான் பேச வந்தது இதைப் பற்றித்தான்.

பொறியியல் அல்லது ஒட்டு மொத்தமாக தொழில் சார்ந்த பணிகளைப் பொறுத்தவரையில் Skilled Engineers என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இன்றும் பஞ்சமே..என்றும் பஞ்சமே.( எனக்கு தெரிந்த பொறியில் துறையை எடுத்துக் கொண்டு இந்த தகவல்)

நான் 25 வருடங்களுக்கும் மேலாக பணியில் இருக்கிறேன். இதுவரை 6 நிறுவனங்கள் மாறியுள்ளேன். 1988-92 WIPRO வில் சென்னைக் கிளையில் ஒரு பிரிவுக்கு நான் மேலாளராக இருந்துள்ளேன். அனைத்து நிறுவனங்களிலுமே தகுதியான, திறமை வாய்ந்த பொறியாளர்கள் பற்றாக்குறையே.. அந்தந்த வேலைக்கு தகுதியான வல்லுநர்களை தேடி கண்டுபிடிப்பது தான் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சவால்.மற்றொரு சவால் அவர்களைத் தக்க வைப்பது.

ஒரு சின்ன கணக்கு மூலம் புரிய வைக்கலாம். முதல் மாதச் சம்பளத்தை 100 மடங்காக மாற்ற எனக்கு 15 ஆண்டுகள் ஆனது. அதாவது 1983 –ல், 800 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தச் சம்பளத்தை 80000 ஆக மாற்ற எனக்கு 15 ஆண்டுகள் ஆனது..1998-ல் தான் முடிந்தது. எனக்குத் தெரிந்த என்னுடன் படித்த நண்பர்கள் 10 ஆண்டுகளில் 200 மடங்காகவும், அதையே 500 மடங்காகவும் மாற்றிக் காண்பித்தவர்களும் உண்டு.

முதல் வேலையை மட்டுமே நாம் படிக்கும் படிப்பு பெற்றுக் கொடுக்கும். அதன் பிறகு வளத்தை நோக்கிய ஏணியில் ஏற வேண்டியது அந்தந்த தொழில்நுட்ப பொறியாளர்களின் தொழில் திறமையைப் பொறுத்தே அமையும்.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் வாங்கும் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு இரண்டு முக்கிய காரணிகள் .முதலாவதாக நான் நினைப்பது தன்னுடைய தொழில் நுட்ப அறிவு (Technical skill) அதை எவ்வளவு சீக்கிரம் வளர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாம் ஏணியில் ஏறலாம். இரண்டாவது முக்கியமான காரணி, நமது Communication Skill என்று சொல்லப்படும் தொடர்புக்கான ஆற்றல். இதில் பேசுவது , எழுதுவது, விவாதத்திறமை ,சக தொழிலாளிகளிடம் பழகுதல், என எல்லாமே அடங்கும்.

இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றையும் கல்லூரிப் பாடப்புத்தகங்களே கற்றுக் கொடுக்கும் என்று நினைக்ககூடாது, கல்லூரிப் பாடங்கள் தொழில் படிப்பை மட்டுமே கற்றுக் கொடுக்கும். இரண்டாவதாக நான் சொல்லும் தொடர்புக்கான ஆற்றல், நாமாக கற்றுக் கொள்வது. பெரும்பாலும் இதற்கான கல்வி பொது இடங்களில் தான் கிடைக்கும். கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் முதல் நாளில் இருந்தே இதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்வதில் முனைப்போடு இருக்க வேண்டும்.கல்லூரிகளில் நடக்கும் எல்லா விழாக்களிலும் பங்கெடுக்க முன் வரவேண்டும்.கல்லூரியில் நடக்கும் விழாக்கள்,சுற்றுலா போன்றவற்றை பொறுப்பெடுத்து ஆசிரியர் துணையோடு நடத்திக் கொடுத்தல் போன்ற ஒவ்வொரு நிகழ்வுமே அனுபவத்தைக் கொண்டு வரும்..எந்த அனுபவமும் வீணாகப் போவதற்கு வாய்ப்பு இல்லை.. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து 20/20க்கு என்று நேரத்தை விரயம் பண்ணாமல் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே பாதை அமைத்துக் கொள்ளுங்கள் என்று அன்புடனும் வயசும் அனுபவமும் உள்ளதால் உரிமையுடனும் வேண்டுகிறேன்..


பின் குறிப்பு: இந்த இடுகையே தேவையில்லை..இன்றைய இளைஞர்கள் உங்கள் தலமுறையை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்று என் மகன்கள் மற்றும அவர்களின் தோழர் தோழிகளுடன் நன்கு பழக்கத்தில் இருக்கும் என் மனைவி சொல்கிறார். அப்படி இருந்தால் மகிழ்ச்சிதானே!

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தனித்தமிழ் ஆர்வம்

1979 அழகப்பா பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது தான் என் வாழ்வில் ஒரு திருப்புமுனை நிகழ்ச்சி. யதேச்சையாக நடந்தது. வாழ்வின் மிக முக்கியமான முடிவுகள் திருப்பங்கள் எல்லாம் நாம் எதிர்பாராத நேரத்தில் நடப்பதுதானே..

அந்த வருட தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட சிறப்புச் சொற் பொழிவாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள். அது வரை அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது..யாரோ ஒரு பேச்சாளர் என்ற அளவில் தான் அவரை எதிர்பார்த்தேன். எனக்கு கொடுத்த பொறுப்போ அவரைக் கவனித்துக் கொள்ளல்..அவ்வளவே.

அவருடைய சொற்பொழிவுக்குப் பின்னர் நான்காமாண்டு மாணவர் கணேசன் அவர்கள் எழுதி இயக்கிய “புரொபஷர் துர்வாசர்” என்ற நகைச்சுவை நாடகம் நடப்பதாக இருந்தது. ஒரு பக்க விழா அழைப்பிதழில் சிறப்புச் சொற்பொழிவு என்று அவர் பெயரும, அதனடியில் புரொபஷர் துர்வாசர் என்ற நாடகம் நடை பெறுவதாக அச்சிடிக்கப்பட்டு இருந்தது.

மாலை அவரை அழைக்க சென்றவன் மரியாதைக்காக விழா அழைப்பிதழை அவரிடம் கொடுத்தேன்.அப்பொழுது எனக்கும் அவருக்கும் நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது:

”நண்பரே . என் சிறப்புரைக்கு அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சி?”
”புரொபஷர் துர்வாசர்” என்ற நகைச்சுவை நாடகம் நடக்கப் போகிறது..
”அப்படியா? அது ஏன் புரொபஷர் துர்வாசர் என்ற பெயர் வைத்துள்ளீர்கள்?
அது ஒரு நகைச்சுவை நாடகம். நகைச்சுவைக்காக அப்படி பெயர் வைத்துள்ளோம்.
அது சரி.. ஏன் பேராசிரியர் துர்வாசர் என்றால் நகைச்சுவையாக இராதா?


எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மேலும் அவர் சொன்னார். ”புரொபஷர் துர்வாசர்” என்று சொல்வதற்குப் பதில் பேராசிரியர் என்றால் சிரிப்பு வராது என்று உங்களுக்கு யார் சொன்னது.காட்சி அமைப்பும், நாடக வசனங்களும், அதற்கேற்ப நடிக்கும் நடிகர்களின் நடிப்பாற்றலிலும் நடிகர்களின் உடல் மொழியிலும் வராத நகைச்சுவை இந்த மாதிரி ஆங்கிலப் பெயர் கலப்புடன் இடுவதால் நகைச்சுவை வரும் என்பதில் ஏதும் உண்மை இருக்கிறதா? என சிந்தித்துப் பார்க்கச் சொன்னார்.

உண்மைதான்.அந்த உண்மை என்னை இன்றுவரை என் சிந்தனைகளை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது.அதன் பலனாகத்தான் எங்கெல்லாம் ஆங்கிலம் தவிர்த்து தமிழில் எழுத முடியுமோ அங்கெல்லாம் நான் தமிழிலேயெ எழுதப் பழகி இருக்கிறேன். வெளிநாட்டில் இருப்பதால் ஆங்கிலம் அதிகமாகப் பாவிப்பதால், சில சமயம் தவிர்க்க முடியாமல் ஆங்கிலம் பேசவேண்டியதாகி வருகிறது. வீட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழி

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஊழல் பெருகிக் கிடப்பதாகவும் தமிழ் மொழி வளர்ச்சி தடைப்பட்டு போனதாகவும் பரவலான கருத்து. இதில் நானும் உடன்படுகிறேன்.
இருந்தாலும் கழக ஆட்சிகளினால் மேடைத் தமிழும்,பேச்சுத் தமிழ், பத்திரிக்கைத் தமிழ் எவ்வளவோ மாறி உள்ளது என்பதை என்னால் பட்டியலிட்டு காண்பிக்க முடியும்.

இந்த மெட்ராஸ் ஸ்டேட்டை , தமிழ் நாடு என்று பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தது , இந்தக் கால இளைஞர்கள் எவ்வளவு பேருக்குத் தெரியும் எனத் தெரியவில்லை. அண்ணா தலைமையில் முதன் முதலில் அமைந்த தி.மு.க ஆட்சிதான் மெட்ராஸ் ஸ்டேட்டை, தமிழ் நாடு என்று மாற்றியது. காங்கிரஸ்காரன்களால் அதை மாற்றுவது கூட இந்திய இறையாண்மைக்கு கேடு என்று நினைத்த காலம்.

கீழே கிடக்கும் செய்தித்தாளைக்கூட எடுத்துப்படிக்கும் பழக்கம் உள்ள நான் மிகவும் வெறுத்து ஒடியது அன்றைய தினமணி நாளிதழின் தமிழ் படிக்க முடியாமல்.. ராஷ்டிரபதி அபேட்சகராக வி.வி.கிரி ,காவிரி நீர் தாவா , இன்று ரஜா, ஜில்லா கலெக்டர் என்று ஏகப்பட்ட சொற்கள் என்னவென்று அர்த்தம் தெரியாதவைகள்..இன்றைய நாளிதழ்களில் இவைகள் இல்லை என்பதே ஒரு பெரிய விஷயம்..

ராஷ்டிரபதி குடியரசுத்தலைவராகவும், அபேட்சகர் வேட்பாளராகவும்,ரஜா விடுமுறையாகவும் , கலெக்டர் ஆட்சியராகவும் மாறியது இந்த கழக ஆட்சியில் தான்

18 வருடங்களாக , வருடத்திற்கு ஒரு முறை நான் விடுமுறை போகும் போதெல்லாம், புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் மறக்கப்பட்டு ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் வருவதை என்னால் கேட்க வருத்தமாக இருக்கிறது.

செம்மொழி மாநாட்டின் மூலமாக ஒரு நற்காரியம் நடந்துள்ளது என்றால், தமிழ் படித்தவ்ர்களுக்கு தமிழ் நாட்டில் அரசுப்பணிகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இது ஒரு முதற்படிதான்.. இன்னும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக செய்யவேண்டிய பணிகள் ஆயிரக்கணக்கில் உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் பெயர் வைக்க மாட்டென் என்று அடம்பிடித்த திரைஉலக வியாபாரிகள், கடந்த மூன்றாண்டுகளாக தமிழில் பெயர் வைக்கிறார்கள். அரசின் ஆதரவோடு தான் எதையும் செய்யமுடியும். குத்தகைகாரர் என்ற தமிழ் வார்த்தையும், அங்காடித் தெரு என்ற வார்த்தையும் பட்டி தொட்டியெல்லாம் பரவலாகச் சென்றதே..வாரணம் என்ற வாரத்தை பல ஆண்டு மறப்பிற்குப் பின் மக்களுக்கு தெரிய வந்ததே..அரசு உதவியுடன்..

2 லட்சம் வார்த்தைகள் கொண்ட மொழிவளம் உள்ள மொழி நம் தமிழ் மொழி. ஒரு 200 வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற வார்த்தைகளை சாகடிப்பது எந்த வகையில் நியாயம்?

நம் மொழியை,நம் மொழியில் உள்ள அற்புதமான வார்த்தைகளை நாம் பயன் படுத்தத் தவறினால்,அதை வேறு யார் பயன் படுத்துவார்கள். ஆகவே முடிந்த வரையில் தமிழ் மொழியைப் பயன்படுத்துங்கள்.. தேவையான இடத்தில் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்துங்கள் என்ற அன்பான வேண்டுகோளுடன்

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

கிரிக்கெட்- சூதாட்டத்தின் உச்சம்

2010 மார்ச் என்று நினைக்கிறேன்.. எனக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாததால், எந்த மேட்ச், யாருக்கு எதிராக என்று தெரியாது.. சச்சின் 200 எடுத்த அன்று..

என் அலுவகத்தில் எனக்கு தனி அறை.. என் கீழே வேலை பார்க்கும் அனைவரும் என் கண் பார்வையில் எனக்கு எதிராக திறந்த வெளியில் இருப்பதாக அலுவலக அமைப்பு.. பாகிஸ்தானிகள் அதிகமாகவும், இந்தியர்கள் 3 பேருடனும் இயங்கிக் கொண்டிருந்த போது, ஒரு இந்திய நண்பர் சச்சின் 200 எடுத்ததாகச் சொல்லவே கை கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்கள். நான் வெளியில் வந்து விஷயம் கேள்விப்படட உடனேயே நான் சொன்னது..” சினிமாவில் மார்க்கெட் போன நடிகர்கள் அவர்கள் செலவிலேயே படம் எடுத்து , தன் திறமைகளை காண்பித்து வெளியிடுவார்கள்.எம்.ஜி.ஆர் காலத்திலேயே இதுதான் நிலை..நாடோடி மன்னன் படத்தின் போது அவர் சொன்னது போல் வெற்றி பெற்றால் மன்னன் அல்லது நாடோடி.. அதே நிலைதான் சச்சினுக்கு இன்று..அனைத்து விளம்பரங்களிலும் தோனி தான் வருகிறார்..ஆகவே இது ஒரு செட்டப்” என்றும் இதற்காக அலுவல் நேரத்தில் இப்படி பேசிக்கொண்டு இருப்பது எனக்குப் பிடிக்காது என்று எச்சரித்தும் வந்தேன். ஆனால் அதன் பின் வந்த இந்திய முதன்மை லீக் (IPL) ஏலத்தில் சச்சின் கலந்து கொள்ளும் அணி அதிக விலை போகவேண்டும் என்பதறகாக முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் இந்த 200 ரன் என்று தகவல் வந்துள்ளதாகவும் அதே நண்பர்கள் என்னிடம் பின்னால் சொன்னார்கள்..எது உண்மை என்பது பின்னால் யாராவது புத்தகமாகப் போடுவார்கள்..


செப் 8 தினமலரில் , தாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளுமே மேட்ச் பிக்ஸிங் தான் என்று பாகிஸ்தானின் துவக்க வீரர் யாசிர் ஹமீதின் பேட்டி வருகிறது..

ஒரு விவாத்திற்காகத் தான் கிரிக்கெட்டை விளையாட்டு என்று அழைக்கிறேனே தவிர, அதற்கும் விளையாட்டு என்பதிற்கும் எள்ளளவும் சம்பநதம் இல்லை..என்னைப் பொறுத்தவரையில் சூதாட்டம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்

என் சிறு வயதில் நான் வளர்ந்தது அக்ரஹாரத்தில் தான்.. சிவகங்கையில் இரண்டு விதமான அக்ரஹாரம் உண்டு.. உயர்தர பிராமணர்கள் இருக்குமிடம் கோலே தெரு..கிரிக்கெட் அங்கு மட்டும் தான் விளையாடுவார்கள்..எங்கள் அக்ரஹாரத்திலோ எப்பொதும் போல் அன்றைய கிட்டி, பம்பரம்,கோலி,பட்டம் மற்றும் கால்பந்து விளையாடுவோம்.பிராமணர்களிலே உயர்தர பிராமணர் விளையாடும் விளையாட்டு கிரிக்கெட் எனப்து என் சிறு வயது பாலபாடம்.


இது ஒரு பிரிட்டிஷ் காலணியாதிக்க விளையாட்டு. அடிமை மன நிலையில் இருந்து விடுபடாத இந்திய சமுதாயம் கிரிக்கெட்டை சுலபமாக தத்து எடுத்துக் கொண்டது. அடிமைக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆசைக்கு உதவியது மெக்காலே கல்வி முறையும், கிரிக்கெட்டும் தான்.உயர் ஜாதி இந்துக்கள் தன்னை ஆங்கிலேயர் போல காட்டிக்கொள்ள விருப்பமுடன் எடுத்துக் கொண்டவை மெக்காலே கல்வி முறையும், கிரிக்கெட்டும்.


