சனி, 31 ஜூலை, 2010

நட்பு

(இன்று நண்பர்கள் தினம்..அதற்காக எழுதப் பட்ட கவிதை)

அண்ணன் தம்பி அக்கா தங்கையென
எண்ணற்ற உறவுகள் ஏராளம் இங்குண்டு
கண்ணில் பயிராகும் காதலும் ஒரு உறவுதான்

அத்தனை உறவுக்கும் ஆதாரம்
சொந்தம் என்றொரு தொடர்புண்டு

ஆதாரம் எதுவுமின்றி ஆகாயம் வரும்
சூரியனைப் போன்றதொரு தூய உறவுண்டு

ஆதாயம் எதுவுமின்றி அதுவாய்ச் சுரக்கும்
தாயின் பாலும்
சேயின் சிரிப்பும்
பூவின் தேனும்
புதுப் புனல் நீரும்

தூய்மையாய் இருப்பது போல்-நட்பும்
வாய்மையாய் இருந்திட்டால் வாழ்க்கை வசமாகும்

அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 30 ஜூலை, 2010

நியூமராலஜி- விவாதத்திற்கான அழைப்பு

“நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகருக்கும் கடவுள் உண்டு
காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு”
கண்ணதாசன்

1992- ல் நான் சவூதி வந்து இறங்கிய வரையில் நான் எந்த ராசி என்ன நட்சத்திரம் என்று கூடத் தெரியாது. முழு நாத்திகன்.இங்கு வந்து நான் பட்ட கஷ்டங்கள்..அது எனக்கு ஒரு மோசமான காலம்..1994-ல் அப்பா முடியாமல் மருத்தவமனையில் சேர்த்திருக்க, மருத்துவர்கள் கை விரிக்க., அண்ணன் தகவல் சொன்னதும் . exit-entry visa formalities எல்லாம் முடித்து விமான தளத்திற்குச் சென்றால்.. இந்தியா செல்லும் எல்லா விமானங்களும் ரத்தான செய்தி.. இந்தியவில் பிளேக் நோய் என்று காரணம் காட்டி எல்லா இந்தியாவுக்கும் சவூதிக்குமான எல்லா விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது அன்று முதல். அன்று இரவு வரை விமான தளத்தில் இருந்துவிட்டு, இன்னொருவர் சொன்ன யோசனையின் படி ,காலையில் ஸ்ரீலங்கா விமானம் பிடித்து , கொழும்பு சென்று அதன் பின் சென்னை அல்லது திருச்சி செல்லலாம் என்று வீட்டுக்கு திரும்பி படுத்தவனை, எழுப்பியது “ அப்பா இறந்துவிட்டார்” என்ற தொலைபேசியே.. அப்பத்தான் என் மனைவி ஜாதகம் பாக்கணுங்க என்று சொல்லி , 1994க்குப் பிறகு தான் என் ராசி , நட்சத்திரம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று வரையில் ஜாதகம் மேல் நம்பிக்கை இல்லை.. ஜாதகம் என்பதே நமக்கு சாதகமாகச் சொல்வது என்ற நம்பிக்கையைத் தவிர அதில் வேறு ஒன்றுமில்லை.


ஆனால் பிறந்த தேதிமேல் எனக்கு ஒரு ஆர்வம் சின்ன வயசுலெயே இருந்து இருக்கிறது..ஜூலை 15- காமராஜ், ஆகஸ்ட 15- சுதந்திர தினம் செப் 15-அண்ணா,அக்டோபர் 15- நான் என்ற மிதப்புலேயே வளர்ந்தவன். பின்னாளில் கண்ணதாசன் 24-ந்தேதி பிறந்தவர் என்றும் நான் 15 – ரெண்டுபேருக்கும் பிறந்த எண் கூட்டுத் தொகை 6 – என்றதுடன் நானும் கண்ணதாசன் மாதிரி வாழ்வேன் ,ஒருகையில் மதுவும் ஒரு கையில் மாதுவுடனும் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.கல்லூரிக் காலங்களில் கவியரங்களில் கலந்து கொண்டதும் இது அதிகமானது.


அதிலிருந்து பிறந்த தேதி மட்டும் நான் கேட்பதுண்டு..


