புதன், 18 ஆகஸ்ட், 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்—தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை

உமாசங்கர்..நியாயமான ஒரு அதிகாரி.. அவருக்கு கொடுத்த அனைத்து வேலைகளும் திறம்பட செய்த ஒரு அதிகாரி என்பதை இன்றைய கலைஞர் அரசே அவரை அங்கீகரித்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்ததில் இருந்து அறிந்து கொள்ளலாம்..

இன்று அவரை இடைநீக்கம் செய்தது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.. அதுவும் எந்த ஊழல் புகாரும் இன்றி. 18 வருடங்களாக தெரிந்திராத விஷயத்தை இன்று தான் கண்டுபிடித்ததாக ஒரு கதை..ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா சிக்கிய பொது ஒரு தலித் என்ற கேடயத்தை இதே முதல்வர் பயன்படுத்தியது அனைவருக்கும் தெரியும்..

இன்று நாங்கள் கேட்கிறோம்..தலித் என்பதாலா? அல்ல தன் குடும்ப விஷயங்களில் தலையிட்டதாலா?

தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கண்டனத்தி இங்கு பதிவு செய்கிறேன்.

( இணையத்தின் மூலமாக , வலைப்பதிவர்கள் மூலமாக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ள அய்யா தருமி, நண்பர் வால்பையனுக்கும் நன்றிகள்)

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நடிகர் திலகம்-இன்றைய இளைஞர்களுக்காக

சிவாஜி பற்றி சில வரிகள்

எதை எழுதுவது எதை விடுவது ?
இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக்
காட்டும் உன்னத நடிப்பைச்சொல்வேனா ?.. கவியரசர் கண்ணதாசன்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு வலையுலக நண்பர் நடிகர் திலகம் பற்றி இளைஞர்கள் பார்வை என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தார்..சிவாஜியின் முகபாவனைகள் யதார்த்த்தை காண்பிப்பதில்லை என்று.(?) அந்த நண்பர் மீது குற்றம் சொலவதற்கோ, பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதோ என் நோக்கம் இல்லை.ஏனென்றால் என் மகன்களும் அதே தான் சொல்கிறார்கள்..இது அவருக்காக எழுதியது இல்லை..என் மகன்களைப் போன்று உள்ள எண்ணற்ற இளைஞர்கள் நடிகர் திலகத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் , அனைத்து இளைஞர்களுக்குமான கட்டுரை..


சிவாஜி என்பது ஒரு சரித்திரம்..அதன் சில பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு விமர்சனம் செய்வது. அந்த மகா கலைஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்காது..


இன்றைய இளைஞர்கள் சிவாஜியை , யானையை பார்த்த குருடர்கள் கதையில் வருவது போல பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வது போல் சொல்வது எந்த வகையிலும் ஒரு உயர்ந்த மனிதனுக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியாது.. அவர் யாதர்த்தமான படங்கள் அதிகம் கொடுக்கவில்லை என்றும் உங்களால் ஈடுபாட்டுடன் பார்க்க முடியாத படங்களில் அதிகம் நடித்துள்ளார் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கலாம்.ஏனென்றால் அந்தக் காலம் வேறு..இன்று SMS காலம்..இந்தக் காலக் கண்ணோட்டத்தில் பழைய 50 வருஷங்களுக்கு முன்னர் வந்த படங்களை பார்க்காதீர்கள்..


பராசக்தியில் தொடங்குகிறது அந்த மகா கலைஞனின் திரைப்பிரவேசம். கமல் சொல்வது மாதிரி அன்றே முடிவு செய்து கொள்கிறார்..தாம் வளர வேண்டிய கலைஞன் அல்ல..நாம் செய்யவேண்டியது தனது திறமைகளை வெளிப்படுத்துவது மட்டும் தான் என்று முடிவெடுத்துக் கொண்டு தான் பல்வேறு கதாபாத்திரங்களை தெரிந்தெடுத்து 150 படங்கள் தொடர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் ,வித்தியாசமான உடல்மொழியில் ,திரையில் வாழந்து காட்டியுள்ளார்..


எனக்கு படத்துணுக்குகளை இணைக்கத் தெரியாது..இல்லை என்றால் அதை உங்கள் பார்வைக்கு வைத்து இருப்பேன்.. இருந்தாலும் சில படங்களில் சில காட்சிகளை இங்கு தருகிறேன்..