கிரிக்கெட் எப்போதும் போல் அன்றிலிருந்து இன்று வரை உயர்ஜாதி விளையாட்டாகவே அறியப்படுகிறது.கால்பந்து,ஹாக்கி,கூடைப்பந்து, வாலிபால் போன்ற விளயாட்டுகளுக்கு தேவையான உடல்வலு,ஒன்றரை மணி நேர தொடர்ந்து விளையாடுவதற்கு தேவையான சக்தி (Stamina) கிரிக்கெட்டிற்கு தேவை இல்லை..ஆகவே ஆரம்பத்தில் இது ..ஏன் இன்று வரை கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களுக்கும் மேட்டுக்குடி முஸ்லிம்களுக்குமான விளையாட்டாகிப் போனது. இந்தியாவில் உள்ள உடல் உழைப்பற்ற சிறுபான்மையினராக உள்ள உயர்ஜாதியினர் எப்படி பெருமான்மை சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அதன் அடிப்படையே கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

அதுமட்டுமல்ல.. மீடியாவின் துணையோடு தூக்கிநிறுத்தப்பட்ட ஒரு விளையாட்டு..


விடுதலை அடைந்தும் இன்றுவரை தமிழர்கள் நீதிமன்றத்திலும் அரசு அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் தமிழர்கள் யாருமே கேட்காமல் மீடியாக்களால் முதன் முதலாகக் கிடைத்த மொழிபெயர்ப்பு எது தெரியுமா? கிரிக்கெட் வர்ணனை ..வானொலி காலங்களிலே , அதைப் பற்றி தெரிந்தவர்கள் 5 விழுக்காடுக்கும் குறைந்து இருந்த போதிலும் கிரிக்கெட்டைப் பரப்ப ஆதிக்க சக்திகள் வர்ணனையை 70களிலேயெ தமிழ்ப்படுத்தி அறிமுகம் செய்தனர்.. இது ஒரு வியாபார உத்தி.. தொலைக் காட்சிகளில் தொகுப்பாளர்கள் என்ன தான் தமிழைக் கொலை செய்தாலும் , விளம்பரம் மட்டும் தமிழில் தான் வரும்..ஏனென்றால் வியாபரம்..காசு.. 90களுக்குப் பிறகு வந்த தொழில் நுட்ப முன்னேற்றத்தால், செயற்கைகோள் உதவியுடன் விடு தோறும் இது திணிக்கப்பட்டது.. தொலைக் காட்சிகளும் கோத்ரா ரயில் எரிப்பை விட அப்பொழுது நடைபெறப் போகும் உலகக் கோப்பை பற்றிதான் அதிகம் கவலைப்பட்டன..அதனால் தான் 7 அல்லது 8 நாடுகளே கலந்து கொள்ளும் ஒரு போட்டிக்கு உலகக் கோப்பை என்று பெயர்..இந்தப் பித்தலாட்டத்தை கேட்கும் நிலையில் யாரும் இல்லை.. ரசிகர்கள் எல்லோரும் ஒரு உன்மத்த நிலையில் இருக்கும் போது என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம்..என்பது தான் இதன் அடிப்படைத் தத்துவம்.

விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..அண்மையில் நடந்த கால்பந்திற்கான உலகக் கோப்பையின் எல்லாப் போட்டிகளையும் அனுபவித்துப் பார்த்தவன் . பாரதியாரின் “ஒடி விளையாடு பாப்பா” என்பது என் தாரக மந்திரம் போன்றது.. ஆனால் அது மாலையிலோ, காலையிலோ ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ வியர்க்க வியர்க்க விளையாடவேண்டும்.. 8X5 நாட்கள் தொடர்ந்து விளையாடி வெற்றி தோல்வி இன்றி முடிந்து நமது காதுகளில் பூக்கள் சுற்றுவது இந்த விளையாட்டு மட்டும் தான்.. இங்கிலாந்தில் வெய்யிலில் நாள் முழுதும் நிற்க கண்டுபிடித்த ஒரு பொழுதுபோக்கை விளையாட்டு என்று நினைத்து நமது தமிழக மக்கள் வெய்யிலில் நிற்பதைப் பார்த்தால் ’நெஞ்சு பொறுக்குதில்லையே” ..டெஸ்ட் போட்டிகளால் நேரம் தான் வீணாகிறது என்று மக்கள் முடிவுக்கு வரும் நிலையில்., கூட்டம் குறைவைதைப் பார்த்து ,ஒரு நாள் போட்டிகள்., அதற்கும் கூட்டம் குறையத் தொடங்கவே 20/20(கூட்டம் என்று நான் குறிப்பது வருமானம்) என்று தமிழ் திரைப்படங்களில் விறுவிறுப்புக்கு எதையாவது சேர்த்து படத்தை ஓட வைக்க விரும்பும் நிலைதான் இங்கும்.. ஏனென்றால் இரண்டுக்கும் வருமானம் தான் முக்கியம்..

Team work என்பது அறவே இல்லாத ஒரு விளையாட்டு..அதனால் தான் இந்தியா தயாரித்த வீரர்களில் கபில்தேவ் , ஸ்ரீகாந்த் தவிர யாருமே இன்றுவரை நாட்டுக்காக விளையாடியதாகத் தெரியவில்லை. எல்லொருமே தனக்காகத் தான் விளையாடுவார்கள்..சமூகத்தில் கால்பந்து போன்ற குழு ஒத்திசைவுடன் இயங்கும் விளயாட்டு ஒதுக்கப்பட்டு, கிரிக்கெட் போன்ற தனிநபர் ஆட்டத்திறனை முன்னிறுத்தும் கிரிக்கெட் வளர்ச்சிக்கும்,கூட்டுக் குடும்ப சிதறல்களுக்கும் தொடர்பு இருக்குமா என்பது சமூக வல்லுநர்களால் ஆராயப்படவேண்டிய ஒன்று..

இத்தனைக்கும் மேலாக, இன்று சூதாட்டம் தான் இதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.இதை யாருமே மறுக்க முடியாது..

அரசு அதிகாரம், அதில் உள்ள உயர்ஜாதி ஆதிக்கம்,உயர்ஜாதி ஆதிக்கத்தின் பிடியில் இன்று வரை உள்ள மீடியாக்கள் இவை அனைத்தும் சேர்ந்து கிரிக்கெட்டை உச்சத்தில் வைத்துள்ளன..மக்கள் சேவை செய்ய வந்த மத்திய அமைச்சர் கூட, இதில் அதிகம் பணம் புழங்குவதால், அமைச்சர் பதவியை விட்டு விலகி, கிரிக்கெட் அமைப்பிற்கு தலைவராகச் செயல்பட விருப்பமாக உள்ளார்.


இந்தக் கட்டுரைக்கு என் வீட்டிலேயெ எனக்கு பலத்த எதிர்ப்பு இருக்கலாம். என் மகன்களே எதிர்ப்பார்கள்.ஆனாலும் நான் எழுதுவதன் காரணம் இந்தியாவை நான் நேசிக்கிறேன் ..அதாவது இந்தியா என்ற தேசத்தை அல்ல.. இந்திய நாட்டின் மக்களை, வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் 60 விழுக்காடு மக்களை.. ஆகவே இந்திய முன்னேற்றதிற்கு தடையாக இருக்கும் பல காரணங்களில் மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது மதத் தீவிரவாதம், கிரிக்கெட் சூதாட்டத்தின் நேரவிரயம்..


இதன் பிடியிலிருந்து தமிழர்கள் வெளிவரவேண்டும் என்பது தான் என் ஆசை.இன்னும் சில வருடங்களில் இந்தியா திரும்பியவுடன் அங்கங்கு உள்ள நண்பர்கள்,உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டவர்களை ஒருங்கிணைத்து தமிழர்கள் மனதில் முன் இருக்கையில் இருக்கும் கிரிக்கெட்டை அந்த இடத்தில் இருந்து பின் இருக்கைக்கு நகர்த்தி ஒரு கால்பந்தோ, வாலிபாலோ, ஹாக்கியோ முன் இருக்கையில் குடியேற்றி வைக்க வேண்டும்., அதற்காக ஒரு இயக்கம் தேவைப்பட்டால் கூட ஆரம்பிக்கலாம்..

ஆதரவு வேண்டி நிற்கிறேன்
நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

புதன், 15 செப்டம்பர், 2010

முள்ளிவாய்க்கால் அவலம் – மலையாளிகளின் துரோகம்

முன்பொரு காலமிருந்தது
ஈழத்தில் அழுத கண்ணீர்
இங்கே பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஒடி
தீயை உசுப்பிவிட்ட காலம்..

முன்பொரு காலமிருந்தது.

......

குப்பியணிந்த சிறுவர்கள்
ஒருகையில் துவக்கும்
மறுகையில் புல்லாங்குழலுமாய்
புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட காலம்

தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை

முழக்கங்களின் கவர்ச்சியில்
மூழ்கிக் கிடந்த காலம்

முன்பொரு காலமிருந்தது

கேப்றன்,கேணல்
தேசியத் தலைவர் மாவீரர்
பட்டங்களே அடையாளமாய்
மாறிவிட்டிருந்த காலம்..

முன்பொரு காலமிருந்தது

செய்தியாளர் சந்திப்புக்கு
உலகமே திரண்டு வந்து
முண்டியடித்து நினற
அப்படியொரு காலமிருந்தது.... ரவிக்குமார் எம்.எல்.ஏ.


1983 கருப்பு ஜூலை என் வாழ்நாளில் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திச் சென்ற மாதம்.23வயசு எனக்கு.அதுவரை இலக்கியம்,திரைப்படம் என்று மட்டுமே இருந்த என்னைப் புரட்டிபோட்ட மாதம். என் தொப்புள் கொடி உறவுகள் கொலை செய்யப்பட்டு, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு ,போராளிகளின் கண்கள் பிடுங்கப்பட்டு மிகக் கொடுமையான சிங்கள வன்முறைக்கு ஆளான நேரம்..அதுநாள்வரை இலங்கை வானொலி நிலையம், ஸ்ரீலங்கா டீத்தூள், ராணி சோப் என்று மட்டும் நான் அறிந்த இலங்கை எனக்கு வேறு முகம் காட்டிய மாதம்..

அன்றிலிருந்து மே 17,2009 -முள்ளிவாய்க்கால் பேரழிவு நடைபெற்ற தினம் வரை, என் உடல் , உணர்வு அனைத்திலும் நிரம்பி இருந்த ஒரு கருத்தாக்கம், தமிழீழம்.அன்றிலிருந்து என் வாழ்க்கை முறையையே, என் அன்றாட நிகழ்வுகளைக்கூட, தமிழீழம் நோக்கிய பயணத்திற்காகவே மாற்றி அமைத்துக் கொண்டேன்.

1992 வரை இந்தியாவில் நான் இருந்த காலம் வரை ஈழத்திற்காக எந்தவொரு போராட்டம் என்றாலும் நானும் இருப்பேன்..கட்சி சார்பற்று அனைத்து போராட்டங்களிலும் நான் இருந்தேன்..நான் தி.மு.க சார்பு உள்ளவன் என்று என்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை நான் மதிக்க கற்றுக்கொடுத்தது ஈழப் போராட்டம் தான்..தமிழக அரசியலில் என்னால் அறவே வெறுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஈழப்போராட்ட ஆதரவு காரணமாக என்னால் அதிகம் கவரப்பட்டார்.. அந்த அளவுக்கு ஈழம் கிடைக்குமென்றால் எந்த சமரமும் செய்து கொள்ளலாம் என்று எனக்குப் பட்டது..


1987 செப்டம்பர் 26 . என் பாசத்துக்குரிய தோழர் தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்று சொல்ல முடியாத சோகத்துடன், வீட்டை விட்டு வெளியில் செல்ல மனமில்லாமல் இருந்த பொழுதுதான், மருத்துவமனை சென்றிருந்த என் மனைவி, தான் முதல் முதலாக கருவுற்ற செய்தி கொண்டு வந்து சந்தோசத்தில் என் முன்னர் நின்றார்..அப்பொழுது நான் என் மனைவியிடம் சொன்னது..ஆண் குழநதை என்றால் திலீபன் என்று பெயரிடுவோம்.. தமிழீழம் என்ற எனது வேட்கையை அணைக்காமல் இருக்க என் வீட்டுலேயே திலீபன் வளரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவே அநதப்பெயரை என் குடும்ப உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புகளோடு , அதே சமயம் மனைவியின் ஆதரவோடு என் மூத்த மகனுக்கு திலீபன் என்ற பெயர் வைத்தேன்..


தமிழீழம் என்பதை ஈழவிடுதலையாக மட்டும் நான் பார்க்கவில்லை..நாடான்ற தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்பது இன்றும் என்றும் எனது ஒரே கனவு.ஒரே பேராசையும் கூட..

28 வருஷம் சுமந்த கனவு..

விடுதலைப்புலிகளின் மேல் எனக்கும் விமர்சனங்கள் உண்டு..இருந்தாலும் களத்தில் நின்றவர்கள் அவர்கள் மட்டுமே. கடைசிவரை மரபு வழிப் போரில் இருந்து கொரில்லாப் போருக்குத் திரும்பாமல், உயிர் போகும் வரை களத்தில் நின்றவர்கள் எம் விடுதலைப் போராளிகள். அவர்களுக்கு வீர வணக்கம்..

விடுதலைப் போராளிகள் தான் மரபு வழிப்போரில் இருந்தார்களே தவிர, இந்திய அரசு பின்னனியில் இருந்து நடத்திய இந்தப் போரில் சிங்கள ராணுவத்தால் அனைத்து மனித உரிமைகளும் மீறப்பட்டன.2008 ஆண்டு பின் பகுதியிலிருந்து 2009 மே18 வரை நடந்த அனைத்து அத்துமீறல்களும் ”யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்” (யு.டி.எச்.ஆர்)என்ற அமைப்பால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.முடிந்தால் பார்க்கவும் நெஞ்சு வெடித்துவிடும்.


2008 அக்டோபர் முதற்கொண்டு தொடர்ந்து, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று தமிழகம் முழுதும் போராட்டங்கள் பலவழிகளில் தொடர்ந்தும் , அதன் உச்சகட்ட நிகழ்வாக தியாகி முத்துக்குமரன், தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டும் அதன்பிறகு 16 உயிர்கள் தீக்கிரையாகியும் , ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் தாய்த் தமிழர்களாகிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாத வேதனை, நம் கையாலாகத்தனம், என்னை என் சாவு வரைத் துரத்தும்.

கடைசிவரை 6 கோடித்தமிழர்களின் கூக்குரலுக்கும், போராட்டங்களுக்கும், தீக்குளிப்புக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசு நடத்திய இந்த இன அழிப்பு மனதால் கூட மன்னிக்க முடியாதது..தரை,வான்,கடல் என் முப்படைகளும் இருக்க, வங்கி,அஞ்சல்,மருத்துவம் என அனைத்துச் சேவைகளுடன் நடைபெற்ற ஒரு தமிழ் அரசை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்திய காங்கிரஸை என் ஏழேழு ஜென்மத்திலும்(அப்படி ஒன்று இருந்தால்) மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. காதுகளை மறைத்துக் கொண்டு தலைப்பாகையுடன் தமிழக எம்.பிக்கள் முன் மன்மோகன் அமர்ந்திருக்கும் புகைப்படம் எனக்கு சொல்லும் சேதி நம் குறைகள் எதையுமே காதில் வாங்கக்கூடாது என்பதாகத் தான் எனக்குப்பட்டது.நமது அழுத்தத்தினால் இலங்கை சென்ற அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப், அங்கு சென்று போரில் எவ்வளவு தூரம் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது என்று கேட்டு, அதற்கு தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்கு கொடுத்து வந்தது முழுக்க முழுக்க நம்பிக்கைத் துரோகம்.


இதற்கு சோனியா தலைமையிலான காங்கிரஸ்தான் முழுக்காரணம் என்றாலும், உண்மையான காரணம் இந்திய வெளியுறவுத்துறையே.. என்னதான் இந்தியா ஒரு தேசம், ஒருமைப்பாடு என் உயிர் என்றெல்லாம் தமிழர்கள் ஒன்றிணைந்தாலும், மலையாளிகளுக்கு என்னமோ அதல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இங்கிலாந்திற்கு முதல் இந்தியத்தூதுவராகப் பணியாற்றியவரும் அதன் பின்பு ஐ.நாவிற்க்கான இந்தியக்குழுவிற்கு தலைமை வகித்த வி.கே.கிருஷ்ணமேனன் இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் முன்னின்றவர்.. அவர் காலத்தில் வெளியுறவுத் துறையில் நுழைந்த மலையாளிகள்,அந்தத் துறையையே, ஏதோ கேரள அரசின் ஒரு பகுதியாகத் தான் இன்று வரை பார்க்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறையை இந்திய மலையாளிகள் துறை என்று பெயர் மாற்றம் செய்யலாம். ஐ,நாவில் இருந்த சசி தரூர், இன்றும் உள்ள விஜய் நம்பியார், எம்.பி.நாராயணன்.. சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலராக இன்று இருக்கும் நிரூபமா அனவருமே மலையாளிகள்.. இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சரான ஏ.கே.அந்தோனி ஆகியவர்கள் ராஜபக்‌ஷேவுடன் இணைந்து நடத்தியது தான் இந்த இன அழிப்புப் போர்.. இந்திய இறையாண்மை, இந்திய அரசின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் சொல்லி முதலில் இந்திய உளவுத்துறை”ரா” வால் விடுதலைப் புலிகளை முடிக்கப் பார்த்த இவர்கள் இன்று, ராஜீவை இழந்த சோனியா,ராகுல் காலத்தில் தான் இதை நடத்தி முடிக்க முடியுமென்று திட்டமிட்டு முடித்தது இந்த மலையாளிக் கூட்டணிதான்.இதற்கு இங்குள்ள ராஜபக்‌ஷேவின் தூதுவர் இந்து ராம் ,சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் துணை..