இன்று யதேச்சையாக மண்ணின் மைந்தர் முத்தையாவின் பிறந்த தேதி பார்த்தேன்..ஆகஸ்ட் 1 என்று இருந்தது.பார்த்தவுடன் மனசு குளிர்ந்தது..எனக்கு மிகவும் நெருக்கமானவர் சிவாஜியும் 1 ந்தேதி..2-ந் தேதி பிறந்தவர்கள் தனித்த சிந்தனைக்கு உரியவர்கள் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.. காந்தி, பாரதி, பாரதி தாசன்.2-ந் தேதி.. 5-ந் தேதி பிறந்த வாஜ்பாயும் டாகடர் ராதாகிருஷ்ணனும், நேருவும் சபலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.. 5 ந் தேதியும் கவிஞர்களுக்கு உரியது. 3 ந் தேதி நினைத்ததை சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. கலைஞர், ரஜினி 3-ந் தேதி பிறந்தவர்கள். இந்த பிறந்த எண் விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிரியத்துக்கு உரியதாக இருந்து வந்து உள்ளது.மூட நம்பிக்கை என்று தெரிந்தும்..


ஆனாலும் என் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது , இந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாம் தலையிடவிடாமல், திலீபன் என்ற போராளி பெயரும், கல்லூரிக் கால என் புனைபெயரான உதயநிலவன் என்று இரண்டாவது மகனுக்கும் பெயரிட்டேன்.

நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவலாக உள்ளது

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 23 ஜூலை, 2010

பத்திரிக்கைகளின் நண்பர் எழுத்தாளர் கருணாநிதி????????

22-நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூட தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர் ஆட்சியில் தான் எழுத்தாளர்களுக்கு போதாத காலம் போலத் தெரிகிறது.

மதுரையில் தினபூமி என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கிரானைட் வியாபாத்தில் ஊழல் நடந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக..செய்தி வெளியிட்டால் கைதா.?. மான நஷ்ட வழக்குதானே தொடுப்பார்கள்.. சட்டத்தின் வழி ஆட்சி செய்வதாகச் சொல்லும் தி.மு.க அரசு..தான் இந்தக் கொடுமையைச் செய்துள்ளது..

இன்னொரு கொடுமை... பதிவுலகில் பரபரப்பான விஷயங்களை, முக்கியமாக காவல்துறையின் ஊழல்களை, அடாவடிகளை , துறை சார்ந்த அதிகாரிகளின் மூலமே பெறப்பட்டு வெளியிடப்பட்டிருக்குமோ என்று நம்பிக்கையை தோற்றுவிக்கும் தொடர் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டு இருந்த சவுக்கு வலைத்தளத்தின் ‘சவுக்கு” சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.. கொடுமை என்னவென்றால் கைது செய்யப்பட்ட்து இந்தக் கட்டுரைக்காக அல்ல.. ஏதோ பொய்க்குற்றம் சுமத்தி ஜாமினீல் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டுள்ளார்கள்.. கஞ்சா கேஸ் புகழ் ஜெயல்லிதா ஆட்சிக்கும் , பொய்க் கேஸ் புகழ் தி.மு.க ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?


காமராஜர் அன்று சொன்னது.. ”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”

ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னது ..”விநாச காலே விபரீத புத்தி”

பதிவர் சங்கர் கைதுக்கு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்..


அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வெள்ளி, 16 ஜூலை, 2010

கவிதாயினி தேனம்மை லக்‌ஷ்மணன்

2009 – செப்டம்பர் மாதம் துபாய்க்கு சென்றிருந்தேன்..அங்கு என்னுடன் கூட இருந்த என் அண்ணன் மகன், சித்தப்பா ,முகப்புத்தகம் என்று ஒரு தளம் உள்ளது..அதில் தங்களை இணைத்துக் கொண்டு அதில் துபாயில் எடுத்த புகைப்படங்களைப் போட்டீர்கள் என்றால், எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம் என்று யதேச்சையாகச் சொல்லப்போக, சவூதி வந்தவுடன் முகப்புத்த்கத்தில் இணைத்துக் கொண்டு என் புகைபடங்களை வெளியிட்டேன். அந்தத் தளத்தின் செயல்பாடு எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.எல்லாவற்றையும் பற்றி எழுதலாம். எல்லோரையும் சென்றடைய மிக எளிதான வழியாகத் தெரிந்தது.


