வெள்ளி, 16 ஜூலை, 2010

கவிதாயினி தேனம்மை லக்‌ஷ்மணன்

2009 – செப்டம்பர் மாதம் துபாய்க்கு சென்றிருந்தேன்..அங்கு என்னுடன் கூட இருந்த என் அண்ணன் மகன், சித்தப்பா ,முகப்புத்தகம் என்று ஒரு தளம் உள்ளது..அதில் தங்களை இணைத்துக் கொண்டு அதில் துபாயில் எடுத்த புகைப்படங்களைப் போட்டீர்கள் என்றால், எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம் என்று யதேச்சையாகச் சொல்லப்போக, சவூதி வந்தவுடன் முகப்புத்த்கத்தில் இணைத்துக் கொண்டு என் புகைபடங்களை வெளியிட்டேன். அந்தத் தளத்தின் செயல்பாடு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.எல்லாவற்றையும் பற்றி எழுதலாம். எல்லோரையும் சென்றடைய மிக எளிதான வழியாகத் தெரிந்தது.


அப்படி ஒரு நாள் செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பராக அறிமுகனானவர் தான் கவிஞர் தேனம்மை.அவரது வலைத்தளம் (சும்மா) சென்று பார்த்த பொழுது அது சமயம், வரிசையாக பல்வேறு பூக்களின் தலைப்புகளை வைத்து, அந்தப்பூக்களின் தன்மையை, ஒவ்வொரு பூக்களுக்கும் உள்ள அதனதன் சிறப்புத்தன்மையை எடுத்துக் கொண்டு. வாழ்வியல் தத்துவங்களோடு இணைத்து தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார்..ஒரு 30 பூக்களாவது கவிதைகளாகி இருக்கும்.கல்லூரி மாணவப் பருவத்திற்கு அப்புறம் நீண்ட இடைவெளி விட்டு 20 வருடஙக்ளுக்குப் பிறகு எழுதுவதாகவும் , தன் வாழ்வில் இது இரண்டாம் வசந்தம் என்றும் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.. உண்மையிலேயெ அதை நம்ப முடியவில்லை. கவிதைகள் எழுதாமல் இருந்தாலும், ஒரு கவி மனத்துடன் , கவிதை எழுதுவதை ஒரு தியானம் மாதிரி பழகி இருந்தால் மட்டுமே , இப்படி அடைமழை போல் கவிதை வரும் என்பது ஒரு சின்ன எழுத்தாளன் ஆன எனக்கு நன்கு தெரிந்து இருந்த்து. அந்த பூக்களின் தொடர் இடுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்..


மின்னலைப் போல அவ்வப்போது அற்புதமான வரிகளும், கணங்களும் இவர் கவிதைகளில் தென்படும்..சில கவிதைகளில் இந்தமாதிரி அற்புதமான வரிகள் அங்கங்கே காணப்படும்..அதே சமயம், பல கவிதைகள் வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவில்லை என்றால் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசரத்தில் எழுதியவைகளாக, படிப்பவரின் மனதில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல்,வெறும் வரிகளாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளுக்கு அவர் சரியான பங்களிப்பைத் தரவில்லை, அக்கவிதை வேண்டி நிற்கும் வரிகளை தேட நேரம் இல்லாமல் எழுதியதாக இருக்கும்


இன்று அவர் வலைத்தலத்திற்கு இரண்டாம் ஆண்டு தொடக்கம்.. போய்ப்பாருங்கள்.. அவர் வலைத்தள முகவரி http://honeylaksh.blogspot.com


இந்தக் கவிதை நல்லது , இது சரியல்ல என்று சொல்லி உங்கள் அனுபவங்களுக்கு நான் இடையூறாக இருக்க்கூடாது என்பதால், எந்த வரியையும் எடுத்துப்போடவில்லை..எனக்குப் பிடித்த கவிதைகள் சிலவும், வரிகள் பலவும் உண்டு.