தமிழகத்தில் இருந்து அமைச்சர் பதவி கேட்போர், பணம் பண்ணும் துறைகளையே கேட்டுப்பெறாமல், உண்மையிலேயே உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், முதலில் கேட்டுப் பெறவேண்டியது இந்த வெளியுறவுத் துறையே. வெளியுறவுத்துறை கைக்கு வந்தாலும் உடனடியாக மாற்றம் கொண்டு வரமுடியாது. துறை முழுதும் களை எடுக்கப் பட வேண்டும். உண்மையான இந்திய பாதுகாப்பு எது என்று தெரியப்படுத்த வேண்டும். கிருஷ்ண மேனன் காலத்திலேயே அவரது தவறான கணிப்பால் தான் சீனா நம்மீது படை எடுத்தது. அந்தத் துறையின் தவறான போக்கால் தான் இந்தியாவின் நாலு பக்கமும் பாதுகாப்பு பலவீனப்பட்டு உள்ளது. இதுவரை பாதுகாப்பாக இருந்த தென்னிந்தியாவின் பாதுகாப்பையும் இப்போது கேள்விக்குரியதாக்கி இருக்கிறார்கள்.
வெளியுறவுத்துறையை கேட்டுப் பெற்று தேவையான மாற்றங்கள் செய்தால் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து இந்தியர்களுக்கும் அது தான் பாதுகாப்பு. இந்தியாவிற்கும் பாதுகாப்பு.

அப்பொழுதுதான் உலகமெங்கும் வாழ் தமிழர்களுக்கு மட்டுமில்லை.. தினந்தோறும் பிழைக்கப்போய் குண்டடிபட்டு வந்து நிற்கும் என் சொந்த மண்ணைச்சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் உயிருக்கும் அது தான் பாதுகாப்பு..

அதுநாள்வரை உலகத்தமிழர்களுக்கும் மட்டுமல்ல..என் மீனவத் தோழர்களுக்கும் நாதியில்லை என்பது தான் உண்மை.

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தெய்வம் என்பதோர்... பேராசிரியர்.தொ.பரமசிவம்...




(இது பிப்ரவரி 25 அன்று வெளியிட்ட கட்டுரை . கட்டுரையின் முக்கியத்துவம் கருதி இந்தக் கட்டுரை மீள் பதிவேற்றம்)

இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து தொ.பரமசிவம் அவர்கள் எழுதியுள்ள “தெய்வம் என்பதோர் “ என்ற நூலை எடுத்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக புரட்டும் போதுதான் ..ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருப்பதாகப்படும்..ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நானே முடிவெடுத்துக் கொள்வேன்..இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன..

அதே மாதிரிதான்..தொ.பரமசிவம் அவர்களை பேராசிரியர் என்பதா ஆய்வாளர் என்று எழுதுவதா? என்ற குழப்பத்திலே நாட்கள் ஓடியதும் உண்டு..பேராசிரியர் அவர் பணி. ஆகவே அவரை பேராசிரியர் என்று அழைக்கலாம்தான். ஆனால் நான் நேரில் பார்த்துள்ள பேராசிரியர்கள் என் கண் முன்னர் வந்து போவார்கள்.அவ்வளவுதான் பேராசிரியர் என்று அவரை அழைத்து இழிவு படுத்த வேண்டாம் என்று முடிவெடுப்பேன்..அப்புறம் முனைவர் என்று எழுதலாம் என்றாலோ ஆய்வாளர் என்று எழுதலாம் என்றாலோ இந்த அடைமொழிகளுடன் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலோரை நினைத்து தொ.பரமசிவம் அவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன்., எந்த அடைமொழிகளுடன் அவரை அழைத்தாலும், யானையைப் பார்த்து கண் பார்வை இல்லாதவர்கள் சொன்ன கதையாகிப் போகும்.. அவருடைய ஆளுமையின் ஒரு பகுதிக்குத்தான் எந்த அடைமொழியும் பொருந்தும்.முழு ஆளுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல் தேவை..

ஏன் இவ்வளவு முன்னுரை? ஒரு சங்கை அளவாக வைத்துக்கொண்டு கடல் நீரை அளக்க முடியுமா?அந்தப் பயம் தான் எனக்குள்ளும்.. என் அறிவு சங்கு என்றால் அய்யவின் அறிவு கடல்..

தேவநேயப்பாவாணர் அவர்களைப் பற்றிச் சொல்வார்கள்.தனி மனிதனாக இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணிகளை செய்தவர் என்று. அது மாதிரிதான்.. தொ.ப அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்திற்கு இணையானவர். அவருடைய பண்பாட்டு அசைவுகள் என்ற நூலுக்கு ஆ.இரா.வேங்கடசலபதி எழுதியுள்ளது போல் தொ.ப., அவர்களிடம் இருந்து தெறிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை..


2007 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள் பாளயங்கோட்டையில் அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் இருந்தேன்..அந்த மணித்துளிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இரண்டு மணி நேரத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் , ஒரு புதிய புத்தகம் போடும் அளவு இருந்த்து..மறுபடியும் சலபதி வார்த்தைகளையே கடன் வாங்கிக் கொள்கிறேன்..”நாம் நனகு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில், புதிய ஒளி பாய்ச்சுவதும், பயனற்ற ஒரு சொல் அல்லது ஒரு பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சொல்வதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை”

”தெய்வம் என்பதோர்” என்ற இந்தப் புத்தகத்தை புத்தகம் என்பதா? ஆய்வுக்கட்டுரை என்பதா? என்றே தெரியவில்லை..


அடிப்படையில் தொ.ப,.,அவர்கள் ஒரு பெரியாரியச் சிந்தனையாளர்.அவர் சிறு தெய்வஙகள் பற்றியும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றியும் எழுதுவதும் அதனை பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளோடு இணைக்கும் அவர் கண்ணோட்டம் தமிழக ஆய்வுலகில் மிகவும் புதியது மட்டுமின்றி மிக முக்கியமானது. தாய்த் தெய்வ வழிபாடு பற்றி மிக அருமையான மூன்று கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன..


”நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாடல் , ஒரளவு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களிடம் ‘சாமியாடி,குறுதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே விரிகிறது.இந்தக் கணிப்புகள் அனைத்துமே தவறானவையே..நாட்டார் தெய்வங்கள் தத்துவ விசாரங்களில் நொறுங்கிப்போகும் அளவுக்கு மெலிதானவையல்ல.. அவற்றின் வேர்கள் வலிமையானவை அவை வட்டாரத்தன்மையும் உயிர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டவை. இந்தப் பன்முகத்தன்மை எனபது சைவம், வைணவம்,ஸ்மார்த்தம், இஸ்லாம்,கிறித்துவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகும்”-பக்கம் .84


அய்யா தொ.ப., அவர்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் புதியது மட்டுமின்றி மேலும் விவாதத்தை வேண்டி நிற்பவை.சைவம், வைணவம்,இஸ்லாம், கிறிஸ்துவம் ., அனைத்தும் நிறுவனம் சார்ந்த மதஙகள் என்றும் ‘நிறுவனம் “ என்று வந்துவிட்டாலே ‘மேல்-கீழ்’என்ற வரிசை முறையுடன் தான் தமது அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன..ஆனால் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இந்த இலக்கணத்தில் இருந்து மாறுபட்டு நிற்கின்றன..

இந்தக்காரணத்தினால் தான் அதிகார மையமாகத் திகழந்த கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து வந்த தந்தை பெரியார்,, ஆண்டு முழுவதும் மண்மேடாக் கிடந்து ஆண்டில் ஒரு முறை தெய்வமாக உருப்பெரும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர் கொள்ளவில்லை..

இந்த முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழியில் தான தொ.ப., நமது சிந்தனையின் அனைத்து கதவுகளையும் சாளரங்களையும் திறந்து கொண்டே செல்கிறார்..


நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு நூல்களில் இருந்து ஆதாரம் திரட்டி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் ஆய்வாளர் அல்ல..தொ.ப.., கிணற்றடிகளில், கோயில் பிரவாகத்தில், தெருக்களில்,சாவு வீட்டு முற்றத்தில் , அங்கு கிடைக்கும் ஒப்பாரிகளில், கிராம சொலவடைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் என பல்வேறு களங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களோடு தனது ஆய்வுகளை முன் வைப்பது தான் தொ.ப., வின் அரிய பணியாகும்.
இன்னுமொரு முக்கியமான கட்டுரை..

”இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும்,நம்பிக்கைகளையும்,வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...”

சமய நல்லிணக்கத்தின் ஆணிவேர் எது என்பது பெரியாரியவாதியான அய்யா தொ.ப., அவர்களுக்கு நன்கு தெரிகிறது என்பதால் தான் .. இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும் என்கிறார்..கோயிலுக்கு நுழைய முடியாத ஒரு கூட்டம், கருவறைக்குள் நுழைய முடியாத் ஒரு கூட்டம்..கருவறைக்குள் மட்டுமே இருக்கும் ஒரு கூட்டம் ..இதெல்லாம் சேர்ந்தது தான் ” இந்து” என்பது ஒரு பித்தலாட்டமாகவே தான் தெரிகிறது.

தமிழ் சமூகத்தின் மீது காதல் கொண்ட அனைவரும் அய்யாவின் எழுத்துக்களை தேடிப் படியுங்கள். கண்டிப்பாக ஒரு புதிய உலகம் தரிசனம் கிடைக்கும்..வாய்ப்பு கிடைத்தால் அய்யாவை நேரில் சந்தித்துப் பேசி ஒவ்வொரு மணித்துளிகளையும் அனுபவியுங்கள்..அவர் நிறைய எழுதவில்லை..ஆகவே அவரைப் பார்க்கச் செல்பவர்கள் ஒலிப்பதிவு கருவியடன் சென்று , பேச்சுப்போக்கில் தெறிக்கும் அனைத்து சங்கதிகளையும் சேமிக்கவும். மிக முக்கியமான சுவையான செய்திகள் உங்கள் தெருவிலே இருந்திருக்கும் ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்காது..அப்படி உள்ள செய்திகளாகச் சொல்லி புது வெளிச்சம் பாய்ச்சுவது தான் தொ.ப.,வின் உலகம்..

குறிப்பு: அய்யா தொ.பரமசிவம் படங்கள் தமிழினப் போராளி பாமரன் அவர்கள் வலைப்பதிவில் இருந்து அனுமதி பெறாமல் எடுத்தது.அதற்கான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வலைப்பதிவின் முகவரி: http://pamaran.wordpress.com


அன்புடனும் நன்றியுடனும்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com

ஊடகங்களில் குடும்ப ஆதிக்கம்

சமீபத்தில் என் நண்பருடைய முகநூலில் நிலைத்தகவல் (ஃபேஸ்புக் ஸ்டேடஸ் மெசெஜ்) படித்தேன். தன் ஊருக்குச் சென்றவர் அங்கு இருக்கும் நான்கு திரையரங்களிலும் ஒரே குடும்பத்தைச் சேரந்தவர்களின் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக.. கலைஞரிடம் கேட்டால் அது அவர்கள் தொழில் என்பதாகச் சொல்வார். சன் குழும தொலைக்காட்சி மட்டுமின்றி கலைஞர் குழுமம் மொத்தமாக 10 சானல்கள் , அது மட்டுமின்றி, தற்பொழுது, மூன்று மகன்களின் நிறுவனங்களும் தமிழ்ப் படத்தயாரிப்பிலும், விநியோக வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். கூடியவிரைவில் கனிமொழியும், கௌதம்மேனன் இயக்கதில் தமிழ்ப்படம் தயாரிக்க உள்ளதாக ஒரு செய்தியும் படித்தேன். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.


பத்திரிக்கை திரைப்படம் இரண்டுமே கலைஞர் அவர்களால் மிக விரும்பிச் செய்யப்படும் பணி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.கலைஞர் அவர்கள் இந்த இரண்டு துறைகளையுமே தன் அரசியல் பணிக்கு ஒரு பிரச்சாரமாகப் பயன்படுத்தியது தமிழக வரலாறு. ஆதலால் இன்று அவர்கள் வாரிசுகள் இத்தொழில் இறங்கி இருப்பது எனக்கு ஆச்சர்யமில்லை.அது அவர்கள் தொழில் என்பதால், அதை அவர்கள் லாபகரமாகச் செய்வதிலும் நமக்கு ஏதும் வருத்தமில்லை.


நம் வருத்தம் எல்லாம் ,ரசனை சார்ந்த விஷயங்களை, பொது நலன் சார்ந்த விஷயங்களில் கருத்துக்களை தீர்மானிக்கும் சக்தியாக ஒரு குடும்பம், அதன் ஊதுகுழலாக பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களும் ஒரே அணி என்று இருந்தால், அது மக்களாட்சிக்கு எந்த விதத்தில் உதவும் என்பதுதான். இது தவிர இப்பொழுது தினமலரும், இந்து நாளிதழுமே ஆளுங்கட்சியின் அதிகாரபூரவமற்ற செய்தி நிறுவனங்களாக மாறிப் போய்விட்டதாகத் தெரிகிறது.மக்கள் பிரச்னைகளில் தி.மு.க என்ற கட்சி எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் கருவியாகத்தான் இந்த ஊடகங்கள் பயன் படும் என்பதைத் தவிர அவர்கள் எடுத்த அந்த முடிவு சரியா தவறா என்ற பொது விவாதத்திற்கு இங்கு இடமிருக்காது. மாற்றுக் கருத்துக்கே இடமில்லாத சூழல் மக்களாட்சிக்கு விரோதமானது என்ற கருத்தை கலைஞர், கனிமொழி என்ற இரண்டு எழுத்தாளர்களுமே ஆதரிப்பார்கள்.


மாற்றுச் சிந்தனைக்கு இடங்கொடுக்க இந்த நேரத்தில் நம் முன்னர் உள்ள தொலைக்காட்சிகள், மக்கள் தொலைக்காட்சியும் ஜெயா வுமே..விஜய் டிவி அரசியல் சார்ந்ததல்ல. மேலும் அது காங்கிரஸ் கட்சி மாதிரி தமிழகத்தை தாண்டி வேறு இடத்தில் இருந்து நிர்வகிக்கப்படுவது..அவர்களுக்கு தமிழக அரசியலோ, தமிழ் மக்கள் பிரச்னைகளோ முக்கியமாகப் படுவது இல்லை. அதனால் தான் அவர்கள் லைவ் ஷோக்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.


மக்கள் தொலைக்காட்சியின் ஆரம்ப கால நிகழ்ச்சிகள் கண்டு நான் மிகவும் மகிழ்வுற்று திண்ணை இணைய இதழில் அதை வரவேற்று கட்டுரை ஒன்று கூட எழுதியுள்ளேன். ஆனால் மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் அவர்கள் தோற்றுவிட்டதாக அறிகிறேன்.

ஜெயா தொலைக்காட்சியால் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க முடியும்.ஆனால் இன்றுவரை அது ஒரு கட்சி சார்பான தொலைக்காட்சி என்ற அளவில் தான் இருக்கிறதே தவிர, அந்த வட்டத்தை விட்டு இன்று வரை வெளிவரமுடியவில்லை.வரும் காலத்திலும் ஜெயா டிவி நிர்வாகத்தால் அந்த புதைகுழியில் இருந்து வெளிவரமுடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

இந்த நேரத்தில் தான் வலைப்பதிவர்களின் பணி முக்கியமாக எனக்குப் படுகிறது.

ஒரு திரைப்படம் வெளிவந்த உடனேயெ சுடச்சுட தன் கருத்துக்களை பதிந்துவிடத் துடிக்கும் எண்ணற்ற வலைப்பதிவர்கள் மத்தியில், ஒரு 10 விழுக்காடு வலைப்பதிவர்கள் பொது விஷயங்களில் மக்கள் ஆதரவுடன் மக்களுக்கான கருத்தை திரட்ட தம் வலைப்பதிவுகளை பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.