அப்படி ஒரு நாள் செப்டம்பர் கடைசி வாரத்தில் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பராக அறிமுகனானவர் தான் கவிஞர் தேனம்மை.அவரது வலைத்தளம் (சும்மா) சென்று பார்த்த பொழுது அது சமயம், வரிசையாக பல்வேறு பூக்களின் தலைப்புகளை வைத்து, அந்தப்பூக்களின் தன்மையை, ஒவ்வொரு பூக்களுக்கும் உள்ள அதனதன் சிறப்புத்தன்மையை எடுத்துக் கொண்டு. வாழ்வியல் தத்துவங்களோடு இணைத்து தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார்..ஒரு 30 பூக்களாவது கவிதைகளாகி இருக்கும்.கல்லூரி மாணவப் பருவத்திற்கு அப்புறம் நீண்ட இடைவெளி விட்டு 20 வருடஙக்ளுக்குப் பிறகு எழுதுவதாகவும் , தன் வாழ்வில் இது இரண்டாம் வசந்தம் என்றும் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.. உண்மையிலேயெ அதை நம்ப முடியவில்லை. கவிதைகள் எழுதாமல் இருந்தாலும், ஒரு கவி மனத்துடன் , கவிதை எழுதுவதை ஒரு தியானம் மாதிரி பழகி இருந்தால் மட்டுமே , இப்படி அடைமழை போல் கவிதை வரும் என்பது ஒரு சின்ன எழுத்தாளன் ஆன எனக்கு நன்கு தெரிந்து இருந்த்து. அந்த பூக்களின் தொடர் இடுகைக்குப் பிறகு பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்..


மின்னலைப் போல அவ்வப்போது அற்புதமான வரிகளும், கணங்களும் இவர் கவிதைகளில் தென்படும்..சில கவிதைகளில் இந்தமாதிரி அற்புதமான வரிகள் அங்கங்கே காணப்படும்..அதே சமயம், பல கவிதைகள் வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவில்லை என்றால் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசரத்தில் எழுதியவைகளாக, படிப்பவரின் மனதில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல்,வெறும் வரிகளாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளுக்கு அவர் சரியான பங்களிப்பைத் தரவில்லை, அக்கவிதை வேண்டி நிற்கும் வரிகளை தேட நேரம் இல்லாமல் எழுதியதாக இருக்கும்


இன்று அவர் வலைத்தலத்திற்கு இரண்டாம் ஆண்டு தொடக்கம்.. போய்ப்பாருங்கள்.. அவர் வலைத்தள முகவரி http://honeylaksh.blogspot.com


இந்தக் கவிதை நல்லது , இது சரியல்ல என்று சொல்லி உங்கள் அனுபவங்களுக்கு நான் இடையூறாக இருக்க்கூடாது என்பதால், எந்த வரியையும் எடுத்துப்போடவில்லை..எனக்குப் பிடித்த கவிதைகள் சிலவும், வரிகள் பலவும் உண்டு.


இந்த ஒரு வருட காலத்தில் 183 பின்பற்றுபவர்களையும்( ரசிகர்கள்) 220 இடுகைகளும் 18000 விருந்தினர்களும் என – இது ஒரு பெரிய புலிப்பாய்ச்சலாகத் தான் தெரிகிறது.

வலைத்தளப் பதிவர்களில் இக்கவிஞர் மிக முக்கியமானவராக அறியப்பட்டுள்ளார்.

மகளிர் தினத்திற்காக இவர் எழுதிய கவிதை ஒன்று, திரைப்பட இயக்குநர் திரு.செல்வகுமார் அவர்களால் கவனம் பெறப்பட்டு எந்த வித மாற்றங்களும் இன்றி இசை வடிவமாகி உள்ளது, இவரது மொழி ஆளுமைக்கு ஒரு சான்று.அந்தப் பாடலையும் அவர் தளத்தில் காணலாம்

யூத்விகடனில் தொடர்ந்து இவர் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்சமயம் லேடிஸ் ஸ்பெஷல் என்ற இணையப்பத்திரிக்கைக்காகவும் தனது பங்களிப்பைத் தருகிறார் என்று இவர் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன்


முகப்புத்தகத்தில் நேற்று முன் தினம் அவரது பிறந்த நாள் ஒரு கொண்டாட்டமாகவே அவரது நண்பர்களால் கொண்டாடப்பட்டது எனக்கு மேலும் ஆச்சர்யத்தை வழங்குகிறது.. அவரது பன்முக ஆளுமையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கிறேன்.