முதல் படம்..பராசக்தி..எல்லொருக்கும் பராசக்தி என்றால் கோர்ட் சீன் தான் ஞாபகத்திற்கு வரும்..அதே பட்த்தில் தான் “நானே ராஜா,நானே மந்திரி ‘ என்று ஒரு காட்சி பைத்தியமாக பண்ணியிருப்பார்.. மற்றொரு காட்சி..பிளாட்பாரத்தில் தூங்குபவரை எழுப்பி, ஏன் முழிக்கிறாய்? என்ற காவல்காரனின் கேள்விக்கு தூங்குபவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான் என்பார்...இந்தக் காட்சியினைப் பாருங்கள்..முதல் பட நடிகனா? முந்நூறு படங்களில் நடித்தவரா என்ற கேள்வி உங்களுக்கு கண்டிப்பாய் வந்துவிடும்..


காட்சிக்கு தேவையானதை . இயக்குநர் கேட்பதை மட்டும்செய்து கொடுப்பவன் நடிகன்.. எம்.ஆர்.ராதா, சிவாஜி இருவரும் கலைஞர்கள்.. இருவரும் சின்னஞ் சிறிய நகாசு வேலைகள் செய்து அந்த ஒரு சில நொடி வரும் காட்சியினை ஆயுளுக்கும் மறக்க முடியாமல் செய்து விடுவார்கள் ..

அந்த வரிசையில்..

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரக்கச்சேரி நடந்து கொண்டு இருக்கும். வாசித்துக்கொண்டு இருப்பார். அந்த சமயம் அழகான பெண் வந்து கூட்டத்தில் அமரவே பக்கதில் இருக்கும பாலையா அண்ணனைப் பார்த்து ஒரு கண் அடிப்பார் பாருங்கள்.. அங்கே தான் சிவாஜி என்ற கலைஞன் உயிர்போடு இருப்பான்..

இதே படத்தில் ரெயிலில் பயணம் செய்யும் போது பத்மினியும் அவரும் கண்களால் பேசிக் கொள்வது மிகை நடிப்பாகுமா என்ன?


ஆண்டவன் கட்டளையில்..ஆறுமனமே ஆறு என்ற பாடல்.. அறுபடை வீடுக்கும் சென்றுவிட்டு பாட்டு முடியும் போது ஒரு சின்ன பிட் மியுசிக் வரும்..அதுக்கு எந்த நடன இயக்குநரும் நடகர் திலகத்திற்கு தேவை இல்லை..கையில் நிலக்கடலையை வைத்து கொண்டு அதை ஊதிக் கொண்டே ஒரு ஆண்டிப்பண்டார நடை நடப்பதை பாருங்கள்.அப்ப தெரியும் அவன் ஒரு யுகக் கலைஞன் என்று..

உத்தமபுத்திரன் ..யாரடீ நீ மோகினி பாடல் பாருங்கள் இன்றைய சூப்பர் ஸ்டார் நடக்கும் side walk க்கை அன்றே நடந்திருப்பது ஆச்சர்யத்தை தரும்.


பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவி தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டவுடன், தான் ஊனமானவன், தன்னை நன்றாக பார்த்துச் சொல் என்று சொல்லிக் கொண்டு அவர் முன் வலமும் இடமுமாக காலை இழுத்துக் கொண்டு ஒரு ஊன நடையை நடந்து காட்டுவதை அவதானியுங்கள்


பாசமலர்..முதலிரவுக்காட்சி..ஆண் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து வெட்கப்பட்டு, அந்தப் புகைப்படத்தை திருப்பிவைக்கும் போது அவர் முக பாவங்களை கவனியுங்கள்..


நவராத்திரி ..நவரசங்களையும் காட்டும் மாதிரி ஒன்பது வகையான பாத்திரங்கள். ஒவ்வொரு வேடத்திற்கும் வேறு வேறு உடல் மொழி..அதில் ஒன்று தான் மனநோய் மருத்துவர்.. சாவித்திரியை வார்டுக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லிவிட்டு, ஒரு நடை நடந்து கதவு வரை சென்றவர் , திரும்பி வந்து மறந்து போன ஸ்டெத் தை எடுத்து திரும்பிச் செல்வார் ..அந்தக் காட்சியைப் பாருங்கள்..