சென்ற மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அடைக்கப்பட்ட சவுக்கு இரண்டே நாளில் வெளிவந்ததற்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் தற்காலிக இடைநீக்கம்,திரும்பிப் பெறப்பட்டதற்கும் வேறு ஏதும் அரசியல் காரணங்கள் இருந்தாலும், வலைப்பதிவர்கள் ஒன்றுபட்டு கொடுத்த எதிர்ப்புக் குரலும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..
ஆகவெ பொது நலன் சார்ந்து சிந்திக்கும் அனைத்து வலைப்பதிவர்களும், அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோதமாக இருந்தால் அதை எதிர்த்தும் துணிச்சலுடன் பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..


இது மட்டுமின்றி, ஃபேஸ்புக்,ஆர்குட்,டுவிட்டர் போன்ற பொதுத் தளங்களிலும் தங்களது கருத்துகளை ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் பதிவிட வேண்டுகிறேன்

இது ஒன்று தான் இப்பொழுது நம்முன் உள்ள ஒரே வழி..

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

திங்கள், 13 செப்டம்பர், 2010

இறை நம்பிக்கை

கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது—ஐன்ஸ்டீன்

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் வலைத்தளங்களில் அய்யா தருமி, வால்பையைன், All inAll அழகுராஜா,ருத்ரன் போன்றவர்களின் தளங்கள். எனது விருப்பத்திற்கு முதல் காரணம் இவர்கள் அனைவருமே இறை நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துவது தான்..

சிவகங்கை ஒத்த அக்ரஹாரத்தில் வளர்ந்தவன் நான்.. சிறு வயதில் கோவில் கோவிலாக திரிந்தவன்.மார்கழி மாதங்களில் 4 மணிக்கு எழுந்து எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தவன்.. கல்லூரிப் பருவத்தில் எனக்குள் ஏற்பட்ட கருத்து மாற்றங்கள், பெரியாரிஸம், கம்யூனிஸம் போன்ற சித்தாந்தங்கள் என்னை கவரவே, எப்பொழுது கடவுள் என் மனதில் இருந்து வெளியேறினார் என்று தெரியவில்லை.பகலவனைக் கண்ட பனி விலகுவது போல அதிகம் படிக்கப் படிக்க கடவுள் எப்பொழுது என் மனதில் இருந்து விலகினார் என்று சொல்லத் தோன்றவில்லை.கல்லூரிக்கு நுழைந்த காலத்தில் நான் படித்த ராகுல சாங்கிருத்தாயனின் “வால்கா முதல் கங்கை வரை” , என் சிந்தனைகளைத் திருப்பிப் போட்ட புத்தகம்.


கடவுள் இருக்கிறார் என்று எடுத்துக் கொண்டாலும், கடவுள் இயற்கைக்கு முன்னர் தோற்று, இருந்த இடம் தெரியாமல் போன சந்தர்ப்பங்களை இந்த 50 வருட வாழ்க்கையில் பலமுறை நான் சந்திக்க நேர்ந்தது.. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்து எங்கு இருக்கிறார் என்று விளம்பரப்படுத்தும் நிலையில் நாம் வணங்கும் அனைத்து கடவுள்களும் தோற்றுபோன சம்பவம் சுனாமி ஆகும்..இது கடவுள் இயற்கையிடம் தோற்றுப்போன சம்பவம்.. இரண்டாவது முள்ளிவாய்க்கால் அவலம்..இது அரசு அதிகாரத்தின் முன்னர் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவம்.. ஒட்டுமொத்தமாக ஒரு இனமே கடவுளுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன? அப்படி ஒரு இனமே பிடிக்காமல் போன கடவுள் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? அறிவுள்ள மக்களால் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவங்கள் இங்கு ஆயிரக்கணக்கில் உண்டு.அறிவியல் கண்டுபிடிப்புகளை மட்டும் சொல்லவில்லை. தான் தான் கடவுள் என்ற பிம்பத்தை கட்டமைத்துள்ள பங்காரு அடிகளார் முதல் நித்தியானந்தா வரை, கடவுளை தோற்கடித்தவர்கள் தான்.


கடவுளே கேள்விக்கும் கேலிக்கும் ஆளான சந்தர்ப்பங்களே அளவிட முடியாமல் இங்கு இருக்கும் போது,கடவுள்களைத் தூக்கி நிறுத்தப் புறப்பட்ட மதங்கள் நிலை இன்னும் கேலிக்குரியதாகி இருக்கிறது..


மனிதனின் இன்றைய வாழ்வே கேள்விகளால் ஆனது.ஆனால் மத நம்பிக்கைகளை மட்டும் கேள்விகள் கேட்கக்கூடாது என்பதே ஒரு பெரிய பித்தலாட்டம்..

அதிலும் எந்த கேள்வியைக் கேட்டாலும் என் முன்னோர்கள் சொன்னார்கள். என் வேதப் புத்தகத்தில் இருக்கிறது..கடவுள் அருளிச் செயத எங்கள் புத்த்கத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதை விட மடத்தனம் எதுவும் இல்லை.கடவுளால் சொல்லப்பட்ட புத்தகம், கடவுள் மறந்து போனதைச் சொல்ல அப்புத்தகத்திற்கு உபநூல் என்று ஏகப்பட்ட தொகுப்புகள். முன்னோர்கள் சொன்னதோ, புத்தகங்கள் சொல்வதோ , உன் அறிவுக்கு அது சரியாகப் படுகிறதா என யோசிக்காதவன் மனிதனாக இருக்கவே தகுதி இல்லாதவன்.


தந்தை பெரியார் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். ””மதம் எப்படி ஏற்பட்டது? மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் , அவரவர் புத்திக்கு தகுந்த படி ”மக்கள் நன்மைக்கு” என்ற கருத்திலே சொல்லப்பட்ட விஷ்யங்கள் தான்.பெரும்பாலும் இதை எந்த மனிதனும் ஒத்துக் கொள்வான். மற்றும் அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் இருக்கிற வித்தியாசம், அந்தக் காலத்து மனிதனுக்கு இருந்த அறிவுக்கும், இந்தக் காலத்து மனிதனுக்குள்ள அறிவுத்திறமை இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தையும் எந்த மனிதனும் ஒத்துக் கொள்வான்.ஆனாலும் அவர்கள் பெரியவர்கள் தெய்வீகத் தனமை கொண்டவர்கள் அவர்கள் சொல்வதை நாம் கண்டிப்பாய் பின்பற்ற வேண்டும் அது எக்காலத்திற்கும் ஏற்றது என்று எதைஎதையெல்லாமோ சொல்லி அதை நிலைநிறுத்த்த் தகுந்த வண்ணத்தில் பேசுவார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் மனிதனும் மதமும் என்றாலே அறிவும் மடமையும் என்று தான் பொருள் கொள்ளவேண்டும்”””தந்தை பெரியார்.

மேலே சொன்ன பெரியாரின் விளக்கம் என் சிந்தனைக்கும் அறிவுக்கும் பொருத்தமாகப்படுவதால் இதை நான் ஏற்றுக் கொண்டேன்.


”மாற்றம் ஒன்று தான் என்றும் மாறாதது”என்பது வாழ்வின் அடிப்படைத் தத்துவம். இந்த அடிப்படைத் தத்துவத்தையே புரிந்து கொள்ள மறுத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை, இன்றும் அது நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு, கடவுளையும், மதத்தையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு இருக்கும் மனிதர்களை நாம் புறந்தள்ளுவோம்.

நட்சத்திரப்பதிவராக முதல் கட்டுரையாக ஏன் இதை அமைத்துள்ளேன் என்றால், உலக மக்கள் முன் உள்ள மிகப்பெரும் சவால் இந்த மதத் தீவிரவாதம் தான். இன்று இக்கட்டுரை எழுதும் தேதி 9/11. அனவருக்கும் தெரியும்..இந்தத் தேதியில் நடைபெற்ற கோரசம்பவம். தம் மதங்களை நிறுவனமாக்கி அதை முன்னிறுத்த சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து மூளைச் சலவை செய்யப்பட்டு இன்று மிகத் திவீரமாக பரவிவரும் கொடிய நோய்’மதத் தீவிரவாதம்”. கலைஞரால் சிவகங்கை சின்னப்புள்ளை என்று செல்லமாக அழைக்கப்பட்ட மைய உள்துறை அமைச்சர் ப.சி. யை நான் பெரிதும் மதிப்பது இல்லை.. இருந்தாலும் சமீபத்தில் அவர் சொன்ன ”காவித் தீவிரவாதம்” என்ற ஒற்றை வார்ததை அவர்மேல் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஆம் தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரால் வந்தாலும் எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை.

இறுதியாக பெரியார் சொல்வதை மேற்கோள் காட்டி இதை முடிக்கிறேன்.
“கடவுளாகட்டும் மதமாகட்டும்,பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்.அது தனிமனிதனுடைய தனிச் சொத்து. உலகத்திற்கான பொதுச் சொத்தல்ல..ஒழுக்கம், நாணயம்,உண்மை இதெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாயிருந்தால் அது சமுதாயத்திற்கு கேடு”


இன்னொரு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமோ, அதைத் தொடர்ந்து நடந்த இந்துத் தீவிரவாதிகளின் வெறியாட்டமோ, செப்டம்பர் 11 சம்பவமோ நடைபெறாமல் காக்க வேண்டியது நம் இளைஞர்கள் கையில் உள்ளது.. கடவுளையும் மதங்களையும் தூக்கிபோட்டு விட்டு மனித நேயம் காக்க வாருங்கள்

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

தொட்டுத் தொடரும் என் எழுத்துலகம்




நான் ஒன்றும் பிரபலமான பதிவர் இல்லை..அனைத்து தளங்களுக்கும் சென்று படிப்பதோடு சரி. பின்னூட்டங்களும் அதிகமாகப் போட்டது கிடையாது.. ஒரு வருடம் கூட நிறையாத வலைப்பதிவர் நான். இந்த 8 மாதங்களில் நான் எழுதியது மொத்தமே 21 கட்டுரைகள் தான். இருந்தும், எந்தப் பின்புலமும் இல்லாத என்னை நடசத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்து என்னையும் என் எழுத்தையும் கௌரவப்படுத்தியுள்ள தமிழ் மணத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளோடு ஒரு வாரம் என் கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..ஆதரவிற்கு நன்றிகள்.

வலைப்பதிவுக்குத் தான் நான் சின்னவன்., புதியவன்..ஆனால் தமிழ் அச்சு ஊடகங்களுக்கும் எனக்குமான தொடர்பு 30 வருஷங்களுக்கும் கொஞ்சம் அதிகமானது.. இன்றைய ஆனந்தவிகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்திற்கு முன்னோடியான வார இதழ்,1980-ல் திசைகள் மூலமாக திரு.மாலன் அவர்களால் தழிழ் அச்சு ஊடகத்திற்கு அறிமுகம்..


மிகவும் சின்ன வயதிலேயே எனக்கும் புத்தகங்களுக்குமான உறவு ஆரம்பித்துவிட்டது.பெரிய குடும்பத்தில் 11 குழந்தைகளுக்கு நடுவில் ஏழாவதாக பிறந்ததால், வீட்டில் பேசுவது என்பதே அரிது.. அதனால் பொது இடங்களில் ஏற்பட்ட கூச்சம் காரணமாக புத்தகம் பக்கம் ஒதுங்கினேன்.. அப்பொழுது ஒன்றிணைந்த ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகம் சிவகங்கையில் இருந்தது. அதுதான் என்னை வளர்த்தெடுத்தது.. நண்பர்களுடன் சேர்ந்து எல்லா ஆண்டு விடுமுறையிலும் கையழுத்துப் பிரதிகள் நட்த்துவது தான் எங்கள் பொழுதுபோக்கு..கூட்டல், நண்பன், மணியோசை, கேள்வி ., இவை எல்லாம் நானும் நண்பர்களும் சேர்ந்து நடத்திய கையெழுத்து இதழ்கள்..அன்றைய கல்கண்டு, குமுதம் இதழ்களைப் பார்த்து அதன் பாதிப்பில் எழுதியவை..


என் பள்ளிப்பருவதில் சிவகங்கையில் தெருவுக்கு தெரு படிப்பகங்கள்.. அரசியல் சினிமா பற்றிய பேச்சுகள் இவைதான் என்னை அதிகம் கவர்ந்தவைகள்.. அழகப்பா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அங்கு கிடைத்த நண்பர்கள் வட்டம் என் அறிவை விசாலாமாக்கியது..

தமிழ் சினிமாவில் அது ஒரு பொற்காலம்.. பாரதிராஜா, மகேந்திரன்,பாலு மகேந்திரா, ருத்ரய்யா போன்றவர்கள் இயங்கி வந்த பொற்காலம். குடும்ப சென்டிமெண்ட் படங்கள் எடுத்து வந்த பீம்சிங் கூட ஜெயகாந்தன் கதையைப் படமாக்க வேண்டிய கட்டாயம்.. இளையராஜா என்ற மாமேதை மேலே வந்து கொண்டிருந்த காலம். சிவாஜி, எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்த தலமுறையில் ரஜினி,கமல் பெரும் நடிகர்களாக உருவாகிக் கொண்டிருந்த காலம்..


இலக்கியம், திரைப்படம் இரண்டிலும் ஒரு ஆரோக்கியமான சூழல். உருவாகிருந்த காலகட்டம். இவைகளே என்னை எழுதத் தூண்டின.. கல்லூரி மாணவர்களுடன் உல்லாசப் பயணம் போகும்போதெல்லாம்... பெங்களூர் என்றால் சுஜாதாவைப் பார்க்கப் போவதும், டெல்லி என்றால் தி.ஜானகிராமன், வெங்கட் சுவாமிநாதன் என்றும், சென்னை என்றால் மாலன் , பாலகுமாரன் என்றும் தேடி தேடிப் போய்ப் பார்த்தகாலம்..மோகமுள் படித்துவிட்டு கும்பகோணம் போய், பாபு,யமுனா இருந்த தெருக்களை பார்த்து வரும் அளவுக்கு பைத்தியமாக இருந்தவன்..சென்ற விடுமுறையில் கூட பாளையங்கோட்டை சென்று அய்யா தொ.பரமசிவம் அவர்களைச் சந்த்திது வந்தேன்.


மதிப்பிற்குரிய மாலனோடு எனக்கு கிடைத்த அறிமுகம் அச்சு ஊடகங்களுடான கதவைத் திறந்துவிட்டது.. கதவு திறந்து கிடநதாலும். என்னால் தான் முழுதாகப் பங்கு பெற முடியவில்லை..அடிப்படையில் நான் ஒரு படிப்பாளி.. எழுதுவது என்பது எப்போதுதாவது தான்...ஆகவே ரொம்பவும் கொஞ்சமாகத் தான் எழுதினேன்

1983-ல் மதிப்பிற்குரிய சுந்தரராமசாமி அவர்களின் அறிமுகம். ஜே.ஜே.குறிப்புகள் படித்துவிட்டு நாகர்கோவில் சென்று அவரைப் பார்த்து, அவருடனான அறிமுகம் எனக்குப் புதிய திசைகளை எனக்கு காட்டியது. சிறுபத்திரிகை எழுத்தாளர்களுடான பழக்கம் அது மூலம் ஏற்பட்டது..பெங்களுர் மகாலிங்கம், தமிழினி வசந்தகுமார், பஷீர், சி.மோகன், திலீப்குமார்,கவிஞர் சுகுமாரன்,பாதசாரி, ஷேசையா ரவி,பௌத்த அய்யனார் எனப் புதிய அறிமுகம்.. புதிய எழுத்தாளர்கள்., புதிய பார்வைகள்.. எழுதுவதை மூட்டை கட்டி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன்.. 1994- என் முதல் சிறுகதை குமுதம் இதழில் வந்தது. அதைத் தொடர்ந்து சில சிறுகதைகள் குமுதத்தில் வந்தன..அது கொடுத்த உற்சாகம்..தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரைகள்.. அதன் பின்னர் இந்தியா டுடேவில் என் கட்டுரை..
2001-க்குப் பிறகு திண்ணை இணைய இதழில் தான் நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்..

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதிக்கொண்டிருந்த எனக்கு கவிஞர் தேனம்மை லெக்‌ஷ்மணனோட ஏற்பட்ட நட்பு.. அவர் தனது வலைத்தளத்தை (சும்மா) எனக்கு அறிமுகப்படுத்தினார்.அது நாள்வரை வலைத்தளம் எனக்கு அறிமுகம் இல்லை. என் எழுத்துகளைப் பற்றி அறிந்த அவரும் என் மச்சினன் தினேஷ் பாபுவும் (எண்ணங்கள்) என்னையும் வலைத்தளம் தொடங்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தவே சென்ற ஆண்டு 2009,டிசம்பர் 15 அன்று “நறும்புனல்” என்ற என் வலைத்தளத்தை தொடங்கினேன்..