ஒரு குடும்பத்தலைவியாக இருந்து கொண்டு குடும்ப்ப் பொறுப்புகளுடன், எழுத்துப்பணியையும் ,நண்பர்கள் வட்டத்தையும் போற்றிக் கொண்டு, கற்பனையையும் வற்றவிடாமல் பார்த்துக்கொள்வது எளிதல்ல..அவரது இந்த ஆளுமை வெளிப்பாட்டுக்கு தெய்வீகப் புன்னகையுடன் அன்பையும் ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கும் அவரது அன்புக் கணவருக்கு தேனம்மையின் நண்பர்கள் மற்றும் கவிதை ரசிகர்கள் சார்பாக இந்தப்பதிவின் மூலம் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்.


கவிதைகளுக்கு , அது வேண்டி நிற்கும் கால அவகாசத்தையும், அக்கவிதை வேண்டி நிற்கும் அற்புத வரிகளையும், பதியம் போட்டு எடுத்து வழங்கினால் இன்னும் உயரங்களைத் தொட முடியும்..


பிறந்த நாளுக்கும், வலைத்தள இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்
சிகரம் தொட்டு விடும் தூரம் தான்..

ஒரு கவிதைகளின் ரசிகன்
அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

வியாழன், 15 ஜூலை, 2010

சிவகாமியின் செல்வன்

அரசியல் என்னவென்று தெரியாத காலத்திலேயே எனக்குப் பிடித்த தலைவர் பெருந்தலைவர் காமராஜ் தான்..காரணம் ஒன்றுமில்லை.. எங்க அம்மா பெயரும் சிவகாமி...அதுனாலே பள்ளித் தோழர்கள் எல்லாம் ‘சிவகாமியின் செல்வன்” என்று என்னைக் கிண்டலடித்தே, எனக்கு அவர் மீது ஈடுபாடு வரக் காரணம்..அது தவிர சிவாஜிதான் என் கதாநாயகன். அவருக்கும் இவர் தான் தலைவர்., தலைவரைப் புடிக்க வேறு காரணம் வேண்டுமா என்ன? நான் சொல்வது 1969..நான் ஐந்தாவது படிக்கும் பொழுது இருந்த மயக்கம்.

அப்படிப் பட்ட ஒரு நாளில் தான் அவரை நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி முடித்து சிவகங்கை செட்டி ஊரணியில் தவளைக்கல் எறிந்து விளையாடிவிட்டு அப்ப்டியே மேலூர் ரோடுக்கு வந்தால் ஒரே கூட்டம். கொஞ்ச தூரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் காமராஜ் வந்து இருப்பதாக அந்த முக்கில் உள்ள விடுதியில் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் என் வகுப்புத்தோழர்களும் அவரைப்பார்த்து விடுவதென்று விர்ரென்று விருந்தினர் மாளிகை நோக்கி ஒடினோம். உள்ளே ஒன்றும் அவ்வளவு கூட்டம் இல்லை..எங்களை யாரும் தடுக்கவும் இல்லை..


காமராஜ் புகைபிடித்து யாரும் பார்த்துண்டா எனத்தெரியாது. நான் பார்க்கும் போது அவர் புகை பிடித்துக் கொண்டு இருந்தார். மாளிகை வராந்தாவில் சாய்ந்த இருக்கையில் சாய்ந்து கொண்டு, சுற்றி இருந்தவர்களிடம் பேசிகொண்டு இருந்தார்.. நாங்கள் அங்கு போய் நின்றதும்,பேச்சை நிறுத்தி விட்டு,எங்களை அருகில் வருமாறு அழைத்தார். புத்தகப்பையுடனே அவரிடம் சென்றோம்..எங்களைப் பற்றி, என்ன பெயர் என்று கேட்டுவிட்டு என் பெயர் நல்ல பெயர் என்று சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.. என்ன படிக்குறே என்று ஒவ்வொரு பையன்களையும் கேட்டார்..