பாலும் பழமும் படத்தில் மருத்துவருக்குரிய வெள்ளை உடை அணிந்து மருத்துவமனையில் ஒரு நடை நடந்து வருவார் .அதைப் பார்த்து டாக்டராக வேண்டும் என்று டாக்டராக ஆனவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியும்


திருவருட்செல்வரில் அப்பராக..காற்றில் பறக்கும் காவி உடையை கையில் பிடித்துக் கொண்டு அவர் எழுந்து வருவதாக ஒரு காட்சி ..பாருங்கள்..


உயர்ந்த மனிதன் பாருங்கள். அதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத உயர்ந்த மனிதனுக்குரிய வித்தியாசமான உடல் மொழி கையாண்டு இருப்பார்..


ஞானஒளி படத்தில் இடைவேளைக்கு முன்னர் மணி அடிக்கும் ஆண்டனியாகவும், பின்னால் பணக்கார்ராகவும் இரண்டு வேடங்களுக்கும் ஒட்டுமொத்த வித்தியாசம் காண்பித்து இருப்பதை கவனியுங்கள்..


பார்த்தால் பசிதிரூம் படம் பாசமலர் வந்து வெற்றி பெற்றவுடன் அதே குழுவினர் பங்கேற்று வெளிவந்த படம்.. பாசமலர் பார்த்துவிட்டு பா.பசிதீரும் பாருங்கள்.. பாசமலருக்கும் இப்படத்திற்கும் 100 விழுக்காடு வித்தியாசம் காட்டி இருப்பார்.ஒரு காலை விந்தி விந்தி அப்படம் முழுக்க ஒரு புதிய உடல் மொழி காட்டி இருப்பார். படம் பார்க்க நேரம் இல்லை என்றால்..உள்ளம் என்பது ஆமை.என்ற பாடலாவது கேட்டுப் பாருங்கள்...அந்த இமயத்தின் சில கூறுகளை அறிந்து கொள்வீர்கள்

புதியபறவை கிளைமாக்ஸ் காட்சியை தமிழ் திரைப்பட வரலாற்றில் மறைக்க முடியாத காட்சியாக மாற்றி அமைத்து அவரின் அபார நடிப்புத் திறமைதானே..


இது மாதிரி அவர் படங்கள் முழுதும் சின்னச் சின்ன மறக்க முடியாத காலத்தால் அழியா காட்சிகள் இருக்கும்..


இப்படிப் பட்ட அற்புத திறமைக்காகத் தான் அவரை பல்கலைக் கழகம் என்றார்கள்..


மிகை நடிப்பு என்று சொல்லப்பட்ட பாசமலரில் தான் ஜெமினியோடு ஒரு ஆக்ரோசமான விவாத்த்திற்குப் பிறகு வசனமே பேசாமல் ” கெட் அவுட்” என்று சொல்வார்..


எந்தவித முன்னுதாரணங்களும் இல்லாமல், தான் பார்த்த, பழகிய நபர்களின் ஆளுமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, திரைவடிவமாக்கியவர்..


கப்பலோட்டிய தமிழன் பாருங்கள்.. கொஞ்சம் கூட மிகை நடிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் அபார வெற்றிக்குப் பிறகு அதே நிறுவனம், அதே விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்..கட்டபொம்மனில் கர்ஜித்தவர் , அந்த வெற்றியைச் சுவைத்தவர், அதே மாதிரி க.தமிழனிலும் கர்ஜித்திருக்கலாம்.. செய்யவில்லை..அடக்கமான, சாந்தமான முகத்துடன் வ.உ.சியாக வாழ்ந்து காட்டி இருப்பார்.

வாழும் மனிதர்களை மட்டுமா திரையில் காண்பித்தார்?

புராண கதாபாத்திரங்களான சிவன், நக்கீரன், நாரதர்,கர்ணன், பரதன், அரிச்சந்திரா எனப் பல்வேறு பாத்திரங்கள்..


உங்கள் பார்வைக்கு என்னால் நடிகர் திலகம் நடித்த 50 படங்களாவது வரிசைப்படுத்த முடியும்
பாருங்கள்..நடிகர் திலகத்தை திறந்த கண்ணோடு பாருங்கள்.. வேண்டுமென்றால் எனக்கு மின்ன்ஞ்சல் அனுப்பவும். நல்ல படங்கள் அல்ல.. அவர் நடித்த நடிகர்களுக்கான பாடங்கள் வரிசை தருகிறேன்..

இதையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=da89d7irDO0&feature=related

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com