அதன்பின்னர் சவூதியில் இருந்து வலைப்பதிவில் மிகப்பிரபலமாக இயங்கி வரும் என் ஊர்க்காரர் பா.ராஜாராம் தொடர்பு கிடைத்தது அதன் மூலம் மற்ற பதிவர்கள் செ.சரவணகுமார்,ஸ்டார்ஜன்,ஆறுமுகம் முருகேசன் என்ற அறிமுகம்..பா.ராஜாராம் மூலம் ஜமாலன் அறிமுகம்..ஜமாலன் வீடு ஒரு அற்புதப் புதையல்..

இப்படித்தான் எனக்கும் வலைத்தளங்களோடு வலைப்பதிவரோடும் அறிமுகம்..

தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக இன்று முதல் எழுத இருக்கிறேன்..
உங்கள் மேலான கருத்துகள் என் படைப்புகளை(?) இன்னும் செழுமையாக்க உதவும்

நன்றியுடன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

சனி, 4 செப்டம்பர், 2010

இசை அரசியல்..ஷாஜியின் கட்டுரைகளை முன்வைத்து

70 களின் ஆரம்பத்தில் இந்திய அரசியல் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு அப்பொழுது சோ ஆரம்பித்த துக்ளக் மட்டுமே.. அப்பொழுது வந்து கொண்டிருந்த அனைத்து தின இதழ்களும் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதாகவோ அல்லது ஆதரித்தோதான் இருக்கும். மேலும் நடுநிலையாக நான் நினைத்து நான் மிகவும் விரும்பி வாசித்த மாதமிருமுறை இதழ் துக்ளக்.. சோ அவர்கள் மிகவும் நடுநிலை வகிப்பதாகவும், மிகுந்த தைரியத்துடன் தனது கருத்துக்களை எடுத்து வைப்பதாகவும் நான் நினைத்துக் கொண்டு துக்ளக்கின் நிரந்தர வாசகனாகவும், சோவின் ஆதரவாளராகவும் மாறிப்போனேன்..


ஆனால் சோ அவர்கள் தனக்கும் தான் சார்ந்த சாதிக்கும் இந்துத்வாவிற்க்கும் மட்டுமே உண்மையானவராக இருப்பதை மிகத் தாமதாமாக உணர்ந்தேன். அதற்கு காரணம் தமிழகம் தாண்டி இந்திய அரசியல் பற்றி அன்றைக்கு பேசியது சோ மட்டும்தான்..பின்னாளில் வேறு சில பத்திரிக்கைகளின் அறிமுகம் கிடைத்த போது தான் சோவின் உண்மை எத்தகையது..அவர் எழுதும் அனைத்தும் தமிழ்ச் சமூகம், மனித உரிமைப் போராளிகளுக்கு எதிரானது என்று தெரிந்து கொண்டேன்..


உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்., சோ அவர்கள் தனது எல்லா கார்ட்டூன்களிலும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி யை ஒரு காமெடியனாகவே காண்பித்து அந்த மனநிலையிலேயே நான் ம.பொ.சியை அணுகினேன். பின்னாளில் தான் தெரிந்தது..ம.பொ.சி என்ற மனிதர் இல்லை என்றால், திருத்தணி நமக்கு இல்லை என்பதும், அவர் தமிழ்ப் போராளி என்பதும்.. அவருக்கு மட்டும் அன்று போதிய ஆதரவு இருந்து இருந்தால். முல்லைப்பெரியாரையும் மீட்டு இருப்பார் என்பதும் நிதர்சனமான உண்மை.. துக்ளக்கில் வந்த கருத்துப் படங்கள் அனைத்திலும், அவரை காமெடியனாகவே அவர் இறக்கும் வரை, சித்தரித்து இருப்பார்.


இதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு தமிழினப் போராளி.. தமிழரசுக் கழகம் என்ற கட்சி வைத்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கியவர்.. அதே சமயம் இன்றைய ஜெயல்லிதாவிற்கு முன்னோடியான, தியாகம் என்றால் என்னெவென்றே தெரியாத, பதவி ஒன்றையே ஒரே லட்சியமாக வைத்து , அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று புதுஅகராதி உருவாக்கி வைத்த ராஜாஜியை தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டே இருந்தவர் , இன்றும் இருப்பவர் சோ. இப்படி தான் விரும்பிய ஒரு கருத்துருவாக்கத்தை கட்டமைத்ததில் சோவும் வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம்..


இசை அரசியல் என்று தலைப்பு வைத்துவிட்டு இசை பற்றிப் பேசாமல் , அரசியல் பற்றி பேசுவது ஏன் என்ற குழப்பம் இருக்கலாம்..இன்று இசை உலகில் நடப்பதற்கும் இதற்கும் பெரிதும் தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன்.


இன்றைய தமிழ்ச் சூழலில், இசை பற்றி வெளிவரும் விமர்சனங்கள் எனக்கு 1970 யை ஞாபகப்படுத்துகின்றன.. உண்மையிலேயெ இசை ஞானமுள்ளவர்களின் விமர்சன எழுத்துக்கள் பரவலாக வெளிவரவில்லை. எனக்கு விபரம் அறிந்த நாளில் இருந்து இசை பற்றி அவ்வப்போது எழுதிய சுப்புடு கூட ஒரு துணுக்கு எழுத்தாளர் என்ற நிலையைத் தாண்டி வரவில்லை..


இன்று இசை பற்றி ஒரு அறிவார்ந்த தளத்தில் எழுதுபவராக நான் நினைத்து விரும்பிப் பின்பற்றி படித்தது ஷாஜியோட கட்டுரைகளைத்தான்.. அவருக்கும் சோவிற்கும் அதிக வித்தியாசம் இல்லையோ என அவருடைய தற்போதைய கட்டுரைகள் என்னை சிந்திக்க வைக்கிறது.. புது கருத்துருவாக்கம் என்ற பெயரில் தனது விருப்பு வெறுப்புகளுடன் , தான் விரும்பும் ஒரு இசைச் சூழலை கொண்டு வ்ர விரும்புவதாக எனக்குப்படுகிறது.


தனது ரசனையை மட்டுமே முன் வைத்து இசை பற்றிய கட்டுரைகள் அவர் எழுதுவதாகச் சொல்கிறார்கள். அது தவறல்ல..முதலில் ரசிகனாக இருந்து தான் விமர்சனராக மாற வேண்டும்..தனது ரசனைக்கு மட்டுமே உண்மையானவராக இருக்க வேண்டும் என்ற கருத்திலும் நான் உடன்படுகிறேன். மொழிக்கு ஒன்றாக நான் 4 CD க்கள் கேட்டிருப்பேன்.. அதையே அவர் 40யோ, 400 யோ கேட்டிருக்கலாம்.. ஆனால் அது போதுமா இசை பற்றிய விமர்சனம் எழுத என்று என்னைக் கேட்டால், செய்யக்கூடாது என்று தான் சொல்வேன். அப்படிச் செய்வதாக இருந்தால் தனது எல்லைகளை கறாராக வகுத்துக் கொள்ளவேண்டும்..கர்நாடக சங்கீதமோ,ராகங்களோ தெரியாமல், மேலையிசையில் செவ்வியலிசை இலக்கணத்தோடு பரிச்சயமில்லாமல் எப்படி ஒட்டு மொத்த இசை பற்றி எழுதலாம் எனத் தெரியவில்லை..


ஒரு மேதையை எப்படி அணுக வேண்டும்,, ஒரு வெற்றி பெற்ற இசை அமைப்பாளரை எப்படி அணுகவேண்டும் என்ற வித்தியாசம் கூட தெரியாமல் எப்படி விமர்சனம் எழுதுவது? இளையராஜா மீது மிகவும் வன்மத்தோடு ஷாஜி எழுதிய கட்டுரைக்கு ஜெயமோகன், சந்திரமோகன் ( சந்தனார்) , சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் அருமையாகப் பதில் சொல்லியுள்ளதால் , நான் புதிதாக எதுவும் சொல்வதற்கில்லை..அதிலும் நான் பெரிதும் மதிக்கும் ஜெயமோகனின் பதில் மிக ஆழமானது..அற்புதமான ஒரு கட்டுரை..நாரம் இருந்தால் அவசியம் வாசிக்கவும்.


ஆனால் விபரம் அறிந்த நண்பர்கள் கூட அவர் இசை பற்றி புதிதாக ஒரு Concept சொல்வதாகவும் , அதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும் என்றும் என்னிடம் சொல்கிறார்கள்.. இதில் தான் நான் முரண்படுவதோடு, இது குறித்து எனக்கு பெரிய ஐயப்பாடும் உண்டு..


இப்படித்தான் ஒரு புதிய Concept 60 வருடங்களுக்கு முன்னர் “சபா” என்ற பெயரில் ஆரம்பித்து அந்த Concept யும் அவர்களும் சாதித்ததை நினைத்தால்தான் என்னால் தாங்க முடியவில்லை.. திருமண விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலுமாக மக்களிடமிருந்த,மக்களோடு கலந்து இருந்த கர்நாடக இசையை, நான்கு சுவர்களுக்குள்ளும், NRI சொத்தாகவும் மாற்றிய மகானுபாவர்கள் இந்த சபாக் காரர்கள்.. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், இந்தச் சபாக்களின் மீது தான் என் முதல் தாக்குதல் இருக்கும்.. தனக்குப் பிடித்த ஒரு குழுவை சேர்த்துக் கொண்டு, தங்களால் முடியாத விஷயங்களை புறக்கணித்து, இவர்கள் செய்த சேவை.. அப்பப்பா..காலத்தால் அழிக்க முடியாதது .
நாதஸ்வரத்திற்கு எந்த சபாவிலும் மரியாதை கிடையாது..தமிழிசைக்கு மரியாதை கிடையாது. துக்கடா என்று தமிழசைக்கு புது நாமகரணம் சாற்றி இசையுலகில் தீண்டாமையை அமுலாக்கிய அயோக்கியர்கள்.ஆனால் அவர்கள் தான் இங்கு இசையை வளர்ப்பவர்கள் என்று பெயரெடுத்தவர்கள்.


ஒரே காலத்தில் வாழ்ந்தாலும். மதுரை சோமுவிற்கு பக்கத்தில் கூட இணை வைக்க முடியாத பாலமுரளியை தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள்.. எதையுமே நிறுவனப்படுத்தினாலே எல்லா அயோக்கியத்தனங்களும் அங்கே அரங்கேறும்.. பாலமுரளிதான் முதல் கார்ப்பெரட் சங்கீதவித்வான்.. பாலமுரளிக்கு சபாக்களும், சபாக்களுக்கு பாலமுரளியும் தேவைப்பட்டார்கள்.. அதன் பின்ணனி போய்ப்பார்த்தால், இசையைத் தாண்டி ஜாதி, மொழி எல்லாம் முக்கிய காரணியாகச் செயல்பட்டது தெரியும். அதைப் புரிந்து கொண்டுதான், செட்டிநாடு அரசர் அண்ணாமலைச் செட்டியாரும், முத்தையாச் செட்டியாரும் தமிழிசையக் காக்க எல்லா தமிழ் ஆர்வலர்களையும் சேர்த்துப் போராட வேண்டி இருந்த்து.


இன்றும் இசை குறித்து பெரிய அளவில் கட்டுரைகள் எதுவும் வரவில்லை.


இன்று திரைஇசை குறித்து , விமர்சனக் கட்டுரைகள் என்ற பெயரில் ஷாஜி எழுதுவதும்,இசையை ரசிக்க புதிதாக ஒரு கான்செப்ட் சொல்வதையும் இந்தப் பின்ணணியில் தான் பார்க்கிறேன்..


இளையராஜாவின் மேல் வன்மத்துடன் பாய்தல், முதல் 30 ஆண்டுகாலம் ராஜாவாகத் திகழந்த டி.எம்.எஸ் யை ஒதுக்கி வைத்தல், அடுத்த 30 ஆண்டுகளை தன் வசம் வைத்திருந்த எஸ்.பி.பியை பாடகரில் சிவாஜி என்று தள்ளிவைத்துவிட்டு, ஏசுதாஸை தூக்கி வைப்பதாகட்டும்.. ஒரு பாடகர் என்று மட்டும் அறியப்பட்ட மலேஷியா வாசுதேவனை உன்னதமான பாடகராகத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதில் இருக்கும் நுண்ணரசியல் இரண்டு பேர்களும் மலையாளி என்பததைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. உண்மையில் தமிழர்கள் பாடகர்களில் எநத மொழிப் பாடகர் என்று பார்ப்பதில்லை.. கண்டசாலாவால் பிரகாசிக்க முடியாமல் போனது கூட அவரின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்பதாலேயே என்று அனைவருக்கும் தெரியும் பி.பி.சினீவாஸ் (கன்னடம்), ஏசுதாஸ்(மலையாளி), எஸ்,பி,பி(தெலுங்கு), பி.சுசிலா(தெலுங்கு) எந்த மொழிக்கலைஞர்களாக இருந்தாலும் வரவேற்று ஏற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள்..


முதலில் எந்தக் கான்செப்ட் உருவாக்கினாலும் அது மரபு சார்ந்து அதிலிருந்து தான் கிளைத்தெழ வேண்டும். தமிழ் பண்ணிசை மரபோ, கர்நாடக இசையின் மரபோ, இலக்கணங்களோ தெரியாமல், அதில் பரிச்சயம் இல்லாமல் புது கான்செப்ட் உருவாகுவது என்பது 50 வருடங்களாக உயர்தர இசையை தமிழ் மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு விரக்தியும் வேதனையும் உண்டாக்குகிறது.

இசை ஞானமுள்ள அனைவரும் இசை பற்றிய உண்மையான அக்கறை உள்ளவர்கள், மரபிசையில் தேர்ந்த ஞானமுள்ளவர்கள் எழுதும் கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டும் ..அப்படி பல கட்டுரைகளும் திறனாய்வுகளும் வநதால் தான் நாம் விரும்பும் உன்னத இசை பற்றிய ஒரு கருத்துருவாக்கத்தை நம்மால் ஏற்படுத்தி,அதை நமது இளைய தலைமுறைக்கு கடத்த முடியும்..அதுதான் இன்றைய தேவையும் கூட...

சபாக்களால்,அல்லது தனது விருப்பு வெறுப்புகளோடு எழுதப்படும் இந்த மாதிரி கட்டுரைகளால், நம் இசை பற்றிய ரசனை , தன் வேர்களை இழப்பதற்கு தான் பயன் படும்.


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

புதன், 18 ஆகஸ்ட், 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்—தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை

உமாசங்கர்..நியாயமான ஒரு அதிகாரி.. அவருக்கு கொடுத்த அனைத்து வேலைகளும் திறம்பட செய்த ஒரு அதிகாரி என்பதை இன்றைய கலைஞர் அரசே அவரை அங்கீகரித்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்ததில் இருந்து அறிந்து கொள்ளலாம்..

இன்று அவரை இடைநீக்கம் செய்தது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.. அதுவும் எந்த ஊழல் புகாரும் இன்றி. 18 வருடங்களாக தெரிந்திராத விஷயத்தை இன்று தான் கண்டுபிடித்ததாக ஒரு கதை..ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா சிக்கிய பொது ஒரு தலித் என்ற கேடயத்தை இதே முதல்வர் பயன்படுத்தியது அனைவருக்கும் தெரியும்..

இன்று நாங்கள் கேட்கிறோம்..தலித் என்பதாலா? அல்ல தன் குடும்ப விஷயங்களில் தலையிட்டதாலா?

தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கண்டனத்தி இங்கு பதிவு செய்கிறேன்.

( இணையத்தின் மூலமாக , வலைப்பதிவர்கள் மூலமாக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ள அய்யா தருமி, நண்பர் வால்பையனுக்கும் நன்றிகள்)

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நடிகர் திலகம்-இன்றைய இளைஞர்களுக்காக

சிவாஜி பற்றி சில வரிகள்

எதை எழுதுவது எதை விடுவது ?
இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக்
காட்டும் உன்னத நடிப்பைச்சொல்வேனா ?.. கவியரசர் கண்ணதாசன்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு வலையுலக நண்பர் நடிகர் திலகம் பற்றி இளைஞர்கள் பார்வை என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தார்..சிவாஜியின் முகபாவனைகள் யதார்த்த்தை காண்பிப்பதில்லை என்று.(?) அந்த நண்பர் மீது குற்றம் சொலவதற்கோ, பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதோ என் நோக்கம் இல்லை.ஏனென்றால் என் மகன்களும் அதே தான் சொல்கிறார்கள்..இது அவருக்காக எழுதியது இல்லை..என் மகன்களைப் போன்று உள்ள எண்ணற்ற இளைஞர்கள் நடிகர் திலகத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் , அனைத்து இளைஞர்களுக்குமான கட்டுரை..