“இங்கே எதுக்கு வந்தீங்க..?
”உங்களை பாக்கத்தான்..”
எதுக்கு என்னையப் பாக்கணும்?
”சும்மாதான்..ஆட்டோகிராப் வாங்க ”என் பக்கத்தில் இருந்த கார்த்தி பயப்படாமல் பொய் சொன்னான்..
அப்படியா..எதுல போட? அப்படின்னு சொன்னதும் எங்களுக்கு வந்த குஷி ...சொல்ல முடியாது ..விறுவிறுவென்று எங்கள் புத்தக்ப்பைக்கட்டை தொறந்து ,கையில் கிடைத்த நோட்டை எடுத்துக் கொடுத்தோம்.. எங்கள் எல்லோர் நோட்டிலும் கையெழுத்து போட்டார்..

”இங்கேல்லாம் வரக்கூடாது படிக்கிற புள்ளைக ஒழுங்கா படிக்கணும்..கூட்டம் நாட்டத்துக்கெல்லாம் போகக்கூடாது. ஒழுங்கா வீட்டுக்கு ஓடுங்க..” என்றார்..

வீட்டுக்கு ஆசையாய் ஆசையாய் வந்து சொன்னா..அப்பாவின் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அவன் கிடக்குறான்.....பைய..... என்றார்கள்..அப்பாவிற்கு சிவாஜியைப் பிடிக்கும்..காங்கிரஸைப் பிடிக்கும். ஆனால் காமராஜைப் பிடிக்காததின் காரணம் பின்னால் கல்லூரிக்காலத்தில் தான் தெரிந்தது


1971 பொதுத்தேர்தல்..சிவாஜி,கண்ணதாசன்,ஜெயகாந்தன் எல்லொரும் ஸ்தாபனக் காங்கிரஸை ஆதரித்தார்கள்.நானும் தான்..கலைஞர் இந்திரா காங்கிரஸூடன் சேர்ந்து கொண்டு பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்..
அந்த்த் தேர்தலில் தான் நான் காமராஜைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டேன்..

கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்

மதிய உணவு கொண்டு வந்த மகாத்மா..

இரண்டு முறை பாரதத்தை வழி நடத்த தகுந்த தலைமையை தேர்ந்தெடுத்தவர்.நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும்.

அரசு அதிகாரத்தை குடும்ப நலனுக்கு தவறாகப் பயன்படுத்தாதவர்.

திருச்சி பாரத மிகுமின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி டாங்க் உற்பத்தி தொழிற்சாலை.,கிண்டி, அம்பத்தூர் தொழில் பேட்டைகள், தமிழகத்தில் தொழிற்சாலைகள்..நீர் நிலைகள் என தமிழகம் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்த்தும் அவர் ஆட்சியில் தான். மொத்தம் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி இருக்கிறார்.


1971 தேர்தலில் அவரைப்பற்றி எவ்வளவு அவதூறுகள்..இன்று நினைத்துப் பார்க்கும் போது, இன்றைய நிலையில் கனவிலும் நினைக்க முடியாத,ஒரு எளிமையான வாழ்வை வாழந்தவர் காமராஜர், அவரைப் பற்றியா இத்த்னை அவதூறுகள்!!!

அந்த உத்தமத் தலைவனுக்கு எமனாக வந்தது தான் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் “எமெர்ஜென்ஸி’ -நெருக்கடி நிலைக்காலம். நாடு முழுதும் தன்னையொத்த தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் வாட, கலைஞர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரே காரணத்தால், கைதாகாமல் வெளியில் இருந்தாலும், ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலைதான் அவரது அகால மரணத்திற்கு முழு முதல் காரணம்.

1976 அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளில் தென்னகத்து காந்தி நம்மை விட்டுப் பிரிந்தார்..