இந்த ஒரு வருட காலத்தில் 183 பின்பற்றுபவர்களையும்( ரசிகர்கள்) 220 இடுகைகளும் 18000 விருந்தினர்களும் என – இது ஒரு பெரிய புலிப்பாய்ச்சலாகத் தான் தெரிகிறது.

வலைத்தளப் பதிவர்களில் இக்கவிஞர் மிக முக்கியமானவராக அறியப்பட்டுள்ளார்.

மகளிர் தினத்திற்காக இவர் எழுதிய கவிதை ஒன்று, திரைப்பட இயக்குநர் திரு.செல்வகுமார் அவர்களால் கவனம் பெறப்பட்டு எந்த வித மாற்றங்களும் இன்றி இசை வடிவமாகி உள்ளது, இவரது மொழி ஆளுமைக்கு ஒரு சான்று.அந்தப் பாடலையும் அவர் தளத்தில் காணலாம்

யூத்விகடனில் தொடர்ந்து இவர் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்சமயம் லேடிஸ் ஸ்பெஷல் என்ற இணையப்பத்திரிக்கைக்காகவும் தனது பங்களிப்பைத் தருகிறார் என்று இவர் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன்


முகப்புத்தகத்தில் நேற்று முன் தினம் அவரது பிறந்த நாள் ஒரு கொண்டாட்டமாகவே அவரது நண்பர்களால் கொண்டாடப்பட்டது எனக்கு மேலும் ஆச்சர்யத்தை வழங்குகிறது.. அவரது பன்முக ஆளுமையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கிறேன்.


ஒரு குடும்பத்தலைவியாக இருந்து கொண்டு குடும்ப்ப் பொறுப்புகளுடன், எழுத்துப்பணியையும் ,நண்பர்கள் வட்டத்தையும் போற்றிக் கொண்டு, கற்பனையையும் வற்றவிடாமல் பார்த்துக்கொள்வது எளிதல்ல..அவரது இந்த ஆளுமை வெளிப்பாட்டுக்கு தெய்வீகப் புன்னகையுடன் அன்பையும் ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கும் அவரது அன்புக் கணவருக்கு தேனம்மையின் நண்பர்கள் மற்றும் கவிதை ரசிகர்கள் சார்பாக இந்தப்பதிவின் மூலம் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.


கவிதைகளுக்கு , அது வேண்டி நிற்கும் கால அவகாசத்தையும், அக்கவிதை வேண்டி நிற்கும் அற்புத வரிகளையும், பதியம் போட்டு எடுத்து வழங்கினால் இன்னும் உயரங்களைத் தொட முடியும்..


பிறந்த நாளுக்கும், வலைத்தள இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்
சிகரம் தொட்டு விடும் தூரம் தான்..

ஒரு கவிதைகளின் ரசிகன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

4 கருத்துகள்:

அபி அப்பா சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை!

அபி அப்பா சொன்னது…

ஒரு சைபர் மிஸ்ஸிங்:-))

ராம்ஜி_யாஹூ சொன்னது…

கவிதாயினி, பத்திரிக்கை ஆசிரியர், சிறந்த வலைப்பதிவர், அன்பு குடும்ப தலைவி என்ற பன்முக கலைஞர் தேனம்மை அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்

ஒரு சிறந்த மனித நேயருக்கு நன்றிக் கடன் செலுத்த , பாராட்டு தெரிவிக்க உதவி செய்யும் உங்களின் இந்த பதிவிற்கு நன்றிகள்

தூயவனின் அடிமை சொன்னது…

நேற்று அல்கோபர் சந்திப்பின் பொது,சகோதரியை நீங்கள் அறிமுகம் செய்து வைத்திர்கள். இந்த பதிவின் மூலம் அவர்களை நன்கு அறிமுக படுத்தி உள்ளீர்கள். சகோதரர் ராம்ஜி கூறியது போல்.குடும்ப தலைவி என்ற பன்முக கலைஞர் தேனம்மை அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.

கருத்துரையிடுக