சிவாஜி என்பது ஒரு சரித்திரம்..அதன் சில பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு விமர்சனம் செய்வது. அந்த மகா கலைஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்காது..


இன்றைய இளைஞர்கள் சிவாஜியை , யானையை பார்த்த குருடர்கள் கதையில் வருவது போல பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வது போல் சொல்வது எந்த வகையிலும் ஒரு உயர்ந்த மனிதனுக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியாது.. அவர் யாதர்த்தமான படங்கள் அதிகம் கொடுக்கவில்லை என்றும் உங்களால் ஈடுபாட்டுடன் பார்க்க முடியாத படங்களில் அதிகம் நடித்துள்ளார் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கலாம்.ஏனென்றால் அந்தக் காலம் வேறு..இன்று SMS காலம்..இந்தக் காலக் கண்ணோட்டத்தில் பழைய 50 வருஷங்களுக்கு முன்னர் வந்த படங்களை பார்க்காதீர்கள்..


பராசக்தியில் தொடங்குகிறது அந்த மகா கலைஞனின் திரைப்பிரவேசம். கமல் சொல்வது மாதிரி அன்றே முடிவு செய்து கொள்கிறார்..தாம் வளர வேண்டிய கலைஞன் அல்ல..நாம் செய்யவேண்டியது தனது திறமைகளை வெளிப்படுத்துவது மட்டும் தான் என்று முடிவெடுத்துக் கொண்டு தான் பல்வேறு கதாபாத்திரங்களை தெரிந்தெடுத்து 150 படங்கள் தொடர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் ,வித்தியாசமான உடல்மொழியில் ,திரையில் வாழந்து காட்டியுள்ளார்..


எனக்கு படத்துணுக்குகளை இணைக்கத் தெரியாது..இல்லை என்றால் அதை உங்கள் பார்வைக்கு வைத்து இருப்பேன்.. இருந்தாலும் சில படங்களில் சில காட்சிகளை இங்கு தருகிறேன்..


முதல் படம்..பராசக்தி..எல்லொருக்கும் பராசக்தி என்றால் கோர்ட் சீன் தான் ஞாபகத்திற்கு வரும்..அதே பட்த்தில் தான் “நானே ராஜா,நானே மந்திரி ‘ என்று ஒரு காட்சி பைத்தியமாக பண்ணியிருப்பார்.. மற்றொரு காட்சி..பிளாட்பாரத்தில் தூங்குபவரை எழுப்பி, ஏன் முழிக்கிறாய்? என்ற காவல்காரனின் கேள்விக்கு தூங்குபவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான் என்பார்...இந்தக் காட்சியினைப் பாருங்கள்..முதல் பட நடிகனா? முந்நூறு படங்களில் நடித்தவரா என்ற கேள்வி உங்களுக்கு கண்டிப்பாய் வந்துவிடும்..


காட்சிக்கு தேவையானதை . இயக்குநர் கேட்பதை மட்டும்செய்து கொடுப்பவன் நடிகன்.. எம்.ஆர்.ராதா, சிவாஜி இருவரும் கலைஞர்கள்.. இருவரும் சின்னஞ் சிறிய நகாசு வேலைகள் செய்து அந்த ஒரு சில நொடி வரும் காட்சியினை ஆயுளுக்கும் மறக்க முடியாமல் செய்து விடுவார்கள் ..

அந்த வரிசையில்..

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரக்கச்சேரி நடந்து கொண்டு இருக்கும். வாசித்துக்கொண்டு இருப்பார். அந்த சமயம் அழகான பெண் வந்து கூட்டத்தில் அமரவே பக்கதில் இருக்கும பாலையா அண்ணனைப் பார்த்து ஒரு கண் அடிப்பார் பாருங்கள்.. அங்கே தான் சிவாஜி என்ற கலைஞன் உயிர்போடு இருப்பான்..

இதே படத்தில் ரெயிலில் பயணம் செய்யும் போது பத்மினியும் அவரும் கண்களால் பேசிக் கொள்வது மிகை நடிப்பாகுமா என்ன?


ஆண்டவன் கட்டளையில்..ஆறுமனமே ஆறு என்ற பாடல்.. அறுபடை வீடுக்கும் சென்றுவிட்டு பாட்டு முடியும் போது ஒரு சின்ன பிட் மியுசிக் வரும்..அதுக்கு எந்த நடன இயக்குநரும் நடகர் திலகத்திற்கு தேவை இல்லை..கையில் நிலக்கடலையை வைத்து கொண்டு அதை ஊதிக் கொண்டே ஒரு ஆண்டிப்பண்டார நடை நடப்பதை பாருங்கள்.அப்ப தெரியும் அவன் ஒரு யுகக் கலைஞன் என்று..

உத்தமபுத்திரன் ..யாரடீ நீ மோகினி பாடல் பாருங்கள் இன்றைய சூப்பர் ஸ்டார் நடக்கும் side walk க்கை அன்றே நடந்திருப்பது ஆச்சர்யத்தை தரும்.


பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவி தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டவுடன், தான் ஊனமானவன், தன்னை நன்றாக பார்த்துச் சொல் என்று சொல்லிக் கொண்டு அவர் முன் வலமும் இடமுமாக காலை இழுத்துக் கொண்டு ஒரு ஊன நடையை நடந்து காட்டுவதை அவதானியுங்கள்


பாசமலர்..முதலிரவுக்காட்சி..ஆண் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து வெட்கப்பட்டு, அந்தப் புகைப்படத்தை திருப்பிவைக்கும் போது அவர் முக பாவங்களை கவனியுங்கள்..


நவராத்திரி ..நவரசங்களையும் காட்டும் மாதிரி ஒன்பது வகையான பாத்திரங்கள். ஒவ்வொரு வேடத்திற்கும் வேறு வேறு உடல் மொழி..அதில் ஒன்று தான் மனநோய் மருத்துவர்.. சாவித்திரியை வார்டுக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லிவிட்டு, ஒரு நடை நடந்து கதவு வரை சென்றவர் , திரும்பி வந்து மறந்து போன ஸ்டெத் தை எடுத்து திரும்பிச் செல்வார் ..அந்தக் காட்சியைப் பாருங்கள்..


பாலும் பழமும் படத்தில் மருத்துவருக்குரிய வெள்ளை உடை அணிந்து மருத்துவமனையில் ஒரு நடை நடந்து வருவார் .அதைப் பார்த்து டாக்டராக வேண்டும் என்று டாக்டராக ஆனவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியும்


திருவருட்செல்வரில் அப்பராக..காற்றில் பறக்கும் காவி உடையை கையில் பிடித்துக் கொண்டு அவர் எழுந்து வருவதாக ஒரு காட்சி ..பாருங்கள்..


உயர்ந்த மனிதன் பாருங்கள். அதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத உயர்ந்த மனிதனுக்குரிய வித்தியாசமான உடல் மொழி கையாண்டு இருப்பார்..


ஞானஒளி படத்தில் இடைவேளைக்கு முன்னர் மணி அடிக்கும் ஆண்டனியாகவும், பின்னால் பணக்கார்ராகவும் இரண்டு வேடங்களுக்கும் ஒட்டுமொத்த வித்தியாசம் காண்பித்து இருப்பதை கவனியுங்கள்..


பார்த்தால் பசிதிரூம் படம் பாசமலர் வந்து வெற்றி பெற்றவுடன் அதே குழுவினர் பங்கேற்று வெளிவந்த படம்.. பாசமலர் பார்த்துவிட்டு பா.பசிதீரும் பாருங்கள்.. பாசமலருக்கும் இப்படத்திற்கும் 100 விழுக்காடு வித்தியாசம் காட்டி இருப்பார்.ஒரு காலை விந்தி விந்தி அப்படம் முழுக்க ஒரு புதிய உடல் மொழி காட்டி இருப்பார். படம் பார்க்க நேரம் இல்லை என்றால்..உள்ளம் என்பது ஆமை.என்ற பாடலாவது கேட்டுப் பாருங்கள்...அந்த இமயத்தின் சில கூறுகளை அறிந்து கொள்வீர்கள்

புதியபறவை கிளைமாக்ஸ் காட்சியை தமிழ் திரைப்பட வரலாற்றில் மறைக்க முடியாத காட்சியாக மாற்றி அமைத்து அவரின் அபார நடிப்புத் திறமைதானே..


இது மாதிரி அவர் படங்கள் முழுதும் சின்னச் சின்ன மறக்க முடியாத காலத்தால் அழியா காட்சிகள் இருக்கும்..


இப்படிப் பட்ட அற்புத திறமைக்காகத் தான் அவரை பல்கலைக் கழகம் என்றார்கள்..


மிகை நடிப்பு என்று சொல்லப்பட்ட பாசமலரில் தான் ஜெமினியோடு ஒரு ஆக்ரோசமான விவாத்த்திற்குப் பிறகு வசனமே பேசாமல் ” கெட் அவுட்” என்று சொல்வார்..


எந்தவித முன்னுதாரணங்களும் இல்லாமல், தான் பார்த்த, பழகிய நபர்களின் ஆளுமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, திரைவடிவமாக்கியவர்..


கப்பலோட்டிய தமிழன் பாருங்கள்.. கொஞ்சம் கூட மிகை நடிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் அபார வெற்றிக்குப் பிறகு அதே நிறுவனம், அதே விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்..கட்டபொம்மனில் கர்ஜித்தவர் , அந்த வெற்றியைச் சுவைத்தவர், அதே மாதிரி க.தமிழனிலும் கர்ஜித்திருக்கலாம்.. செய்யவில்லை..அடக்கமான, சாந்தமான முகத்துடன் வ.உ.சியாக வாழ்ந்து காட்டி இருப்பார்.

வாழும் மனிதர்களை மட்டுமா திரையில் காண்பித்தார்?

புராண கதாபாத்திரங்களான சிவன், நக்கீரன், நாரதர்,கர்ணன், பரதன், அரிச்சந்திரா எனப் பல்வேறு பாத்திரங்கள்..


உங்கள் பார்வைக்கு என்னால் நடிகர் திலகம் நடித்த 50 படங்களாவது வரிசைப்படுத்த முடியும்
பாருங்கள்..நடிகர் திலகத்தை திறந்த கண்ணோடு பாருங்கள்.. வேண்டுமென்றால் எனக்கு மின்ன்ஞ்சல் அனுப்பவும். நல்ல படங்கள் அல்ல.. அவர் நடித்த நடிகர்களுக்கான பாடங்கள் வரிசை தருகிறேன்..

இதையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=da89d7irDO0&feature=related

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

சனி, 31 ஜூலை, 2010

நட்பு

(இன்று நண்பர்கள் தினம்..அதற்காக எழுதப் பட்ட கவிதை)

அண்ணன் தம்பி அக்கா தங்கையென
எண்ணற்ற உறவுகள் ஏராளம் இங்குண்டு
கண்ணில் பயிராகும் காதலும் ஒரு உறவுதான்

அத்தனை உறவுக்கும் ஆதாரம்
சொந்தம் என்றொரு தொடர்புண்டு

ஆதாரம் எதுவுமின்றி ஆகாயம் வரும்
சூரியனைப் போன்றதொரு தூய உறவுண்டு

ஆதாயம் எதுவுமின்றி அதுவாய்ச் சுரக்கும்
தாயின் பாலும்
சேயின் சிரிப்பும்
பூவின் தேனும்
புதுப் புனல் நீரும்

தூய்மையாய் இருப்பது போல்-நட்பும்
வாய்மையாய் இருந்திட்டால் வாழ்க்கை வசமாகும்

அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 30 ஜூலை, 2010

நியூமராலஜி- விவாதத்திற்கான அழைப்பு

“நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகருக்கும் கடவுள் உண்டு
காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு”
கண்ணதாசன்

1992- ல் நான் சவூதி வந்து இறங்கிய வரையில் நான் எந்த ராசி என்ன நட்சத்திரம் என்று கூடத் தெரியாது. முழு நாத்திகன்.இங்கு வந்து நான் பட்ட கஷ்டங்கள்..அது எனக்கு ஒரு மோசமான காலம்..1994-ல் அப்பா முடியாமல் மருத்தவமனையில் சேர்த்திருக்க, மருத்துவர்கள் கை விரிக்க., அண்ணன் தகவல் சொன்னதும் . exit-entry visa formalities எல்லாம் முடித்து விமான தளத்திற்குச் சென்றால்.. இந்தியா செல்லும் எல்லா விமானங்களும் ரத்தான செய்தி.. இந்தியவில் பிளேக் நோய் என்று காரணம் காட்டி எல்லா இந்தியாவுக்கும் சவூதிக்குமான எல்லா விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது அன்று முதல். அன்று இரவு வரை விமான தளத்தில் இருந்துவிட்டு, இன்னொருவர் சொன்ன யோசனையின் படி ,காலையில் ஸ்ரீலங்கா விமானம் பிடித்து , கொழும்பு சென்று அதன் பின் சென்னை அல்லது திருச்சி செல்லலாம் என்று வீட்டுக்கு திரும்பி படுத்தவனை, எழுப்பியது “ அப்பா இறந்துவிட்டார்” என்ற தொலைபேசியே.. அப்பத்தான் என் மனைவி ஜாதகம் பாக்கணுங்க என்று சொல்லி , 1994க்குப் பிறகு தான் என் ராசி , நட்சத்திரம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று வரையில் ஜாதகம் மேல் நம்பிக்கை இல்லை.. ஜாதகம் என்பதே நமக்கு சாதகமாகச் சொல்வது என்ற நம்பிக்கையைத் தவிர அதில் வேறு ஒன்றுமில்லை.


ஆனால் பிறந்த தேதிமேல் எனக்கு ஒரு ஆர்வம் சின்ன வயசுலெயே இருந்து இருக்கிறது..ஜூலை 15- காமராஜ், ஆகஸ்ட 15- சுதந்திர தினம் செப் 15-அண்ணா,அக்டோபர் 15- நான் என்ற மிதப்புலேயே வளர்ந்தவன். பின்னாளில் கண்ணதாசன் 24-ந்தேதி பிறந்தவர் என்றும் நான் 15 – ரெண்டுபேருக்கும் பிறந்த எண் கூட்டுத் தொகை 6 – என்றதுடன் நானும் கண்ணதாசன் மாதிரி வாழ்வேன் ,ஒருகையில் மதுவும் ஒரு கையில் மாதுவுடனும் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.கல்லூரிக் காலங்களில் கவியரங்களில் கலந்து கொண்டதும் இது அதிகமானது.


அதிலிருந்து பிறந்த தேதி மட்டும் நான் கேட்பதுண்டு..


இன்று யதேச்சையாக மண்ணின் மைந்தர் முத்தையாவின் பிறந்த தேதி பார்த்தேன்..ஆகஸ்ட் 1 என்று இருந்தது.பார்த்தவுடன் மனசு குளிர்ந்தது..எனக்கு மிகவும் நெருக்கமானவர் சிவாஜியும் 1 ந்தேதி..2-ந் தேதி பிறந்தவர்கள் தனித்த சிந்தனைக்கு உரியவர்கள் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.. காந்தி, பாரதி, பாரதி தாசன்.2-ந் தேதி.. 5-ந் தேதி பிறந்த வாஜ்பாயும் டாகடர் ராதாகிருஷ்ணனும், நேருவும் சபலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.. 5 ந் தேதியும் கவிஞர்களுக்கு உரியது. 3 ந் தேதி நினைத்ததை சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. கலைஞர், ரஜினி 3-ந் தேதி பிறந்தவர்கள். இந்த பிறந்த எண் விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிரியத்துக்கு உரியதாக இருந்து வந்து உள்ளது.மூட நம்பிக்கை என்று தெரிந்தும்..


ஆனாலும் என் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது , இந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாம் தலையிடவிடாமல், திலீபன் என்ற போராளி பெயரும், கல்லூரிக் கால என் புனைபெயரான உதயநிலவன் என்று இரண்டாவது மகனுக்கும் பெயரிட்டேன்.

நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவலாக உள்ளது

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 23 ஜூலை, 2010

பத்திரிக்கைகளின் நண்பர் எழுத்தாளர் கருணாநிதி????????

22-நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூட தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர் ஆட்சியில் தான் எழுத்தாளர்களுக்கு போதாத காலம் போலத் தெரிகிறது.

மதுரையில் தினபூமி என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கிரானைட் வியாபாத்தில் ஊழல் நடந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக..செய்தி வெளியிட்டால் கைதா.?. மான நஷ்ட வழக்குதானே தொடுப்பார்கள்.. சட்டத்தின் வழி ஆட்சி செய்வதாகச் சொல்லும் தி.மு.க அரசு..தான் இந்தக் கொடுமையைச் செய்துள்ளது..