அய்யா நீங்கள் என்னிடம் நேரில் சொன்ன மாதிரி நான் நல்லா படிச்சுட்டேன்.. உங்களால் தான் எங்களால் படிக்க முடிந்தது. இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு தந்தை பெரியாரும் நீங்களும் தான் காரணம் என்ற நன்றியுடன் உங்களை வணங்குகிறேன்

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

சனி, 10 ஜூலை, 2010

1984/2009—சாதி அழிப்புக்கான அறிகுறி

1984

”என்னடா புள்ளை வளத்துருக்கா சிவாமி? ரவுடிப்புள்ளையை பெத்துப் போட்டுருக்கா? இவங்க கண்னுல படக்கூடாதுண்ணுதான் , சிவகங்கையில் இருந்து அம்புட்டு தூரம் தள்ளி சிதம்பரத்துல போய் படிக்க வைச்சா, அங்க போய் என் பேத்தியைப் பாத்துருக்கானே இந்த வெற்றிப் பய... இஞ்சினீயருக்கு படிச்சான்னு சொன்னாங்க..இதைத் தான் படிச்சு கிழிச்சான் போல.. பொம்பளைபுள்ளை எங்கே இருக்குன்னு?, தூத்தேறி. இப்படி புள்ளை வளக்கிறதுக்கு, அவனை கொன்னு போட்டுருக்கலாம்..”

என் அம்மாவைப் பெற்ற அப்பா, அம்மா வழித்தாத்தா, 1984-ல் என்னை, என் அம்மாவை நோக்கி வீசிய குற்றச்சாட்டுக்கள்..

நான் ஒன்றும் பெரிய குற்றம் பண்ணவுமில்லை.. என் முக லட்சணம் கூட ரவுடி சாயலில் இல்லை..ஆரம்பத்தில் இருந்து முதல் மாணவனாக தேறியே வந்ததால், என்னைப் பிடித்த பள்ளி ஆசிரியர்கள், என்னைப் பார்த்து முகத்துலே அறிவுக்களை சொட்டுதே என்று சொல்லி அதை என் அம்மா இன்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்..


நான் செய்தது இது தான்.. புதிதாக பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பொழுது. Scientific Instruments என்று சொல்லப்படும் ஆராய்ச்சிக்கான கருவிகள் விற்பதும் அதனை Install and Maintenance பண்ணுவதும் தான் என் வேலை. இன்றுவரை அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறேன். அதன் காரணமாக நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் போய் அங்குள்ள வேதியியல் மற்றும் பௌதிகப் பேராசிரியர்களைச் சந்தித்து என் பணி முடித்தபின், அப்பொழுது அங்கு என்னுடன் பள்ளியில் படித்த ஒரு தோழர், அங்கு படிப்பதை அறிந்து அவரைப் பார்க்க சென்றேன். அவர் சொன்னார்.. என் மாமா மகள் ( என் அம்மாவின் அண்ணன் மகள்) , எனக்காக பிறந்த பொண்ணு என்று சின்ன வயசில் சொல்லி விளையாடிய பொண்ணு..இப்ப குடும்பத் தகராறில் மூன்று ஆண்டுகளாக பெரியவர்கள் பேசிக்கொள்வதில்லை. அங்கு படிப்பதாக சொல்லி அதைப்பாக்காமயா போறேன்னு ஆசையை கிளப்பிவிட்டான். ஆசை யாரை விட்டது.. ( முதல் தவறு) வயசு அப்படி..படித்து முடித்து நல்ல வேலை கூட..என் மாமன் மகள் முதலாம் ஆண்டு M.Sc (Phy) படித்துக் கொண்டு இருப்பதாக சொல்லி அவர்கள் படிக்கும் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றான்.. அங்கு போய் என்னை வெளியில் நிறுத்திவிட்டு இரண்டு பெண்களை அழைத்து வந்தான்.அவர்கள் ரெண்டு பேரும் என் மாமன் மகள் பேரைச் சொல்லி “அவ உடம்புக்கு முடியாம ஊருக்கு போயிருக்கு, என்னமும் சொல்லனுமா?”எனக் கேட்டார்கள். நானும் ஒண்னும் இல்லை. வந்த இடத்தில் பாக்கலாம்னு வந்தேன்..வந்ததா சொல்லுங்கள் என்று சொல்லி என் பெயரைக் கேட்க என் business card ஐ கொடுத்து வந்தேன் ( இது இரண்டாவது தவறு) அவ்வளவுதான் நடந்தது.. இதற்கு வந்த எதிர்வினை தான்.. மேலே குறிப்பிட்ட வார்த்தைகள்.