இன்னொரு கொடுமை... பதிவுலகில் பரபரப்பான விஷயங்களை, முக்கியமாக காவல்துறையின் ஊழல்களை, அடாவடிகளை , துறை சார்ந்த அதிகாரிகளின் மூலமே பெறப்பட்டு வெளியிடப்பட்டிருக்குமோ என்று நம்பிக்கையை தோற்றுவிக்கும் தொடர் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டு இருந்த சவுக்கு வலைத்தளத்தின் ‘சவுக்கு” சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கொடுமை என்னவென்றால் கைது செய்யப்பட்ட்து இந்தக் கட்டுரைக்காக அல்ல.. ஏதோ பொய்க்குற்றம் சுமத்தி ஜாமினீல் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டுள்ளார்கள்.. கஞ்சா கேஸ் புகழ் ஜெயல்லிதா ஆட்சிக்கும் , பொய்க் கேஸ் புகழ் தி.மு.க ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?


காமராஜர் அன்று சொன்னது.. ”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”

ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னது ..”விநாச காலே விபரீத புத்தி”

பதிவர் சங்கர் கைதுக்கு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 16 ஜூலை, 2010

கவிதாயினி தேனம்மை லக்‌ஷ்மணன்

2009 – செப்டம்பர் மாதம் துபாய்க்கு சென்றிருந்தேன்..அங்கு என்னுடன் கூட இருந்த என் அண்ணன் மகன், சித்தப்பா ,முகப்புத்தகம் என்று ஒரு தளம் உள்ளது..அதில் தங்களை இணைத்துக் கொண்டு அதில் துபாயில் எடுத்த புகைப்படங்களைப் போட்டீர்கள் என்றால், எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம் என்று யதேச்சையாகச் சொல்லப்போக, சவூதி வந்தவுடன் முகப்புத்த்கத்தில் இணைத்துக் கொண்டு என் புகைபடங்களை வெளியிட்டேன். அந்தத் தளத்தின் செயல்பாடு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.எல்லாவற்றையும் பற்றி எழுதலாம். எல்லோரையும் சென்றடைய மிக எளிதான வழியாகத் தெரிந்தது.


அப்படி ஒரு நாள் செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பராக அறிமுகனானவர் தான் கவிஞர் தேனம்மை.அவரது வலைத்தளம் (சும்மா) சென்று பார்த்த பொழுது அது சமயம், வரிசையாக பல்வேறு பூக்களின் தலைப்புகளை வைத்து, அந்தப்பூக்களின் தன்மையை, ஒவ்வொரு பூக்களுக்கும் உள்ள அதனதன் சிறப்புத்தன்மையை எடுத்துக் கொண்டு. வாழ்வியல் தத்துவங்களோடு இணைத்து தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார்..ஒரு 30 பூக்களாவது கவிதைகளாகி இருக்கும்.கல்லூரி மாணவப் பருவத்திற்கு அப்புறம் நீண்ட இடைவெளி விட்டு 20 வருடஙக்ளுக்குப் பிறகு எழுதுவதாகவும் , தன் வாழ்வில் இது இரண்டாம் வசந்தம் என்றும் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.. உண்மையிலேயெ அதை நம்ப முடியவில்லை. கவிதைகள் எழுதாமல் இருந்தாலும், ஒரு கவி மனத்துடன் , கவிதை எழுதுவதை ஒரு தியானம் மாதிரி பழகி இருந்தால் மட்டுமே , இப்படி அடைமழை போல் கவிதை வரும் என்பது ஒரு சின்ன எழுத்தாளன் ஆன எனக்கு நன்கு தெரிந்து இருந்த்து. அந்த பூக்களின் தொடர் இடுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்..


மின்னலைப் போல அவ்வப்போது அற்புதமான வரிகளும், கணங்களும் இவர் கவிதைகளில் தென்படும்..சில கவிதைகளில் இந்தமாதிரி அற்புதமான வரிகள் அங்கங்கே காணப்படும்..அதே சமயம், பல கவிதைகள் வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவில்லை என்றால் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசரத்தில் எழுதியவைகளாக, படிப்பவரின் மனதில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல்,வெறும் வரிகளாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளுக்கு அவர் சரியான பங்களிப்பைத் தரவில்லை, அக்கவிதை வேண்டி நிற்கும் வரிகளை தேட நேரம் இல்லாமல் எழுதியதாக இருக்கும்


இன்று அவர் வலைத்தலத்திற்கு இரண்டாம் ஆண்டு தொடக்கம்.. போய்ப்பாருங்கள்.. அவர் வலைத்தள முகவரி http://honeylaksh.blogspot.com


இந்தக் கவிதை நல்லது , இது சரியல்ல என்று சொல்லி உங்கள் அனுபவங்களுக்கு நான் இடையூறாக இருக்க்கூடாது என்பதால், எந்த வரியையும் எடுத்துப்போடவில்லை..எனக்குப் பிடித்த கவிதைகள் சிலவும், வரிகள் பலவும் உண்டு.


இந்த ஒரு வருட காலத்தில் 183 பின்பற்றுபவர்களையும்( ரசிகர்கள்) 220 இடுகைகளும் 18000 விருந்தினர்களும் என – இது ஒரு பெரிய புலிப்பாய்ச்சலாகத் தான் தெரிகிறது.

வலைத்தளப் பதிவர்களில் இக்கவிஞர் மிக முக்கியமானவராக அறியப்பட்டுள்ளார்.

மகளிர் தினத்திற்காக இவர் எழுதிய கவிதை ஒன்று, திரைப்பட இயக்குநர் திரு.செல்வகுமார் அவர்களால் கவனம் பெறப்பட்டு எந்த வித மாற்றங்களும் இன்றி இசை வடிவமாகி உள்ளது, இவரது மொழி ஆளுமைக்கு ஒரு சான்று.அந்தப் பாடலையும் அவர் தளத்தில் காணலாம்

யூத்விகடனில் தொடர்ந்து இவர் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்சமயம் லேடிஸ் ஸ்பெஷல் என்ற இணையப்பத்திரிக்கைக்காகவும் தனது பங்களிப்பைத் தருகிறார் என்று இவர் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன்


முகப்புத்தகத்தில் நேற்று முன் தினம் அவரது பிறந்த நாள் ஒரு கொண்டாட்டமாகவே அவரது நண்பர்களால் கொண்டாடப்பட்டது எனக்கு மேலும் ஆச்சர்யத்தை வழங்குகிறது.. அவரது பன்முக ஆளுமையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கிறேன்.


ஒரு குடும்பத்தலைவியாக இருந்து கொண்டு குடும்ப்ப் பொறுப்புகளுடன், எழுத்துப்பணியையும் ,நண்பர்கள் வட்டத்தையும் போற்றிக் கொண்டு, கற்பனையையும் வற்றவிடாமல் பார்த்துக்கொள்வது எளிதல்ல..அவரது இந்த ஆளுமை வெளிப்பாட்டுக்கு தெய்வீகப் புன்னகையுடன் அன்பையும் ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கும் அவரது அன்புக் கணவருக்கு தேனம்மையின் நண்பர்கள் மற்றும் கவிதை ரசிகர்கள் சார்பாக இந்தப்பதிவின் மூலம் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.


கவிதைகளுக்கு , அது வேண்டி நிற்கும் கால அவகாசத்தையும், அக்கவிதை வேண்டி நிற்கும் அற்புத வரிகளையும், பதியம் போட்டு எடுத்து வழங்கினால் இன்னும் உயரங்களைத் தொட முடியும்..


பிறந்த நாளுக்கும், வலைத்தள இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்
சிகரம் தொட்டு விடும் தூரம் தான்..

ஒரு கவிதைகளின் ரசிகன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வியாழன், 15 ஜூலை, 2010

சிவகாமியின் செல்வன்

அரசியல் என்னவென்று தெரியாத காலத்திலேயே எனக்குப் பிடித்த தலைவர் பெருந்தலைவர் காமராஜ் தான்..காரணம் ஒன்றுமில்லை.. எங்க அம்மா பெயரும் சிவகாமி...அதுனாலே பள்ளித் தோழர்கள் எல்லாம் ‘சிவகாமியின் செல்வன்” என்று என்னைக் கிண்டலடித்தே, எனக்கு அவர் மீது ஈடுபாடு வரக் காரணம்..அது தவிர சிவாஜிதான் என் கதாநாயகன். அவருக்கும் இவர் தான் தலைவர்., தலைவரைப் புடிக்க வேறு காரணம் வேண்டுமா என்ன? நான் சொல்வது 1969..நான் ஐந்தாவது படிக்கும் பொழுது இருந்த மயக்கம்.

அப்படிப் பட்ட ஒரு நாளில் தான் அவரை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி முடித்து சிவகங்கை செட்டி ஊரணியில் தவளைக்கல் எறிந்து விளையாடிவிட்டு அப்ப்டியே மேலூர் ரோடுக்கு வந்தால் ஒரே கூட்டம். கொஞ்ச தூரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் காமராஜ் வந்து இருப்பதாக அந்த முக்கில் உள்ள விடுதியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் என் வகுப்புத்தோழர்களும் அவரைப்பார்த்து விடுவதென்று விர்ரென்று விருந்தினர் மாளிகை நோக்கி ஒடினோம். உள்ளே ஒன்றும் அவ்வளவு கூட்டம் இல்லை..எங்களை யாரும் தடுக்கவும் இல்லை..


காமராஜ் புகைபிடித்து யாரும் பார்த்துண்டா எனத்தெரியாது. நான் பார்க்கும் போது அவர் புகை பிடித்துக் கொண்டு இருந்தார். மாளிகை வராந்தாவில் சாய்ந்த இருக்கையில் சாய்ந்து கொண்டு, சுற்றி இருந்தவர்களிடம் பேசிகொண்டு இருந்தார்.. நாங்கள் அங்கு போய் நின்றதும்,பேச்சை நிறுத்தி விட்டு,எங்களை அருகில் வருமாறு அழைத்தார். புத்தகப்பையுடனே அவரிடம் சென்றோம்..எங்களைப் பற்றி, என்ன பெயர் என்று கேட்டுவிட்டு என் பெயர் நல்ல பெயர் என்று சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.. என்ன படிக்குறே என்று ஒவ்வொரு பையன்களையும் கேட்டார்..

“இங்கே எதுக்கு வந்தீங்க..?
”உங்களை பாக்கத்தான்..”
எதுக்கு என்னையப் பாக்கணும்?
”சும்மாதான்..ஆட்டோகிராப் வாங்க ”என் பக்கத்தில் இருந்த கார்த்தி பயப்படாமல் பொய் சொன்னான்..
அப்படியா..எதுல போட? அப்படின்னு சொன்னதும் எங்களுக்கு வந்த குஷி ...சொல்ல முடியாது ..விறுவிறுவென்று எங்கள் புத்தக்ப்பைக்கட்டை தொறந்து ,கையில் கிடைத்த நோட்டை எடுத்துக் கொடுத்தோம்.. எங்கள் எல்லோர் நோட்டிலும் கையெழுத்து போட்டார்..

”இங்கேல்லாம் வரக்கூடாது படிக்கிற புள்ளைக ஒழுங்கா படிக்கணும்..கூட்டம் நாட்டத்துக்கெல்லாம் போகக்கூடாது. ஒழுங்கா வீட்டுக்கு ஓடுங்க..” என்றார்..

வீட்டுக்கு ஆசையாய் ஆசையாய் வந்து சொன்னா..அப்பாவின் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அவன் கிடக்குறான்.....பைய..... என்றார்கள்..அப்பாவிற்கு சிவாஜியைப் பிடிக்கும்..காங்கிரஸைப் பிடிக்கும். ஆனால் காமராஜைப் பிடிக்காததின் காரணம் பின்னால் கல்லூரிக்காலத்தில் தான் தெரிந்தது


1971 பொதுத்தேர்தல்..சிவாஜி,கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லொரும் ஸ்தாபனக் காங்கிரஸை ஆதரித்தார்கள்.நானும் தான்..கலைஞர் இந்திரா காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்..
அந்த்த் தேர்தலில் தான் நான் காமராஜைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டேன்..

கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்

மதிய உணவு கொண்டு வந்த மகாத்மா..

இரண்டு முறை பாரதத்தை வழி நடத்த தகுந்த தலைமையை தேர்ந்தெடுத்தவர்.நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும்.

அரசு அதிகாரத்தை குடும்ப நலனுக்கு தவறாகப் பயன்படுத்தாதவர்.

திருச்சி பாரத மிகுமின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி டாங்க் உற்பத்தி தொழிற்சாலை.,கிண்டி, அம்பத்தூர் தொழில் பேட்டைகள், தமிழகத்தில் தொழிற்சாலைகள்..நீர் நிலைகள் என தமிழகம் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்த்தும் அவர் ஆட்சியில் தான். மொத்தம் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி இருக்கிறார்.


1971 தேர்தலில் அவரைப்பற்றி எவ்வளவு அவதூறுகள்..இன்று நினைத்துப் பார்க்கும் போது, இன்றைய நிலையில் கனவிலும் நினைக்க முடியாத,ஒரு எளிமையான வாழ்வை வாழந்தவர் காமராஜர், அவரைப் பற்றியா இத்த்னை அவதூறுகள்!!!

அந்த உத்தமத் தலைவனுக்கு எமனாக வந்தது தான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் “எமெர்ஜென்ஸி’ -நெருக்கடி நிலைக்காலம். நாடு முழுதும் தன்னையொத்த தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் வாட, கலைஞர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரே காரணத்தால், கைதாகாமல் வெளியில் இருந்தாலும், ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலைதான் அவரது அகால மரணத்திற்கு முழு முதல் காரணம்.

1976 அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளில் தென்னகத்து காந்தி நம்மை விட்டுப் பிரிந்தார்..

அய்யா நீங்கள் என்னிடம் நேரில் சொன்ன மாதிரி நான் நல்லா படிச்சுட்டேன்.. உங்களால் தான் எங்களால் படிக்க முடிந்தது. இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு தந்தை பெரியாரும் நீங்களும் தான் காரணம் என்ற நன்றியுடன் உங்களை வணங்குகிறேன்

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

சனி, 10 ஜூலை, 2010

1984/2009—சாதி அழிப்புக்கான அறிகுறி

1984

”என்னடா புள்ளை வளத்துருக்கா சிவாமி? ரவுடிப்புள்ளையை பெத்துப் போட்டுருக்கா? இவங்க கண்னுல படக்கூடாதுண்ணுதான் , சிவகங்கையில் இருந்து அம்புட்டு தூரம் தள்ளி சிதம்பரத்துல போய் படிக்க வைச்சா, அங்க போய் என் பேத்தியைப் பாத்துருக்கானே இந்த வெற்றிப் பய... இஞ்சினீயருக்கு படிச்சான்னு சொன்னாங்க..இதைத் தான் படிச்சு கிழிச்சான் போல.. பொம்பளைபுள்ளை எங்கே இருக்குன்னு?, தூத்தேறி. இப்படி புள்ளை வளக்கிறதுக்கு, அவனை கொன்னு போட்டுருக்கலாம்..”

என் அம்மாவைப் பெற்ற அப்பா, அம்மா வழித்தாத்தா, 1984-ல் என்னை, என் அம்மாவை நோக்கி வீசிய குற்றச்சாட்டுக்கள்..

நான் ஒன்றும் பெரிய குற்றம் பண்ணவுமில்லை.. என் முக லட்சணம் கூட ரவுடி சாயலில் இல்லை..ஆரம்பத்தில் இருந்து முதல் மாணவனாக தேறியே வந்ததால், என்னைப் பிடித்த பள்ளி ஆசிரியர்கள், என்னைப் பார்த்து முகத்துலே அறிவுக்களை சொட்டுதே என்று சொல்லி அதை என் அம்மா இன்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்..


நான் செய்தது இது தான்.. புதிதாக பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பொழுது. Scientific Instruments என்று சொல்லப்படும் ஆராய்ச்சிக்கான கருவிகள் விற்பதும் அதனை Install and Maintenance பண்ணுவதும் தான் என் வேலை. இன்றுவரை அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறேன். அதன் காரணமாக நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் போய் அங்குள்ள வேதியியல் மற்றும் பௌதிகப் பேராசிரியர்களைச் சந்தித்து என் பணி முடித்தபின், அப்பொழுது அங்கு என்னுடன் பள்ளியில் படித்த ஒரு தோழர், அங்கு படிப்பதை அறிந்து அவரைப் பார்க்க சென்றேன். அவர் சொன்னார்.. என் மாமா மகள் ( என் அம்மாவின் அண்ணன் மகள்) , எனக்காக பிறந்த பொண்ணு என்று சின்ன வயசில் சொல்லி விளையாடிய பொண்ணு..இப்ப குடும்பத் தகராறில் மூன்று ஆண்டுகளாக பெரியவர்கள் பேசிக்கொள்வதில்லை. அங்கு படிப்பதாக சொல்லி அதைப்பாக்காமயா போறேன்னு ஆசையை கிளப்பிவிட்டான். ஆசை யாரை விட்டது.. ( முதல் தவறு) வயசு அப்படி..படித்து முடித்து நல்ல வேலை கூட..என் மாமன் மகள் முதலாம் ஆண்டு M.Sc (Phy) படித்துக் கொண்டு இருப்பதாக சொல்லி அவர்கள் படிக்கும் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றான்.. அங்கு போய் என்னை வெளியில் நிறுத்திவிட்டு இரண்டு பெண்களை அழைத்து வந்தான்.அவர்கள் ரெண்டு பேரும் என் மாமன் மகள் பேரைச் சொல்லி “அவ உடம்புக்கு முடியாம ஊருக்கு போயிருக்கு, என்னமும் சொல்லனுமா?”எனக் கேட்டார்கள். நானும் ஒண்னும் இல்லை. வந்த இடத்தில் பாக்கலாம்னு வந்தேன்..வந்ததா சொல்லுங்கள் என்று சொல்லி என் பெயரைக் கேட்க என் business card ஐ கொடுத்து வந்தேன் ( இது இரண்டாவது தவறு) அவ்வளவுதான் நடந்தது.. இதற்கு வந்த எதிர்வினை தான்.. மேலே குறிப்பிட்ட வார்த்தைகள்.