பெண்களுடன் பேசுவது என்றாலே கூச்சப்படும் எனக்கு என் மாமன் மகளைப் பார்க்கப் போனது பெருத்த அவமானத்தைக் கொண்டு வந்து சேர்த்த்து. அதிலும் என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் என் மீது வருத்தம் தான் அவர்களிடம் நான் சொல்லாமல் போனது. அப்ப எங்கள் இல்லத்தில் தொலைபேசி கிடையாது.கடிதம் போட்டு அனுமதி வாங்கிச் செல்கிற அளவுக்கு திட்டமிட்டு செய்ததும் கிடையாது. என் நண்பன் அங்கு வைச்சு சொன்னதால் அப்ப ஏற்பட்ட ஆசை ..பார்க்கலாமேன்னு அவ்வளவுதான்..

இந்த வயசிலேயும் பெண்களுடன் பேசுவது என்றால்..கொஞ்சம் பயம் தான்.

நமக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம்!!!!

2009.

நானும் என் மனைவி இரண்டு பையன்களுடனும் , மதுரையில் என் வீட்டில் பொங்கல் கொண்டாடிவிட்டு பொஙகல் அன்றே என் மாமனார் வீட்டிற்கு ராமநாதபுரம் சென்றோம். நானும் என் மனைவி இரண்டாவது மகன் என்னுடன் சவூதியில் இருக்க, பெரியவன் என் மாமனார் இல்லத்தில் தங்கித்தான் 9, 10 வகுப்புகள் படித்தான்.. என் மகனுக்கு இரண்டு மாமன் மகள்கள்.அந்த இரண்டு பெண்களில் இளையது என் மகன் வயது. ஆகவே இரண்டு பேருமே ஒன்றாகத்தான் படித்தார்கள். இரண்டு பேருமே நல்ல மதிபெண்கள் வாங்கி என் பையன் பொறியியலும், அந்தப் பெண் மருத்துவமும் படிக்கிறார்கள். நாங்கள் ஊர் போய்ச் சேருமுன்னர், என் மகனை வரவேற்க என் மச்சினன் மகளும் , அவன் வகுப்புத் தோழிகள் நாலைந்து பேர்களும் எங்களுக்காக, மன்னிக்க.. என் பையனுக்காக காத்து கிடந்தார்கள். காரில் இருந்து இறங்கியதுதான் தெரியும்.. அதற்குப் பிறகு என் பையன், அவன் வகுப்புத் தோழிகளும் மாடிக்குச் சென்றவ்ர்கள் தான் , ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு ஒரே சத்தம் தான்.. ஒரே அட்டகாசம் தான்..இவ்வளவிற்கும் என் பையன் பேசுவதே வெளியே கேட்காத அளவில் மெல்லத்தான் பேசுவான்..அன்று நான் பார்த்த்து புதிய திலீபனை. ஒரெ கிண்டலும் கேலியும் தான்..

நானும் என் மனைவியும் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவும் சாப்பிட அழைக்கவும் மாடிக்குச் சென்று பார்த்தால் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்து கொண்டு ஏதேதோ சினிமா பாட்டு என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்..அவ்வளவு பேர் முகங்களிலும் மலர்ச்சி குடிகொண்டிருந்த்து..சந்தோஷ அலைகள்.

எனக்கு மிகவும் சந்தோசமான தருணங்கள் அவைகள்..


அங்கு நான் பார்த்த பெண்களில் கிறிஸ்துவம், இஸ்லாம் பெண்களும் இருந்தார்கள். 5 பேர்கள் ,அனைவரும் எந்த மதம் எந்த சாதின்னு என் மகனுக்கு தெரியாது..

இந்த மாதிரி ஆண் பெண் உறவுக்கான சூழல் தமிழகத்தில் அமைந்துள்ளது ஆரோக்கியமானதாக எனக்குப் பட்டது

கடந்த இரண்டு வருடங்களில் என் குடும்பத்து உறவுகளில் நடந்த திருமணங்கள் அனைத்துமே காதல் திருமணம் தான்..அதுவும் சாதிவிட்டு சாதி மாறித்தான்..

ஆகவே நாம் பெரியவர்கள் சாதியை ஒழிப்பது பற்றி கவலைப் பட்டுக் கொண்டு இருக்க இளைய தலைமுறை , எதைப்பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை..

காதல் திருமணங்களை ஊக்குவித்தாலே, சாதி கொஞ்சம் கொஞ்சமாக மறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன்.

அன்புடன்
அ.வெற்றிவேல்
தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com