பெண்களுடன் பேசுவது என்றாலே கூச்சப்படும் எனக்கு என் மாமன் மகளைப் பார்க்கப் போனது பெருத்த அவமானத்தைக் கொண்டு வந்து சேர்த்த்து. அதிலும் என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் மீது வருத்தம் தான் அவர்களிடம் நான் சொல்லாமல் போனது. அப்ப எங்கள் இல்லத்தில் தொலைபேசி கிடையாது.கடிதம் போட்டு அனுமதி வாங்கிச் செல்கிற அளவுக்கு திட்டமிட்டு செய்ததும் கிடையாது. என் நண்பன் அங்கு வைச்சு சொன்னதால் அப்ப ஏற்பட்ட ஆசை ..பார்க்கலாமேன்னு அவ்வளவுதான்..

இந்த வயசிலேயும் பெண்களுடன் பேசுவது என்றால்..கொஞ்சம் பயம் தான்.

நமக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம்!!!!

2009.

நானும் என் மனைவி இரண்டு பையன்களுடனும் , மதுரையில் என் வீட்டில் பொங்கல் கொண்டாடிவிட்டு பொஙகல் அன்றே என் மாமனார் வீட்டிற்கு ராமநாதபுரம் சென்றோம். நானும் என் மனைவி இரண்டாவது மகன் என்னுடன் சவூதியில் இருக்க, பெரியவன் என் மாமனார் இல்லத்தில் தங்கித்தான் 9, 10 வகுப்புகள் படித்தான்.. என் மகனுக்கு இரண்டு மாமன் மகள்கள்.அந்த இரண்டு பெண்களில் இளையது என் மகன் வயது. ஆகவே இரண்டு பேருமே ஒன்றாகத்தான் படித்தார்கள். இரண்டு பேருமே நல்ல மதிபெண்கள் வாங்கி என் பையன் பொறியியலும், அந்தப் பெண் மருத்துவமும் படிக்கிறார்கள். நாங்கள் ஊர் போய்ச் சேருமுன்னர், என் மகனை வரவேற்க என் மச்சினன் மகளும் , அவன் வகுப்புத் தோழிகள் நாலைந்து பேர்களும் எங்களுக்காக, மன்னிக்க.. என் பையனுக்காக காத்து கிடந்தார்கள். காரில் இருந்து இறங்கியதுதான் தெரியும்.. அதற்குப் பிறகு என் பையன், அவன் வகுப்புத் தோழிகளும் மாடிக்குச் சென்றவ்ர்கள் தான் , ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு ஒரே சத்தம் தான்.. ஒரே அட்டகாசம் தான்..இவ்வளவிற்கும் என் பையன் பேசுவதே வெளியே கேட்காத அளவில் மெல்லத்தான் பேசுவான்..அன்று நான் பார்த்த்து புதிய திலீபனை. ஒரெ கிண்டலும் கேலியும் தான்..

நானும் என் மனைவியும் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவும் சாப்பிட அழைக்கவும் மாடிக்குச் சென்று பார்த்தால் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்து கொண்டு ஏதேதோ சினிமா பாட்டு என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்..அவ்வளவு பேர் முகங்களிலும் மலர்ச்சி குடிகொண்டிருந்த்து..சந்தோஷ அலைகள்.

எனக்கு மிகவும் சந்தோசமான தருணங்கள் அவைகள்..


அங்கு நான் பார்த்த பெண்களில் கிறிஸ்துவம், இஸ்லாம் பெண்களும் இருந்தார்கள். 5 பேர்கள் ,அனைவரும் எந்த மதம் எந்த சாதின்னு என் மகனுக்கு தெரியாது..

இந்த மாதிரி ஆண் பெண் உறவுக்கான சூழல் தமிழகத்தில் அமைந்துள்ளது ஆரோக்கியமானதாக எனக்குப் பட்டது

கடந்த இரண்டு வருடங்களில் என் குடும்பத்து உறவுகளில் நடந்த திருமணங்கள் அனைத்துமே காதல் திருமணம் தான்..அதுவும் சாதிவிட்டு சாதி மாறித்தான்..

ஆகவே நாம் பெரியவர்கள் சாதியை ஒழிப்பது பற்றி கவலைப் பட்டுக் கொண்டு இருக்க இளைய தலைமுறை , எதைப்பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை..

காதல் திருமணங்களை ஊக்குவித்தாலே, சாதி கொஞ்சம் கொஞ்சமாக மறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்.

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

புதன், 23 ஜூன், 2010

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் 24

”என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடெலென்று நீ கேட்கிறாய்
நான் உன் பேரை தினம் பாடும் குயில்லல்வா
என் பாடல் நீ தந்த மொழியல்லவா..”

கல்லூரிக் காலங்களில் கவியரங்களில் கலந்து கொள்ளும் போது நான் குரு நாதராக வணங்கும் கவியரசை வணங்கி ஆரம்பிக்க அவருடைய வரிகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்..இன்றும் நண்பர்கள் வட்டத்தில் என்னை கவியரசின் பெயரை தினம் பாடும் குயிலாகத்தான் பார்ப்பார்கள்.

4வது படிக்கும் போது கேட்ட பாடல்...”போனால் போகட்டும் போடா” .என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பாட்டின் அர்த்தம் தெரிந்து கேட்ட பாடல்..எழுதியது கண்ணதாசன். அப்பாவிடம் அது பற்றி பேசியதற்கு அப்பா சொன்னது.”கண்ணதாசன் எவ்வளவோ எழுதி இருக்கிறார்.“ என்று சொல்லி
“பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் –அவனைப்
புரிந்து கொண்டால் அவன் பெயர் இறைவன்”

என இன்னுமொரு பாடலை அறிமுகப்படுத்த..கண்ணதாசனோடு எனக்கு மிகச்சிறிய வயதிலே பரிச்சியம் ஏற்பட்டுவிட்டது .அந்தக் காலத்தில் தமிழ் திரை உலகின் முடிசூடா மன்ன்ன் கவியரசர் தான்.. அவருடைய பாடல்கள் தான்.எங்கு திரும்பினாலும்..

பருவ வயதில் கண்ணதாசனுடைய பாடல்களுக்கு ஒரு தனி அர்த்தம் கிடைக்கும்.

“ நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”

“உலகமெங்கும் ஒரே மொழி..உள்ளம் பேசும் காதல் மொழி..”

உந்தன் கண்ணிலும் முகத்திலும் மோதி வரும் இளங்காற்றீன் விலையே கோடி பெரும்’

”இன்பம் என்பது இருவரின் உரிமை.யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை”

” இளமை கொலுவிருக்கும்,இனிமை சுவை இருக்கும் இயற்கை மனமிருக்கும் பருவத்திலே..பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே”

“ காலங்களில் அவள் வசந்தம்”

“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஒருயிரே”

“ யார் என்ன சொன்னாலும் செல்லாது அணை போட்டு தடுத்தாளும் நில்லாது”

கண்ணதாசனுடைய பாடல்கள் தமிழகத்தில் ஒலிக்காத நேரமில்லை.. ஒரு தமிழனின் வாழ்வில் , குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை அவருடயை பாடல்கள் தொடர்ந்து வரும்.எல்லா காலங்களுக்கும் எல்லா நேரங்களுக்கும் அவருடைய பாடல்கள் மிகப் பொருத்தமாக வரும்.. தமிழனுடைய வாழ்வில் வாழ்வியல் முறையில் ஒன்றிணைந்து இருந்த ஒரு கவியுள்ளத்திற்கு மட்டுமே இந்தச் சாதனை சாத்தியமாருக்க முடியும்..

கண்ணதாசனைப் பற்றி அறிந்தவர்களில் பல பேருக்கு கூட அவருடைய திரை இசைப் பாடல்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே உண்டு.. அவருடைய தனிக்கவிதைகள் 7 தொகுதிகளாக வந்துள்ளன..

அதில் ஒன்று..

பிறப்பின் வருவது யாதெனெக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்.......
இறப்பின் வருவது யாதெனக் கேட்டென் இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனெக் கேட்டென் மண்ந்து பாரென இறைவன் பணித்தான்....
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்...

இப்படி ஒன்று ஒன்றாகச் சொல்லிவரும் கவிஞர் கடைசி வரிகளில் தான் கவியரசர் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்..

அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டென்
ஆண்டவன் சற்று அருகில் நெருங்கி அனுபவம் என்பதே நான் தான் என்றான்”


மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தனது வலைத்தளத்தில் கண்ணதாசனைப் பற்றி தொடர் கட்டுரை எழுதி வருகிறார்கள். இதைப் படிக்கும் இன்றைய இளைஞர்கள் கண்ணதாசனின் பன்முகத்தன்மை பற்றி அறிந்து கொள்ள அவசியம் அவர் தளத்திற்கு சென்று படிக்கவும் http://marabinmaindanmuthiah.bolgspot.com

என்னுடைய பள்ளி நோட்டுப்புத்தகங்களில் பின்வரும் வரிகளை எழுதி வைத்து இருப்பேன்.

”உள்ளதைச் சொல்வேன்..சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது..”

இது கல்லூரிக்காலங்களிலும் தொடர்ந்தது..இப்ப அப்படி எங்கும் எழுதி வைக்கவில்லை.. ஆனால் வாழ்க்கையையே அப்படித்தான் அமைத்துக் கொண்டு வாழந்து வருகிறேன் என்று நினைக்கிறேன்..கண்ணதாசன் மாதிரியே..

இன்று கண்ணதாசனின் பிறந்த நாள்.. அவர் நினைவாக இந்த இடுகை.

அவர் பற்றிச் சொல்வதற்கு ரொம்ப உண்டு.பின்னாளில் எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

செவ்வாய், 22 ஜூன், 2010

செம்மொழியான தமிழ்மொழியாம்.....

செம்மொழியான தமிழ் மொழியாம்.. என்ற செம்மொழி தமிழ் மாநாட்டிற்கான மைய நோக்க விளக்கப் பாடல் அனைவரும் கேட்டும் பார்த்தும் இருக்கலாம். தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்..

பிறப்பொக்கும் என்ற அய்யன் வள்ளுவனின் முதல் வரியுடன் தொடங்கும் இப்பாடலை கலைஞர் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, கெளதம் வாசுதேவ் மேனன் அதற்கு காட்சி வடிவம் கொடுத்து வெளிவந்துள்ளது..

ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்குள்ள பணிகளுக்கிடையில் எழுதுவது என்பதே பெரிய செயல். அதிலும் அகவை 86..இந்த வயதிலும் தொடர்ந்து படிப்பதும் எழுதுவதன்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சாதனைக்குரிய செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது..

இந்தப்பாடல் கலைஞரால் எழுதப்பட்டுள்ளது. பாடல் வெளியீட்டின் போது கலைஞர் குறிப்பிட்ட்து போல், தமிழின் பெருமை, சங்ககாலம்,இடைக்காலம்., என எல்லாவற்றையும் தொட்டு இணைத்து எழுதுவதென்பது கொஞ்சம் சிரம்மான பணிதான் .,அப்பணியை அகவை 86-லும் அழகாக செய்துள்ளார். பிறப்பொக்கும் என்ற வள்ளுவனின் வார்த்தைகளுடன் தொடங்கும் இப்பாடலில்,பின்னர் கணியனின் பெருமைமிகு “யாதும் ஊரே., யாவரும் கேளிர்..தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரிகளுடன், சிலம்பு, தொல்காப்பியம், வளையாபதி, மேகலை போன்றவற்றிற்கு மரியாதை செய்து ஆதி அந்தமில்லா தமிழ் மொழியை அழகு படுத்தி உள்ளார்.

கலைஞரின் மொழி ஆளுமையையும் அறிவுக்கூர்மையையும் அடி தொழ வணங்குகிறேன்..


ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய அன்புக்குரிய ஏ.ஆர்.ரகுமான் இசை வடிவம் கொடுத்துள்ளார். தமிழ் மொழி உலகளாவிய மொழி என்பதால், ஒரே விதமான இசைவடிவம் கொடுக்காமால், தமிழ் நாட்டுபுறம், தமிழ் இசை, கர்நாடக இசை,மேற்கத்திய இசை என பல தளங்களிலும் விரிந்து இப்பாடலுக்கு ஒரு புதிய வடிவம் அமைத்துக் கொடுத்துள்ள ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.. மூன்று தலைமுறையையும் பாட வைக்க முடிவெடுத்தோம் என்று மேடையில் சொன்னார் ரகுமான்..எங்களின் முதல் மரியாதைக்குரிய அய்யா டி.எம்.எஸ் அவர்களின் குரலோடு தொடங்கும் இப்பாடல் அடுத்த வரிகளிலேயே மூன்றாம் தலைமுறைக்கு நகர்ந்து விடுகிறது, இதில் இரண்டாம் தலைமுறைப் பாடகர்களான எஸ்.பி.பி, ஏசுதாஸ், எஸ்.ஜானகி சித்ரா, ஸ்வர்ணலதா, மனோ, ம்லேஷியா என எவரையுமே காணவில்லை.. ஒரு ஐந்து நிமிடப்பாடலில் எல்லோரையும் பாடவைக்க முடியாது என்பது நன்கு புரிகிறது..ஆனால் இரண்டாம் தலைமுறைப் பாடகர்கள் யாருமே இல்லை என்ற சின்ன ஆதங்கம்..வேறு ஒன்றுமில்லை.. செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற வரி அடிக்கடி வந்தாலும்.. கடைசியில் “நாக்க முக்க’ சின்னப்பொண்ணு குரலில் வரும் “ தமிம் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்’ என்ற வரிகள் தான் என் காதுகளில் நிரம்பி வழிகிறது...நாட்டுப்புற இசைக்கு பழகிய காதுகள்...

வாழ்த்துக்கள் ரகுமான்..புறநானுற்று வரிகளுக்கு ஒரு நவீனம் கொடுத்ததற்காக.. தமிழ் ஆர்வம் உள்ள இளைஞர்கள் செல்பேசியில் வைத்துக் கொள்ளலாம்..

ஒளிவடிவம் கொடுத்தவர் கெளதம் வாசுதேவ் மேனன். திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலில் ஏராளமான தமிழர்கள் உண்டு. இயக்குநர், எடிட்டர், விளம்பர வடிவமைப்பாளர் என் எல்லாத்துறைகளிலும் என்பது கலைஞருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..அப்படி இருக்கும் போது செம்மொழி தமிழுக்கான பாடலை ஒரு மலையாளியிடம் கொடுத்தது தான் கொஞ்சம் நெருடலைத் தருகிறது..தமிழின் சிறப்பு கெடாமல் ஒரு மலையாளியால் எடுக்க முடியுமா ? என்ற தேர்வில் கெளதம் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழ் எழுத்துக்களை எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைத் தான் காணச் சகிக்க முடியவில்லை.. அந்தக் காட்சி அமைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..மற்றபடி கெளதமிடம் ஒரு செய்முறை நேர்த்தி இருக்கிறது என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும்.. அது நன்கு இப்பாடலில் தெரிகிறது..


கலைஞர். ஏ.ஆர்.ரகுமான், கெளதம் மூவரும் இணைந்து தமிழன்னைக்கு அழகான தமிழ்ப் பாமாலை நெய்து கொடுத்துள்ளார்கள் ., செம்மொழி மாநாடு என்ற காரணத்தை முன்னிறுத்தி..நன்றியும் வாழ்த்துக்களும்..
நாளை கோவையில் தொடங்கும் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

பின் குறிப்பு: classical language என்பதற்கு செவ்வியல் மொழி என்பது தானே சரியான பதம்..செம்மொழி என்பது சரிதானா? தமிழ் படிக்காதவன் தவறு என்றால் மன்னிக்கவும்..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ks.com